புலரும் ஒவ்வொரு பொழுதும் முந்தைய இரவின் முடிவுதானே! என்பர். முதல் நாள்பொழுதின் மயான அமைதியை கலைப்பதற்கு சேவல்கள் கூவின, காகங்கள் கரைந்தன, குருவிகள், பறவைகள் சிறகடிப்பதற்கு ஆயத்தமாகி கீச்… மூச்சென்று தத்தமது மொழிகளில் பேசிக்கொண்டன.
சூரியன் மெதுமெதுவாக காரிருளை பிய்த்து கதிர்களை வீசவே பொழுது புலர்ந்தது. மரணத்தை தழுவிகொண்டவர்களை தவிர எல்லோரும் கண் விழித்துகொண்டனர்.
ஆனால், குருநாகல், கனேவத்தை, அம்பகொலவெவ எனும் கிராமம் புலர்ந்தாலும் அக்கிராமத்தில் வாழ்ந்த பண்டார விஜேகோனின் வீட்டை மட்டும் காரிருள் சூழ்ந்துகொண்டு பாராங்கல்லொன்று அக்குடும்பத்தின் வாழ்விலேயே போட்டு உடைத்துவிட்டது எனலாம்.
அரைகுறையாக கட்டப்பட்ட வீட்டை சுற்றி சுவர்களுக்கு பதிலாக கறுப்பு இறப்பர் சீட்டுகளே அடிக்கப்பட்டிருந்தன. என்றுமே தன் வீட்டுக்குள் வராத சூரிய ஒளி, அந்த கறுப்பு சீட்டையும் பிய்த்துக்கொண்டு வர, வீட்டிலிருந்தவர்களுக்கே ஒரு சந்தோஷம். அந்த ஒளியை நோக்கி ஓடுகையில், அங்கோர் காரிருள் இருந்ததை அத்தருணத்தில் தான் குடும்பத்தினர் அறிந்துகொண்டனர்.
தன் மகனுடன் 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி இரவு தூங்கிகொண்டிருந்த நான்கு வயது 3 மாதங்களேயான தமாரா கேஷானி பண்டார விஜேகோன் என்ற செல்ல மகளை, ஒளிவந்த ஓட்டையிலேயே யாரோ கடத்திச்சென்றுவிட்டனர் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதற்கு வெகுநேரம் எடுக்கவில்லை.
குடும்பம் மட்டுமல்ல, கிராமமே, ஏன்? முழுநாடே அல்லோலகல்லோலப்பட்டது. சிறுமியை தேடும் வேட்டையை பொலிஸார், குற்றப்புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் முடுக்கிவிட்டனர். ஊடகங்கள் வீட்டுக்கு படையெடுத்து சிறுமியின் படங்களை வெளியிட்டன.
வீட்டில் தூங்கிகொண்டிருந்தபோது கடந்த 9ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் கடத்தப்பட்ட நான்கு வயது 3 மாதங்களேயான தமாரா கேஷானி பண்டார விஜேகோன் என்ற சிறுமி, அதியுச்சக்கட்ட தேடுதல் வேட்டையின் பயனாக நான்கு நாட்கள் கடந்த நிலையில் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை தன் வீட்டிலிருந்து எட்டு கிலோமீற்றருக்கு அப்பால் மீட்கப்பட்டார்.
இந்நிலையில், சிறுமியின் தந்தையான விஜேகோனின் வீட்டுக்கு வந்துசென்றதாக கூறப்படும் (பேயோட்டும் கபுரால) பூசாரியொருவர் கொழும்பில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். கடத்தலுக்கு உதவினர் என்ற குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபரின் தாயாரான ரணசிங்ஹ ஆராச்சிலாகே குணவதி (வயது 55) மற்றும் பிரதான சந்தேகநபரின் சகோதரனான பிரேமசிறி ராஜபக்ஷ ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
குருநாகல் மேலதிக நீதவான் விடுத்த உத்தரவுக்கு அமைய அவ்விருவரும் எதிர்வரும் 24ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸாரின் முயற்சியால் கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை, பிரதான சந்தேகநபரான குருநாகல், நெரியாவை வசிப்பிடமாக கொண்ட இலேபெருமஆராச்சிகே காமினி(32) என்றழைக்கப்படும் கிறீஸ் பேய், கிறீஸ் காமினி தீகம பிரதேசத்தில் மலைக்குள் ஒளிந்திருக்கையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
புற்றுக்குள்ளிருந்து வெளியில் வரும் பாம்பு, புற்றுக்குள் மீண்டும் சென்றுவிடும் என்று நினைப்பது தவறானது. அந்த வகையில், சந்தேகநபரும் பிஸ்கட் பக்கெட் மற்றும் குளிர்பானம் வாங்கிக்கொண்டு தப்பிச்செல்கையில், அத்தகவல்களை அறிந்த பிரதேசவாசிகள் அவரை விரட்டிச்சென்று சுற்றிவளைத்தனர்.
