இரண்டு முன்னாள் ஸ்ரீலங்கா இராணுவத் தளபதிகளுக்கு இடையே சமீபத்தில் இடம்பெற்ற சண்டை – அதை அப்படி யாராவது சொன்னால் – ஓரளவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரியா ஆகியோர் யுத்தத்தின்போது கட்டளைகளை வழங்கியது மற்றும் பொறுப்புக்கள் ஏற்றது தொடர்பான பிரச்சினைகள் அதேபோல சாட்டப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுகள் என்பன பற்றி காரசாரமான வாக்குவாதங்களை பரிமாறிக் கொண்டார்கள்.
சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக 2005 டிம்பர் 6 முதல் 2009 ஜூலை 15 வரை கடமையாற்றினார். அவருக்கு அடுத்ததாக உடனடியாக அந்தப் பதவிக்கு வந்த ஜகத் ஜயசூரியா இராணுவத் தளபதியாக 15 ஜூலை 2009 முதல் 2013 ஜூலை 31 வரை சேவையாற்றினார்.
பொன்சேகா மற்றும் ஜயசூரியா இடையேயான மோதல், இரண்டு முன்னாள் தளபதிகளுக்கு இடையேயான யுத்தம் என்று சிறப்பாக வர்ணிக்கப்படுகிறது.
பிரேசிலுக்கும் மற்றும் ஏனைய ஐந்து தென்னமரிக்க நாடுகளுக்கும் அங்கீகாரம் பெற்ற தூதுவராக இருந்த லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய மீது ஒரு மனித உரிமைகள் அமைப்பு, ஸ்ரீலங்கா ஆயுதப் படைகளுக்கும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (எல்.ரீ.ரீ.ஈ) இடையே நடைபெற்ற யுத்தத்தின் போது தூதுவராக மாறியிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி செய்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்காக அவருக்கு எதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை தொடர்ந்துதான் இந்த திடீர் எழுச்சி ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் ஸ்ரீலங்காவுக்கு திரும்பி வந்த ஜயசூரிய தனக்கு எதிரான அத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்தார்.
நிச்சயமாக இங்கு குறிப்பிட வேண்டியது, யுத்தத்தின்போது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு ஆயுதப்படைகள் பூச்சிய பொதுமக்கள் பாதிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வந்தார்கள் என்பதாகும்.
அத்தகைய நிலைப்பாட்டின் மூலம் தவிர்க்க முடியாதபடி எழும் தீர்மானம் எந்த ஒரு சாதாரண பொதுமகனும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்பதே.
அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ “ஸ்ரீலங்கா படை வீரர்கள் ஒரு கரத்தில் ஆயுதத்தையும் மறு கரத்தில் ஐநா மனித உரிமைகள் சாசனத்தையும் ஏந்தியவாறே அடைபட்டுள்ள பொதுமக்களுக்காக தங்கள் முதுகில் அவர்களுக்கான நிவாரணங்களையும் இதயங்களில் பொங்கிவழியும் கருணையையும் சுமந்து சென்றார்கள்” என்று கூறிச் சாதனை படைத்திருந்தார்.
அப்போது ஆயுதப் படைகளின் அதியுயர் தளபதியாக இருந்த அவரினால் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு சொல்லப்படுவது போல போர்க்குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதை விரிவாகப் பரிந்துரைத்திருந்தது.
இத்தகைய ஒரு பின்னணிக்கு எதிராக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் (ஐ.ரி.ஜே.பி) என்கிற அரச சார்பற்ற நிறுவனம் லத்தீன் அமெரிக்காவில் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை அறிவித்துள்ளது.
இதில் புதிராக இருப்பது என்னவென்றால் இந்த நிறுவனமான ஐ.ரி.ஜே.பி ஸ்ரீலங்கா தூதுவருக்கு எதிராக வழக்குத் தொடருவதற்கு அவருடைய பதவிக் காலத்தின்போது முயற்சிகளை மேற்கொள்ளாமல் அவரது பதவியின் இறுதிக் காலம்வரை ஏன் காத்திருந்தது என்பதுதான்.
