தமிழீழத்தை தமிழன் மறந்தாலும் சிங்களவன்தான் ஞாபகம் ஊட்டிக்கொண்டிருக்கிறான். தமிழீழத்தை நாம் அடைவது சிங்களவனின் கையில்தான் இருக்கிறது. தமிழர்களுக்கான உரிமையை தரமறுத்தால் தமிழீழம் அமைவதை யாராலும் தடுக்கமுடியாது.
……………………………….
இலங்கை விவகாரத்தில் தலையிட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையா ளர் செயிட் அல் ஹுசைனுக்கு எந்த உரிமையும் இல்லை.
அமெரிக்காவை திருப்திப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையில் அமர்த்தப்பட்டுள்ள இராஜதந்திர விபச்சாரியே அவராவார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
காணமால் ஆக்கப்பட்டோர் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதும், புதிய அரசியல் அமைப்பும் தமிழ் ஈழத்துக்கான முயற்சிகளாகும். சர்வதேச நாடுகளின் சட்டங்களுக்கு அமைய தமிழீழம் உருவாக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றபோதே அவர் இதனை குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
20ஆம் திருத்த சட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த 20 ஆம் திருத்தத்தின் மூலமாக அனைத்து மாகாணசபைகளையும் ஒரே தினத்தில் நடத்துவது என்ற கற்பனைக்கதையை கூறியே நிறைவேற்ற முயற்சித்து வருகின்றனர்.
இதன் மூலமாக தற்போது நடத்தப்பட வேண்டிய மூன்று மாகாணங்களின் தேர்தலை பிற்போடவே அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான முயற்சியே இப்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மக்கள் ஆணைக்கு அமைய தேர்தலை பிற்போட முடியாது. எனினும் இந்த அரசாங்கம் பொய்யான கருத்துக்களை முன்வைத்து தேர்தல்களை பிற்போடவே முயற்சித்து வருகின்றது.
இந்நிலையில் வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி ஆட்சியை கொண்டுவருதல் மற்றும் இலங்கையை மத சார்பற்ற நாடாக மாற்ற அரசாங்கம் இணக்கம் தெரிவித்தால் 20 ஆம் திருத்த சட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அதேபோல் 21 ஆம் திகதி முக்கிய காரணிகளை பாராளுமன்றத்தில் கொண்டுவரவுள்ளனர். காணாமால் போனோர் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பிரதமர் மூலமாக அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை 21 ஆம் திகதி அரசியல் அமைப்பு சபையில் சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமால் ஆக்கப்படுதலில் இருந்து ஆட்களை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்டமூலத்தை பிரதான நாடுகளே தவிர்த்து வரும் நிலையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர யாருக்கும் தெரியாது இந்த உடன்படிக்கையை ஏற்றுகொண்டார்.
இந்த சட்டத்தை தற்போது பாராளுமன்றத்தில் சட்டமாக்க இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. இதில் 11 ஆம் அத்தியாயம் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும்.
காணமால் ஆக்கப்பட்டோர் என்பது சர்வதேச சட்டத்துக்கு அமைய யுத்த குற்றமாகும், அதற்கமைய சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடரப்படும் நிலையில் அதனுடன் தொடர்புள்ள சந்தேக நபரை இலங்கை அரசாங்கம் சர்வதேச தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறியுள்ளது.
ஜகத் ஜயசூரிய மீது இன்றும் சர்வதேச வழக்கு தொடரப்பட்டுள்ளது. இப்போது இந்த சட்டம் அங்கீகரிக்கப்படும் நிலையில் அவரை சர்வதேச நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிவரும். இதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் இந்த சட்டத்தை மாற்றிக்கொள்ள முடியாது.
அதேபோல் சரத் பொன்சேகா தற்போது யுத்த குற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றார். ஜகத் ஜயசூரிய ஒரு யுத்த குற்றவாளி என்பதை அவர் வெளிப்படியாக தெரிவித்து வருகின்றார்.
இந்த கருத்துக்களை வைத்தே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கு தீர்ப்பு வழங்குகின்றார்.
