வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இந்தியா அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மத்திய அரசாங்கத்தின் அனுமதிபெற வேண்டிய அவசியமில்லை.
அவர் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டு அந்த நாட்டின் அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்தவித தடையுமில்லை என்று அரசின் பங்காளிக்கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
வடமாகாண முதலமைச்சருக்கு மட்டுமல்ல அனைத்து மாகாண சபை முதலமைச்சர்களுக்கும் மாகாண செயலாளர்களுக்கும் தலைவர்களுக்கும் இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்று பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இந்தியா சென்று அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்த
வேண்டுமானால் அரசாங்கத்தின் அனுமதியை பெற வேண்டும் என்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் ஆளுநரின் அனுமதி பெறவேண்டியது அவசியம் என அமைச்சரவையின் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வலவும் கருத்துத் தெரிவித்திருந்தனர். இது குறித்து கேட்டபோதே அமைச்சர் வாசுதேவ நாணக்கார இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;
இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டு அந்நாட்டு அரசுத்தலைவர்களுடன் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எவ்விதமான தடையும் இல்லை.
இந்தியாவுக்கு மட்டுமல்ல எந்தவொரு நாட்டுக்கும் விஜயத்தை மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்தலாம்.
அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்களை கோருவதற்கும் முடியும். அதற்கு எந்தவிதத்திலும் தடையில்லை. அத்தோடு மத்திய அரசாங்கத்தின் அனுமதியை கேட்க வேண்டிய அவசியமுமில்லை.
வடமாகாண முதலமைச்சருக்கு மட்டுமல்ல அனைத்து மாகாண சபை முதலமைச்சருக்கும் மாகாண செயலாளருக்கும் தலைவருக்கும் இவ்வாறு வெளிநாடு சென்று பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. இதற்கு எந்தவிதமான தடையும் விதிக்கப்படவில்லை. இலங்கையின் அரசியலமைப்பிலும் இதற்கு தடைகள் இல்லை.
வடமாகாணம்
ஆனால், வடமாகாணத்தின் பிரச்சினைகளின் தீர்வுகள் தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் விரும்பினால் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அரச பிரதிநிதியொருவரையும் தன்னுடன் கூட்டிச்செல்வதே நன்மைபயக்கும். ஏனென்றால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு முத்தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியது அத்தியாவசியமாகும்.
இப்பிரச்சினையோடு இலங்கை, இந்தியா மற்றும் தமிழ் தரப்பென மூன்றும் பின்னிப்பிணைந்துள்ளன. இதனை தனித்தனியாக பிரிக்க முடியாது.
சரத் பொன்சேகா
அரசாங்கத்தின் எதிராளியாகவே சரத் பொன்சேகா உள்ளார். எனவே, அவர் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்க தயாரென அவர் கூறுவது அரசாங்கத்தை நெருக்கடியில் தள்ளிவிடுவதற்கான முயற்சியாகும்.
நாட்டையோ, படையினரையோ, மக்களையோ பாதுகாக்கும் எண்ணம் இவரிடம் இல்லை. இருப்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் பழிவாங்கும் எண்ணமாகும்.
அத்தோடு சர்வதேச விசாரணையை நாம் எதிர்க்கின்றோம். உள்ளக விசாரணைகள் இடம்பெறும் நிலையில் எதற்கு சர்வதேச விசாரணையென்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இந்தியாவுக்கு அளித்திருக்கும் வாக்குறுதியை மீறும் செயல்:அரசின் கருத்துக்கு சுமந்திரன் பதில்
பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்த்து 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த தயார் என அரசாங்கம் கூறியிருப்பதானது இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியை மீறும் செயல் என சாடியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்றே அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பது எமது உறுதியான நிலைப்பாடு எனவும் வலியுறுத்தியுள்ளது.
வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இந்தியா செல்லவேண்டுமானால் வட மாகாண ஆளுநரிடம் அனுமதி பெற்றேயாகவேண்டும் என்றும் பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தயாராகவுள்ளதா கவும் அமைச்சரவையின்
பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல நேற்று முன்தினம் கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்துக் கேட்டபோதே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது;
அரசாங்கத்தின் வாக்குறுதி
இந்தியாவின் புதிய பிரதமாரக நரேந்திரமோடி பதவியேற்றபோது அந்த நிகழ்வுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி பிரதமரிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13க்கு அப்பால் சென்று தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்வு வழங்குவேன் என வாக்குறுதி அளித்திருக்கின்றார்.
அண்மையில் கூட்டமைப்பு இந்தியப் பிரதமர், வௌிவிவகார அமைச்சர் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்திருந்த போதும் இலங்கை அரசாங்கம் அவ்வாறான வாக்குறுதியை தமக்கு வழங்கியிருப்பதை அவர்கள் எம்மிடத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் பொலிஸ் அதிகாரங்களை விடுத்து 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்த தயார் என அரசாங்கம் அறிவித்திருப்பதானது இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியை மீறும் செயலாகும்.
13 பற்றி தௌிவில்லை
இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விடவும் 13ஆவது திருத்தச்சட்டம் வலுவானது என அரசாங்கம் கூறியிருப்பதானது அச்சட்டம் பற்றி அவர்கள் சரியாக புரிந்து கொள்ளாதிருப்பதோடு தௌிவில்லாதிருப்பதையுமே வௌிப்படுத்தியுள்ளது.
உதாரணமாகக் கூறுவதாயின் இந்தியாவின் மாநிலங்களுக்கு காணி அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட்டிருகின்றன. ஆனால் 13ஆவது திருத்தத்தில் அவ்வாறான நிலைமையொன்று முழுமையாக காணப்பட்டிருக்கவில்லை. இது போன்று பல்வேறு விடங்கள் உள்ளன.
13ஆவது திருத்தச்சட்டம் இந்திய மாநிலங்களுக்கு காணப்படும் அதிகாரங்களைக் காட்டிலும் பலவீனமாகவே காணப்படுகின்றது. 13ஆவது திருத்தச்சட்டம் ஒருபோதும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாக அமையாது. இதில் நாம் தௌிவாகவிருக்கின்றோம்.
எனவே தான் அதனை ஒரு ஆரம்ப புள்ளியாக கொண்டு அதற்கு அப்பால் செல்வதே அர்த்தபுஷ்டியான தீர்வுக்கு வழிவகுக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துவிட்டோம். தற்போது அதனை மீளவும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
பாராளுமன்றத் தெரிவுக்குழு
பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டமைப்பு தனது நிலைமைப்பாட்டை வௌிப்படையாகவே கூறிவிட்டது. அவ்வாறன நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பலவீனத்தையும் அனைவரும் அறிவர்.
ஆகவே தான் அரசாங்கம் எம்முடன் நேடியாகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் கோரியுள்ளோம். அரசாங்கமே எம்முடனான பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்டது.
ஆகவே அவர்களே அது தொடர்பிலான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவேண்டும். நேரடிப்பேச்சுவார்த்தை மூலம் ஐயப்பாடுகள் களையப்படாமல் பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் பேசுவது காலத்தை விரயமாக்குதாகும்.
சி.வி பாரம்பரியத்தை அறிவார்
வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இந்தியா செல்லவேண்டுமானால் வட மாகாண ஆளுநரிடம் அனுமதி பெற்றேயாகவேண்டும். அரசியலமைப்பின் பிரகாரம் முதலமைச்சர் வௌிநாடு செல்வதாயின் ஆளுநரிடம் அனுமதி பெறுவது கட்டாயமாகும் என அமைச்சரவைப் பேச்சாளர் கூறுகின்றார்.
உண்மையிலேயே இந்திய அரசாங்கத்திடமிருந்து அழைப்பு கிடைத்தவுடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் என்னசெய்வதென்று முடிவெடுப்பார். அவர் அந்தப் பாரம்பரியங்களை நன்கறிந்தவர். ஆகவே தொடர்பில் இவர்கள் கருத்துக்களை முன்வைக்கவேண்டிய அவசியமில்லை என்றார்.