ஐ.ரி.ஜே.பி இதற்கு முன்னரும் வவுனியாவில் உள்ள ஜோசப் முகாமில் ஸ்ரீலங்கா ஆயுதப் படைகளினால் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது என்ற அறிக்கையை பிரசுரித்து இதுபோன்ற குற்றச்சாட்டை எழுப்பியிருந்தது.இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வன்னிப் பிராந்தியத தளபதியாக கடமையாற்றிய ஜகத் ஜயசூரிய ஜோசப் முகாம் என குறிப்பிடப்படும் முகாமினையே தனது தளமாகக் கொண்டிருந்தார்
Joint Services Special Operations Command (JOSSOP) கூட்டுச் சேவைகளின் விசேட செயற்பாட்டு கட்டளையகம் (ஜே.ஓ.எஸ்.எஸ்.ஓ.பி)
ஸ்ரீலங்காவின் வட பகுதியில் உள்ளவர்கள் அதேபோல சர்வதேச அமைப்புகள் என்பன வவுனியாவில் உள்ள பிரதான பாதுகாப்பு படைகள் முகாமை ஜோசப் முகாம் என அழைத்தாலும் உண்மையில் அந்த முகாமின் பெயர் ஜோசப் என்பதல்ல.
உண்மையில் அது கூட்டுச் சேவைகளின் விசேட செயற்பாட்டு கட்டளையகம் என்பதைக்குறிக்கும் “தழளளழி”(ஜேஓஎஸ்எஸ்ஓபி) பெயராகும்.
ஜே.ஆர் ஜெயவர்தனா ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாகவும் மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தபோது இந்த கூட்டுச் சேவைகளின் விசேட செயற்பாட்டு கட்டளையகம் (JOSSOP) மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் பயங்கரவாத விரோத செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்டது.
வவுனியா முகாம் வீடுகள் மற்றும் ஜே.ஓ.எஸ்.எஸ்.ஓ.பி தலைமையகம் என்பன ஜேஓஎஸ்எஸ்ஓபி முகாம் என அழைக்கப்பட்டது.
படிப்படியாக மக்கள் அந்த முகாமை அதே தொனியில் வரும் ஜோசப் முகாம் என அழைக்க ஆரம்பித்தார்கள்.சில வருடங்களின் பின்னர் இந்த கூட்டுச் சேவைகளின் செயற்பாட்டுக் கட்டளையகம் கலைக்கப்பட்டது, ஆனால் ஜோசப் முகாம் வன்னியை அடித்தளமாகக் கொண்ட பாதுகாப்பு படைகளின் தலைமை முகாம் ஆக நிலைபெற்றிருந்தது.
ஐ.ரி.ஜே.பி நிறுவனம் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்காக சட்ட நடவடிக்கையை ஆரம்பித்ததும் ஜகத் ஜயசூரிய அனைத்துக்கும் தான் உடந்தையாக இருக்கவில்லை என மறுத்துரைத்தார்.
பிரவாகம் போல நடைபெற்ற ஊடக நேர்காணல்களில் தனக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஓய்வுபெற்ற ஜெனரல் நிராகரித்தார்.
தனக்குச் சாதகமாக அவர் வலியுறுத்திய ஒரு ஆதாரம் என்னவென்றால் உண்மையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தான் உண்மையான ஒரு யுத்தத்தில் ஈடுபட்டிருக்கவில்லை என்பதாகும்.
யுத்தத்தில் தனக்கு பங்களிப்பதற்கான ஒரு பாத்திரமும் இல்லாதபோது யுத்தக் குற்றங்களை தன்மீது சுமத்தக் கூடாது என்பதே முன்னாள் இராணுவத் தளபதியின் நிலைப்பாடாகும்.
