தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்று கூறப்பட்டு கடந்த ஏப்ரல் மாதத்தில் அநுராதபுரம் பதவிய காட்டுப்பகுதியில் வைத்து சுட்டுக்கொலைச் செய்யப்பட்ட கோபி என்றழைக்கப்படும் கஜீபனின் மனைவியான கஜீபன் சர்மிளா, நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.
அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சுவிட்ஸர்லாந்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை செல்லவிருந்தார்.
சுவிட்ஸர்லாந்துக்கு செல்வதற்கான விஸாவை அவர் வைத்திருந்தபோதும் அவரது கணவர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதனால் அவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தண்டச்சீட்டு விவகாரம்; துவாரகேஸ்வரன் கைது
06-10-2014
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரரான தி.துவாரகேஸ்வரனை ஞாயிற்றுக்கிழமை(05) இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
துவாரகேஸ்வரனிற்கு சொந்தமான யாழ்-கொழும்பு பஸ் ஒன்று ஏ-9 வீதி வழியாக செல்லாமல் நல்லூர் செம்மணி வழியாக சென்ற போது பொலிஸார் மறித்து சோதனையிட்டுள்ளனர்.
பஸ் வழித்தடம் மாறி வந்த குற்றத்திற்காக பொலிஸார் தண்டச்சீட்டு எழுதிய போது, அங்கு வந்த துவாரகேஸ்வரன் தண்டச்சீட்டை கிழித்து எறிந்ததுடன், பொலிஸாரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனையடுத்து, துவாரகேஸ்வரனை கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.