சிரியாவில் அதிபரின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டுப் போரில் கடந்த மாதத்தில் மட்டும் சுமார் ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் உள்பட 3 ஆயிரம் பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர்.
இதுதவிர, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட ரஷியா நாட்டின் விமானப்படை துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.
இதுதவிர சிரியாவின் சில பகுதிகளை பிடித்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் உள்நாட்டு ராணுவத்துக்கு உதவியாக அமெரிக்க விமானப்படை ஈடுபட்டுள்ளது.
இப்படி, மும்முனை தாக்குதல்களை சந்தித்துவரும் சிரியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளதாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்துவரும் ஐ.நா. மனித உரிமை அமைப்பினர் இன்று தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகள், போராளி குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் பலியாகியதுடன், 207 குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 955 பேர் கடந்த மாதத்தில் கொல்லப்பட்டதாகவும் இந்த மரணங்களில் 70 சதவீதம் ரஷிய நாட்டு விமானப்படை தாக்குதல் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான மோதலில் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
அவ்வகையில், இந்த ஆண்டில் மிக அதிகமான உயிர் பலியை செப்டம்பர் மாதம் சந்தித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.