வன்னி பாதுகாப்பு படைகளின் தளபதியாக 2007 ஆகஸ்ட் 7ல் ஜகத் ஜயசூரியா நியமிக்கப்பட்டார் மற்றும் மே 2009ல் யுத்தம் முடிவடையும் வரை அவர் அந்தப் பதவியில் தொடர்ந்தார். சரத் பொன்சேகாவின் பதவியான இராணுவத் தளபதி பதவியை 2009 ஜூலை 15ல் அடையும் மட்டும் அவர் அந்தப் பதவியில் நீடித்தார்.
இந்தக் கட்டத்தில்தான் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவும் உள்ள சரத் பொன்சேகா தனது பதவியின் முன்னாள் வாரிசுக்கு எதிராகக் களத்தில் இறங்கினார்.
பொன்சேகா ஒரு பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி ஜகத் ஜயசூரியா யுத்தக் குற்றங்கள் புரிந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். பீல்ட் மார்சல் அறிவித்தது, அதற்காக தன்னிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும் ஒரு விசாரணை நடத்தப்பட்டால் ஜயசூரியாவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்க தான் தயாராக உள்ளேன் என்று.
இதன் மூலமாக பொன்சேகா மற்றும் ஜயசூரியா ஆகியோரிடையே சிறிதளவு பகை தோன்றியுள்ளதாக பரவலாக ஒப்புக்கொள்ளப் பட்டது. எனினும் பொன்சேகாவின் எதிர்பாராத தலையீடு முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக ஏற்பட்ட ஒன்றல்ல. தற்காத்துக்கொள்ளும் நோக்கம் ஒன்றும் அதில் இருந்தது.
உண்மையான சண்டையில் தனக்குப் பங்கில்லை என்றும் மற்றும் யுத்தக் களத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் எந்தக் குற்றச்சாட்டுக்கும் தான் பொறுப்பில்லை என்று ஜகத் ஜயசூரியா கோரிக்கை விடுத்தது பொன்சேகா மீதான ஒரு மறைமுகமான தாக்குதல் ஆகும்.
இராணுவத் தளபதி என்கிற வகையில் செயல்பாட்டின் ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டியவர் பொன்சேகா என்பதே அதன் உள்ளர்த்தம்.
இந்த வகையில் சவாலுக்கு உட்படுத்தாமல் ஜயசூரியாவை தொடர அனுமதித்தால் சிறிது காலத்துக்கிடையில் பழி பொன்சேகாவை வந்து சேர்ந்துவிடும்.
இத்தகைய ஒரு சம்பவம் நேரிடக்கூடும் என்பதை எதிர்பார்த்துத்தான் ஒருவேளை பீல்ட் மார்சல் பத்திரிகையாளர் மாநாட்டை அரங்கேற்றியிருக்கலாம், பிரச்சினையை முன்கூட்டியே திசைதிருப்பக்கூடிய ஒரு தாக்குதல் அதில் இணைந்திருந்தது.
பொன்சேகாவினால் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒரு குண்டுத் தாக்குதலுக்கு சமமானதாக இருந்தது. அது பல்வேறு தரப்பினராலும் பல்வேறு காரணங்களுக்காக கைப்பற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
ஜகத் ஜயசூரியா பொன்சேகாவுக்கு பதிலளிக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார். அவர் தான் தளபாடங்களுக்கு மட்டுமே பொறுப்பாக இருந்ததாகவும் ஒருபோதும் போராடும் தளபதியாக இருக்கவில்லை என்கிற காரணத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவித்தது உண்மையில் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்குமானால் அது யுத்த முன்னரங்கில் மட்டுமே இடம்பெற்றிருக்க முடியும் என்று.
அதனால் இராணுவத் தளபதி பொன்சேகாவே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் தான் அல்ல என்று ஜயசேகரா வலியுறுத்தினார். பீல்ட் மார்ஷல் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் லெப். ஜெனரலுக்கு சாதகமான ஒரு கருத்து இருந்தது.
