கிராமப்புறங்களைச் சேர்ந்த சிறுமிகள், யுவதிகளை ஏமாற்றியும் கடத்தி வந்தும் களியாட்ட விடுதிகளில் நடன மங்கையர்களாகவும், பாலியல் நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தும் திட்டமிட்ட நடவடிக்கைகள் இடம்பெறுவது குறித்து இரகசிய பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
15 வயதான சிறுமியொருவர் இரவு நேர களியாட்ட விடுதியில் நடனத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் வெலிக்கடை பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவத்தையடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரவு நேர களியாட்ட விடுதியில் ஏனைய பெண்களுடன் இந்த சிறுமி நடனத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் வசித்து வரும் பாடசாலை சிறுமி ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக தும்மலசூரிய பொலிஸார் தெரிவித்தனர்.
நன்கு பழக்கமான 18 வயதான இளைஞன், சிறுமியை திருமண வைபவம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றதாகவும் அன்றில் இருந்து சிறுமி வீடு திரும்பவில்லை என்றும் பெற்றோர் தும்மலசூரிய பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டுக்கு அமைவாக முன்னெடுத்த விசாரணைகளிலேயே சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே வெலிக்கடை களியாட்ட விடுதியில் இருந்த சிறுமி வெலிக்கடை பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார்.
வெலிக்கடை பொலிஸார் குறித்த இரவு நேர களியாட்ட விடுதியை சுற்றிவளைத்து சிறுமியை மீட்ட பின்னர், அவரிடம் வாக்குமூலத்தை பெற்ற பின்னர், தும்மல்லசூரிய பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.
இந்த நிலையில் சிறுமியை அழைத்துச் சென்றதாக கூறப்படும் 18 வயது இளைஞனை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறுமியை திருமண வைபவத்திற்கு அழைத்துச் சென்ற இளைஞர் கடந்த 16ஆம் திகதியில் இருந்து 20ஆம் திகதி வரை இரவு நேர களியாட்ட விடுதியில் தங்க வைத்துள்ளதாகவும், இதன் காரணமாக தான் ஏனைய பெண்களுடன் இணைந்து நடனமாட நேரிட்டதாகவும் சிறுமி, பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
அத்துடன் இரவு நேர களியாட்ட விடுதிக்கு வந்த நடுத்தர வயதான நபர், சிறுமியை பாலியல் செயல்களுக்காக பணியாளர் ஒருவரிடம் விலைக்கு கேட்டதாகவும், பணியாளர் சிறுமியை நடுத்தர வயதான நபருக்கு கொடுக்க முயற்சித்த போது அங்கிருந்த ஒரு நபர் அதனை எதிர்த்ததாகவும் சிறுமி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இதனடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுத்த பொலிஸார் இரவு நேர களியாட்ட விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படும் 5 பெண்களையும், 10 ஊழியர்களையும் கைது செய்துள்ளனர்.