ஏனைய நாடுகளின் விவகாரத்தில் தலையிட செயிட் அல் ஹுசைனுக்கு எந்த உரிமையும் இல்லை. அமெரிக்காவை திருப்திப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையில் அமர்த்தப்பட்டுள்ள இராஜதந்திர விபச்சாரியே அவராவார். எந்த நாட்டையும் அடிபணிய வைக்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை,
இப்போது இவர்களின் விளையாட்டில் இலங்கையை சிக்கவைத்துள்ளனர். அதேபோல் இந்த அரசாங்கம் அவர்களின் தாளத்திற்கு ஆடும் என்பது அவர்களுக்கு தெரியும்.
இந்த அரசாங்கம் நாட்டின் மீது அக்கறையில்லாது மேற்கு நாடுகளுக்கு அமைய செயற்படும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
20 ஆம் திகதி 20 ஆம் திருத்தம் கொண்டவரப்படவுள்ளது, 21 ஆம் திகதி காணமால் ஆக்கபட்டோர் சட்டமூலம் நிறைவேற்றப்படுகின்றது. இவை இரண்டுமே நாட்டை மோசமாக பாதிக்கும் செயற்பாடாகும்.
வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் நீதிமன்றங்களை அமைத்து குற்றவாளிகளை தண்டிக்க இந்த தீர்மானம் கொண்டுவரப்படுகின்றது. இது கடந்த காலத்தை பாதிக்காது என மங்கள சமரவீர தெரிவித்த போதிலும் லத்தின் அமெரிக்க நாடுகளின் மூலம் இப்போது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் கடந்தகால சம்பவங்கள் தானே? அவற்றை அடிப்படையாக வைத்தே குற்றங்கள் சுமத்தப்பட்டு வருகின்றது.
சட்டமூலத்தில் எந்த இடத்திலும் இதனை குறிப்பிடவில்லை. ஆகவே இந்த அரசாங்கம் மிகப்பெரிய தேசத்துரோகம் செய்கின்றது, தமிழ் பிரிவினைவாதிகளுக்கும், சர்வதேச தரப்பினருக்கும் அடிபணிந்து இந்த அரசாங்கம் நாட்டையும் இராணுவத்தையும் காவுகொடுக்க முயற்சித்து வருகின்றது.
அதேபோல் 21 ஆம் திகதி அரசியல் அமைப்புக்கான இடைக்கால அறிக்கை அரசியல் அமைப்பு சபைக்கு கொண்டுவரப்படவுள்ளது. அதன் பின்னர் அமைச்சரவையில் நிறைவேற்றி பாராளுமன்றத்தில் சட்டமாக்க முயற்சிக்கின்றனர்.
இதில் ஐக்கியம் என்பது இல்லை, மாகாணசபை அதிகாரங்கள் பலமடைகின்றது, வடக்கு கிழக்கு இணைக்கும் திட்டமே இரகசியமாக கொண்டுவரப்படுகின்றது.
இதையே சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்களின் மூலமாக உண்மைகள் வெளிவந்துள்ளது. இராணுவத்தை தண்டிக்க, நாட்டை பிரிக்க இவர்கள் எடுக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. பெயருக்கு மட்டுமே ஐக்கியமாக வைத்துகொண்டு நாட்டை சமஷ்டியாக்க இவர்கள் தீர்மானித்துள்ளனர்.
தமிழ் அரசியல் தலைமைகளுக்கும், மேற்கு நாடுகளுக்கும், புலம்பெயர் அமைப்புகளுக்கும் ஏற்ற வகையில் இவர்கள் செயற்பட ஆரம்பித்துள்ளனர்.
இவை தமிழ் ஈழத்துக்கான முயற்சிகள், ஆயுதம் மூலமாக அல்ல, சர்வதேச நாடுகளின் அவர்களின் சட்டங்களுக்கு அமைய இந்த ஈழம் உருவாக்கப்பட்டு வருகின்றது.
ஆகவே இப்போது அரசாங்கத்தில் இருந்து பலர் எம்முடன் இணையவுள்ளனர். ஆனால் 20 ஆம் திருத்தத்திற்கு கை உயர்த்திவிட்டு எம்முடன் இணைய வேண்டாம்.
அவ்வாறு வருபவர்களை ஒருபோதும் இணைத்துக்கொள்ள முடியாது. அந்த தேசத்துரோகிகளை இணைத்துக்கொள்வதற்கு நாம் தயாராக இல்லை. எதிர்ப்பை தெரிவித்துவிட்டு தைரியமாக எம்முடன் எதிரணியில் இணையுங்கள். நாம் அன்பாக ஏற்றுக்கொள்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.