பத்திரிகை அறிக்கைகள் தெரிவிப்பதின்படி, பீல்ட் மார்ஷல் பொன்சேகா தனது ஊடகச் சந்திப்பின்போது தெளிவாகத் தெரிவித்தது, ஜயசூரியா தனது பதவியான வவுனியா பாதுகாப்பு படைத் தளபதி என்கிற பொறுப்பின் மூலம் வன்னி மேற்கு மற்றும் வன்னி கிழக்கு ஆகிய முன்னிலைகளில் நியமிக்கப் பட்டிருந்தபோதும் போராட்ட அமைப்புகளின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு பொறுப்புகளை அவர் ஏற்றிருக்கவில்லை.
என்று. ஜயசூரியா விநியோக வழங்கல்கள் நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் மற்றும் அடிப்படையில் அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசங்களை கண்காணிப்பதுமே அவரது கடமையாக இருந்தது என்றும்,அவரது செயற்பாடுகள் யாழ்ப்பாண பாதுபாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி செயற்படுத்தி வந்த கடமைகளுக்குச் சமமானதாகவே இருந்தது என்றும் பொன்சேகா தெரிவித்தார்.
வன்னி பாதுகாப்பு படைகளின் தளபதி
பொன்சேகா அப்படிக் கூறியது,ஜயசூரியாவை யுத்தக்களத்தில் அவர் செய்த செயற்பாடுகளின் பொறுப்பில் இருந்து அவரை விடுவிக்கும் அர்த்தத்தில் இருந்தாலும் கூட, பீல்ட் மார்ஷல் ஜெயசூரியாவை அவரது வழியில் இருந்து இலகுவில் விலகிச்செல்ல விட்டுவிடத் தயாராக இருக்கவில்லை.
அதனையடுத்து ஊடகங்களிடம் பேசுகையில் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்தது, வவுனியா தலைமையக முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் மீது சில கொடூரமான சம்பவங்கள் நிகழ்த்தப்பட்துக்கான தகவல்கள் தன்னிடம் உள்ளன என்று.
ஆகவே ஜயசூரியா அதற்கான பொறுப்பினை ஏற்கவேண்டும் என்று பொன்சேகா தனது ஊகத்தை வெளியிட்டார். ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் ஐ.ரி,ஜ.பி -ITJP , வன்னி பாதுகாப்பு படைகளின் தளபதியாக ஜகத் ஜயசூரியா பொறுப்பிலிருந்தபோது வவுனியா ஜோசப் முகாமில் சித்திரவதைகள் உட்பட அநேக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றம் சாட்டியிருப்பதால் பொன்சேகாவின் இந்த அறிவிப்பு பல தீவிரமான நெருக்கடிகளை ஜயசூரியாவுக்கு ஏற்படுத்தியது.
கொழும்பு பத்திரிகைக்கு வழங்கிய விரிவான நேர்காணல் ஒன்றில் ஜகத் ஜயசூரியா, முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளுக்கு தான் உத்தரவிட்டதாகவோ அல்லது மேற்பார்வையிட்டதாகவோ சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்.
எனினும் அதற்கான பொறுப்பை மற்றவர்கள் மீது சுமத்தும் விதமாக முன்னாள் இராணுவத் தளபதி “அதே வளாகத்தினுள் நான் எனது தலைமையகத்தை வைத்திருந்ததால் என்மீது பொறுப்பு சுமத்தப்படுகிறது.
ஆனால் அதே வளாகத்தினுள் பல்வேறு மட்டங்களில் உள்ள மற்றைய தளபதிகளின் முகாம்களும் அமைந்திருந்தன. எனவே அந்த முகாம்களுக்குள் ஏதாவது நடந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல” என்று தெரிவித்தார்.
மேலும் முகாம் மீதான தனது பொறுப்பை நிராகரிக்கும் விதமாக அவர் தொடர்ந்து சொன்னது, தனது சக அதிகாரியான வவுனியா படைப்பிரிவு தளபதிதான் முகாம் நிருவாகத்துக்கான ஒட்டுமொத்த பொறுப்பாளியாக இருந்தார் மற்றும் பாதுகாப்பை பராமரிப்பதும் அவரது பொறுப்புத்தான் என்று.
