சிசுவொன்றின் கொலைச் சம்பவத்தை மறைக்க எத்தனித்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்துள்ள தெஹிவளை பொலிஸார் சிசுவின் தாயைக் கைது செய்துள்ளனர்.
தெஹிவளை வைத்திய வீதியில் உள்ள வீடொன்றில் புதிதாக மணம் முடித்த தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த வீட்டின் கீழ் மாடியில் இவர்கள் வாடகைக்கு குடியமர்ந்துள்ளனர்.
வெளிமாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு தொழில் நிமித்தம் வந்துள்ள இந்தத் தம்பதியினர் கடந்த மாதம் 12 ஆம் திகதி குழந்தையொன்றைப் பெற்றெடுத்துள்ளனர்.
எனினும், அந்தக் குழந்தையை அவர்கள் கொலை செய்து எரியூட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன்னர் குறித்த பெண் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனது கணவர் தன்னைவிட்டுச் சென்றுள்ளதாக செய்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் தகவல்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளனர்.
விசாரணைகளின் போது அவர்கள் திருமணமாகதவர்கள் என்து அறியவந்துள்ளது.
பிரசவத்திற்கு முன்னர் இவர்கள் குழந்தையை கலைப்பதற்கு மருந்துகளைப் பயன்படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அது பயனளிக்காமையால் குழந்தை பிறந்த பின்னர் கொலை செய்து எரியூட்டியதாக அந்தப் பெண் பொலிஸ் நிலையத்தில் கூறியுள்ளார்.
அதன் பின்னர் அந்தப் பாகங்களை மொரட்டுவைப் பகுதியில் உள்ள ஆறொன்றில் வீசியெறிந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தலைமறைவாகியுள்ள இளைஞரைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
24 வயதான அந்த இளைஞர் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மாங்குளத்தில் மண்டையோடு; அருகில் கைப்பையும் காலணியும் கண்டுபிடிப்பு
12-03-2013
மாங்குளம் பகுதியில் இன்று காலை மனித மண்டையோடு ஒன்றும், எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாங்குளம் பகுதியூடான ஏ9 வீதியின் 225 ஆவது மற்றும் 226 ஆவது மைல்கற்களுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே இந்த மண்டையோடும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் காணியொன்றை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களால் இந்த மண்டையோடும் எச்சங்களும் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மனித எச்சங்களுக்கு அருகிலிருந்து காலணி, கைப்பை போன்ற பொருட்களுடன், கறுப்பு நிறத்திலான காற்சட்டை மற்றும் வெள்ளைநிற மேற்சட்டை என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.