சுற்றிவளைப்பிலிருந்து தப்பித்துகொள்வதற்காக அவர், தான் அணிந்திருந்த ஆடைகள் எல்லாவற்றையும் களைந்துவிட்டு நிர்வாணகோலத்தில் ஓடுகையில், பிரதேசவாசிகள் கடும் முயற்சியினால், அவரை சுற்றிவளைத்து மடக்கிப்பிடித்தனர். அவரும் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
குழந்தையினது தாயாரதும், குடும்பத்தினரதும் அழுகுரல் ஓய்ந்துள்ள நிலையில், பிரதான சந்தேகநபர், குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாய் திறக்கின்றார். பிரதான சந்தேகநபர்,
நான் மனைவியிடமிருந்து பிரிந்து நீண்ட நாட்கள் ஆகின்றன. அதற்கு பின்னர் பல பெண்களை காதலித்தேன். அவர்கள் என்னை கைவிட்டனர். எந்த பெண்ணும் என்னை திருமணம் முடித்துகொள்ள விரும்பவில்லை. மற்றுமொரு பெண், நான்கு ஐந்து பேரை காதலிக்கச்சென்றார். அவரும் என்னை விரும்பவில்லை.
அதற்கு பின்னர் நான் நினைத்தேன். சின்னஞ்சிறிய குழந்தையை எடுத்துவந்து சின்ன வயதிலிருந்து வளர்த்தெடுத்து அவள் பெரியவளாகியவுடன் திருமணம் முடித்துகொள்ளவேண்டும் என்று. நான் கடத்தல் காரணல்ல, என்னை அடிக்கவேண்டாம்… அவள் வளர்த்து ஆளாக்கி பெரியவளாகியவுடன் திருமணம் முடித்துகொள்ளவே என்னுடன் குழந்தையை அழைத்துச்சென்றேன்.
நான் கூலி வேலைசெய்பவன். கூலி வேலையை தேடி சைக்கிளில் பயணிப்பேன். அவ்வாறே அம்பகொலவௌ பிரதேத்தை நோக்கி பயணிக்கையில் வீட்டு முற்றத்தில் குழந்தையொன்று விளையாடிகொண்டிருந்தது. அக்குழந்தையை வைத்த கண் வாங்காமல் பார்த்தேன். கண்ணை கொள்ளைகொள்ளும் அழகு, அழகென்றால் அழகு. பெரியவளானவுடன் இன்னும் இன்னும் அழகாக இருப்பாள் என்று என் உள்மனம் கூறியது. அந்த குழந்தை எனக்கு வேண்டும் என்ற சிந்தனை என்னுடைய இதயத்துக்கு வந்தது.
ஒரு நாள் அக்குழந்தையின் வீட்டுக்கு முன்பாக செல்கையில் அவரது தந்தை வந்தார். (தந்தை முன்னாள் இராணுவ வீரராவார். அவர், திண்பண்டங்களை உற்பத்தி செய்து தனது முச்சக்கரவண்டியில் வைத்து விற்பனை செய்பவர்) சாந்தவின் வீடு எங்கிருக்கின்றது என்று நான் கேட்டேன். அப்படியொருவரை தனக்கு தெரியாது என்றும், இந்த கிராமத்தில் அந்தபெயரில் ஒருவர் இல்லையென்றும் அவர் கூறினார்.
அதற்கு பின்னர் அருகிலிருந்த கடைக்குச்சென்று குளிர்பான போத்தல் ஒன்றை வாங்கினேன். கத்தரியொன்றையும் வாங்கினேன். இரவுவரை காத்திருந்து காலையில் சென்ற வீட்டுக்கு அப்பாலுள்ள காட்டுக்குச்சென்று ஒளிந்துகொண்டேன். நடுசாமத்தில் வீட்டுக்கு அருகில் வந்தேன். இறப்பர் சீட்டை வெட்டிகொண்டு வீட்டுக்குள் நுழைந்து, நுளம்பு வலைக்குள் இருந்த குழந்தையை மெதுவாக தூக்கி தோளில் சுமந்துகொண்டேன். குழந்தை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது. ஆகையால் விழித்துக்கொள்ளவில்லை.
வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தேன். கொடியில், நைட்டி காய்ந்துகொண்டிருந்தது. அதை துண்டு துண்டாக வெட்டி சில துண்டுகளை எடுத்துகொண்டேன். சில துண்டுகளை சின்னவளின் வாயில் ஒட்டினேன். அது ஒழுங்காக ஒட்டப்படவில்லை என்பதை பின்னரே புரிந்துகொண்டேன். சின்னவள் கூக்குரல் இடாமல் இருப்பதற்கு துணியால் சின்னவளின் வாயை கட்டினேன்.
அச்சந்தர்ப்பத்தில் சின்னவள் விழித்திருந்தாள். என் சின்னவளை எனது சைக்கிளின் பின்னால் உள்ள கரியரில் அமர்த்தினேன். நான் அணிந்திருந்த சேட்டை சின்னவள் இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். தான் கீழே விழுந்துவிடுவேன் என்று சின்னவள் எனது சேட்டை பிடித்திருக்கலாம். அதிலிருந்து அக்குழந்தை எனக்கு பயமில்லை என்பதை புரிந்துகொண்டேன்.
அதன் பின்னரே சின்னவளின் வாயில் கட்டியிருந்த துணி பட்டியை அவிழ்த்துவிட்டேன். அப்பொழுது நன்றாக விடிந்திருந்தது. திறந்திருந்த கடையில் பிஸ்கெட் பக்கெட்டுகள் சிலவற்றை பணம் கொடுத்து வாங்கிக்கொண்டேன்.
குழந்தையை தூக்கிக்கொண்டு அரலங்கல மலையின் உச்சிக்கு ஏறினேன். அங்கிருந்த கற்குகைக்குள் குழந்தையை வைத்தேன். மூன்று நாட்களாக அக்குகையிலேயே குழந்தையை வைத்திருந்தேன். அந்த மூன்று நாட்களும் மூவேளையும் குழந்தைக்கு பிஸ்கெட் மட்மே உணவாக கொடுத்தேன். மலையில் தண்ணீர் இருக்கும் இடத்திலிருந்து தண்ணீரை எடுத்துவந்து பருகக்கொடுத்தேன்.
குழந்தை, ஆரம்ப நாளில் அழுதது. நான் ஒவ்வொரு கதைகளை கூறி தாலாட்டினேன். மலையில் இருந்ததை காண்பித்தேன். குருவிகளை காண்பித்தேன். பிள்ளையை தனியாக விட்டுவிட்டு நான் எங்குமே செல்லவில்லை. அருகிலேயே இருந்தேன். வீட்டுக்கு செல்லவேண்டும் என்று குழந்தை கேட்டது. அம்மாவை கேட்டு அழுதது. குருவிகளை காண்பித்தேன், அழுகையை நிறுத்திகொண்டது. அதற்கு பின்னரே சின்னவள் என்னுடன் நன்றாக பழகிவிட்டாள்.
கடத்தல் செய்தி முழு நாட்டையும் குழப்பமடையச்செய்துள்ளமை தனக்கு தெரியாது என்றும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்களுக்கு பின்னர் சின்னவளை கட்டியணைத்துகொண்டு என்னுடைய வீட்டுக்குச்சென்றேன். எனது தாய் விபரங்களை கேட்டாள். முழு விபரங்களையும் அம்மாவிடம் தெரிவித்தேன். குழந்தையை இனங்கண்டு கொள்ளமுடியாத வகையில் அவளுடைய தலைமுடியை அம்மா வெட்டிவிட்டாள்.
பாற்சோறு சமைத்து கொடுத்தாள். சின்னவளோ மிகவும் விருப்பமாக உண்டாள். பொலிஸார் வந்தால், சின்னவளை எடுத்து சென்று விடுவர் என்பதற்காக கட்டிலுக்கு அடியில் மறைத்துவைத்தேன்.
இதற்கு முன்னர் பொல்ஹாவலை பகுதியில் மூன்று குழந்தைகளை கடத்துவதற்கு முயற்சித்தேன். அந்த முயற்சி கைகூடவில்லை. ஒரு குழந்தையை தூக்கும் போது அயலவர்கள் விரட்டினர். அக்குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டேன்.