“பாதுகாப்புக்கான பொறுப்பு என்னுடையதல்ல, முழு வளாகமும் என்னுடைய கட்டளையின் கீழ் இருக்கவில்லை” என்று ஜயசூரியா தெரிவித்தார்.
தனக்கு முன்னாலிருந்தவர்களை சிக்கலில் மாட்டிவிடும் விதமாக லெப்.ஜெனரல் ஜயசூரியா, எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான இறுதிப் போரில் சரத் பொன்சேகாவே ஒட்டு மொத்த பொறுப்பையும் ஏற்றிருந்தார் மற்றும் ஏதாவது போர்க் குற்றம் பற்றிக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவரே பொறுப்பு என்பதை அது சுட்டிக்காட்டுகிறது என்று வலியுறுத்திக் கூறினார்.
அதே நேரம ஜயசூரியா, வலியுறுத்திய கருத்து, பொன்சேகா அவர்களே திட்டவட்டமாகச் சொல்லியிருப்பது எனக்கு (ஜயசூரியா) துருப்புகளை செயற்படுத்தும் கட்டளை தரப்படவில்லை என்பதை. அந்த நேர்காணலில் ஜயசூரியா தெரிவித்தது, “ஆயுத மோதலின் இறுதிக் கட்டங்களில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சீனாவுக்குச் சென்றது வன்னி வரைபடம் மற்றும் கைத் தொலைபேசி சகிதமாகவே.
பொன்சேகாவை தொலைபேசியில் தொடர்பு கொள்ளக்கூடியதாக இருந்தது. பொன்சேகாவின் மனைவி வழக்கமாக எங்களிடம் சொல்வது அவரது படுக்கை முழவதையும் வரைபடங்களே ஆக்கிரமித்துள்ளன என்று.
நான் அவருடன் வேலை செய்துள்ளேன் எனவே அவர் அப்படித்தான் செய்வார் என்பது எனக்கும் தெரியும். அவர் வழக்கமாக தொலைபேசியில் அழைத்து அறிக்கைகளைச் சரிபார்ப்பார்.
வன்னியில் துருப்புக்களை செயல்படுத்தும் கட்டளை அதிகாரம் எனக்கு இல்லை என்பதை பொன்சேகா எனக்கு எழுத்துமூலமாக வழங்கியிருந்தார் மற்றும் தளபாட விடயங்களை மட்டுமே நான் கவனித்து வந்துள்ளேன் என்பதை என்னால் திட்டவட்டமாகச் சொல்லமுடியும்.
ஆகவே நான் கட்டளைகள் எதையும் வழங்கவில்லை” என்று. ஜயசூரியா மேலும் தெரிவித்தது “களத்தில் அது போன்றவை ஏதேனும் நடந்திருந்தாலோ அல்லது இல்லாவிட்டாலோ, எனக்கு அது தெரியாது, ஏனென்றால் நான் முன்னரங்க போரில் ஈடுபட்டிருக்கவில்லை. நான் வன்னி முகாமில் இருந்தேன்.உயர் மட்டத்தில் எங்களுக்கு எதுவும் தெரியாது. கீழ் மட்டத்தில் அது நடந்ததா அல்லது இல்லையா என்பதை அவர்கள் அறியக்கூடும்”
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு
இறுதிக்கட்டத்தில் யுத்தம் நடத்தியதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காமல் நிராகரிக்கும் இதே ஜயசூரியா முரண்பாடான முறையில் 2009ல் யுத்தத்துக்குப் பின் வித்தியாசமாகப் பேசியிருந்தார். தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் ஒரு பிரிவினர் நடத்தும் ஊடகங்கள் இந்த ஓரவஞ்சனையான முரண்பாடுகளை உடனடியாகவே சுட்டிக்காட்டத் தவறவில்லை.