சின்ன குழந்தைகள் இருக்கும் வீட்டுக்குள் இரவு வேளையில் களவாக உள்நுழைந்து கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொண்டேன். வீட்டிலிருந்தவர்களில் ஒருவர் என்னை கண்டுகொண்டமையால் அவர்களிடமிருந்து ஓடி தப்பித்துக்கொண்டேன்.
(குறித்த நபர் கீழ் மட்ட மனோநிலை கொண்டவர் என்று தெரிவித்த பொலிஸார் சில விடயங்களை பத்திரிகையில் பிரசுரிக்க முடியாது என்றும் தெரிவித்தனர். குழந்தை கடத்தப்பட்டது புதையல் தோண்டுவதற்காக பலியிடுவதற்கு அல்ல என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.)
இந்த குழந்தையை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவினர், குழந்தையின் தாய், தந்தையிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். இரண்டொரு நாட்களுக்கு முன்னர் தங்களுடைய வீட்டுக்கு வந்த சாந்த என்பவர் தொடர்பில் தேடிப்பார்த்தவரின் உடலமைப்பு, உடுத்தியிருந்த ஆடை தொடர்பிலான விபரங்களை பெற்றுகொண்டனர்.
குழந்தையின் தந்தைவழங்கிய விவரங்களுடன் சந்தேகநபரின் மாதிரி படமொன்று குற்றப்புலனாய்வு பிரிவைச்சேர்ந்த சித்திரம் கீறும் அதிகாரியினால் வரையப்;பட்டது. வரையப்பட்ட மாதிரி படத்தை ஊடகங்களில் வெளிவந்தால் சந்தேகநபர் ஒளிந்துகொள்வார் என்பதினால் அந்த படத்தை வெளியிடாமல் இருப்பதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் தீர்மானித்தனர்.
இந்நிலையில், கொழும்பு குற்றப்புலனாய்வு அறிக்கை பிரிவில் இருக்கின்ற நாடளாவிய ரீதியில் பதியப்பட்ட குற்றவாளிகள் (ஐ.ஆர்.சி) அறிக்கை உள்ளிட்ட குருநாகல் மாவட்டத்தில் இருக்கின்ற ஐ.ஆர்.சி விபரங்களை அடக்கிய அறிக்கையை பெற்று விசாரணைகளை முடுக்கிவிட்டனர்.
குழந்தையின் தந்தையுடன் இருக்கும் கோபத்தினால் அல்லது வைராக்கியத்தினால் குழந்தை கடத்தப்படவில்லை என்பதனை குற்றப்புலனாய்வு பிரிவினர் முதலில் புரிந்துகொண்டனர். அதனடிப்படையில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன. பொல்ஹாவலையில், மூன்று குழந்தைகளை கடத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பிலும் அப்பிரிவினர் தகவல்களை பெற்றுகொண்டனர்.
குற்றப்புலானாய்வு பிரிவினர் இரவு பகலாக விசாரணைகளை முடுக்கிவிட்டிருந்த நிலையில், எனது அண்ணன் குழந்தையொன்றை தூக்கிக்கொண்டு வந்திருக்கின்றார் என்று சந்தேகநபரான காமினியின் சகோதரர், கும்புக்கெட்டேயிலுள்ள சில்லறை கடையொன்றின் முதலாளியிடம் தெரிவித்துள்ளார் என்று பொலிஸாருக்கு தகவல்கள் பறந்தன. அந்த வார்த்தையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பெறுபேற்றின் மூலமே குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான காமினி ஒரு மனநோயாளி என்றும் அவர் அங்கொடை மனநல வைத்தியசாலையில் சில காலங்கள் சிகிச்சை பெற்றுவந்தவர் என்றும் தெரியவருகின்றது.
அவரிடமிருந்து உடனடியாக ஒட்டவைக்கும் பசை (கம்) கைப்பற்றப்பட்டது. குழந்தைகளை தூக்கிச்செல்கையில் அக்குழந்தை அழுதுவிட்டால் உடனடியாக அழுகையை நிறுத்துவதற்கு உதடுகளில் பூசிவிடவே அதனை வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சந்தேகநபருக்கு எதிராக, குற்றவியல் தண்டனைக்கோவைச்சட்டத்தின் கீழ் குழந்தை கடத்தல், வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், வீட்டுடைப்பு மற்றும் சிறு குழந்தையை தடுத்துவைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவினர் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர்.
-அழகன் கனகராஜ்