2010ல் இராணுவத் தளபதி என்கிற தனது பதவியின்படி ஜயசூரியா சொல்லியிருந்தது, “வடக்கின் முழுப் பிரதேசமும் தந்திரோபாய பிரதேசம் என்கிற வகையில் முழுப் பொறுப்பும் எனது கட்டளையின் கீழ் வந்தது.
கட்டளைகளைச் செயல்பாடுகளில் நான் தீவிரமாக ஈடுபட்டதுடன் இராணுவ தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்படும் கட்டளைகளை திறமையாக நிறைவேற்றினேன்” என்று.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக வாக்குமூலம் வழங்கும்போது ஜயசூரியா சொல்லியிருந்தது “ஒட்டு மொத்தமாக முழுவதையும் நடத்துவதற்கு நானே பொறுப்பாக இருந்தேன் என்று.
இப்போது லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரியா தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக போரின் இறுதிக் கட்டத்தின்போது தனக்கு கட்டளைப் பொறுப்பு இருக்கவில்லை என்று சொல்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் கட்டளை மற்றும் கட்டுப்பாடு என்பதன் கருப்பொருள் இரண்டு எதிரிகளாலும் கேலிக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது.
பீல்;ட் மார்ஷல் மற்றும் லெப்ரினன்ட் ஜெனரல் ஆகியோரிடையே தற்போது இடம்பெறும் பரஸ்பர நாசம் விளைவிக்கும் உட்பகை சாதாரண பார்வையாளர்களுக்கு அதிகம் பொழுதுபோக்கு நிகழ்வாக மாறியுள்ளது.
துரதிருஷ்ட வசமாக இந்த வாய்த் தர்க்கம் ஆயுதப் படையினரை கெட்டவர்களைப் போலச் சித்தரித்துள்ளது. ஸ்ரீலங்காவிலுள்ள நாட்டுப்பற்றாளர்கள் இராணுவத்தினரை யுத்த வீரர்களாக கருதி வருகிறார்கள் துரதிருஷ்டவசமாக இவர்களது செய்கை அவர்களை கலக்கமும் அதிர்ச்சியும் அடைய வைத்துள்ளது.
இரண்டு முன்னாள் இராணுவத் தளபதிகளும் குறும்பு செய்ததற்காக ஆசிரியர் மாணவர்களை விசாரிக்கும்போது ஒருவர்மீது மற்றவர் குற்றம் சாட்டும் பாடசாலை மாணவர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.
பொன்சேகா மற்றும் ஜயசூரியா இடையேயான பகிரங்க மோதல் இன்னும் தொடர்ந்திருக்கும் ஆனால் தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கா அதில் தலையிட்டார்.
இராணுவத் தலைவர் பகிரங்கமாக தெரிவித்தது தனிப்பட்ட விரோதங்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதை அனுமதிக்க முடியாது என்று. ஒரு தனி அதிகாரியைக் கூட வெளிப்படையாக விமர்சித்தால் அது முழு இராணுவத்தின் ஒழுக்கத்தையுமே பாதிக்கும் என்று அவர் சொன்னார்.
சேனநாயக்கா சரத் பொன்சேகாவின் நம்பிக்கை;கு உரியவர் என்கிற எண்ணத்தில் ராஜபக்ஸ ஆட்சியினரால் அவர் பாதிப்புக்கு உள்ளானார், ஆனால் அவர் பொன்சேகாவின் ஆத்திரக் குமுறல்களுக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
தனக்கு அநீதியான உபசரிப்புகள் வழங்கப்பட்ட போதிலும் தான் ஒருபோதும் இராணுவத்தை விமர்சனம் செய்ததில்லை என்பதை சேனநாயக்கா சுட்டிக்காட்டினார். அவர் மேலும் விளக்கியது வெளிநாடு ஒன்றில் ஜகத் ஜயசூரியாவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு மட்டும் மேற்கொள்ளப் பட்டுள்ளது வேறு ஒன்றுமில்லை என்று.
– டி.பி.ஜெயராஜ்-