ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய, சுவாதி படுகொலை வழக்கில், தலைமறைவாக இருந்த கொலையாளி ராம்குமார் பிடிபட்டான்.
நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள குக்கிராமத்தில் மறைந்திருந்த அவன், போலீஸ் பிடியில் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், சுவாதியை கொன்றதற்கான காரணம் குறித்தும், அவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், ஜூன் 24ம் தேதி, மென்பொறியாளர் சுவாதி, அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது கொலை தொடர்பாக, ஒரு வாரமாக நீடித்து வந்த மர்மம், நேற்று முன்தினம் இரவு முடிவுக்கு வந்தது.
நெல்லை மாவட்டம், செங்கோட்டையை அருகே தேன்பொத்தை ஊராட்சிக்கு உட்பட்டது, மீனாட்சிபுரம் கிராமம். இங்கு வசிக்கும் பரமசிவத்தின் மகனான ராம்குமார், 24, தான், சுவாதி கொலை வழக்கில் தேடப்பட்ட கொலையாளி என்பது தெரியவந்துள்ளது.
பரமசிவன், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், ‘கேபிள் லைன்’ பதிக்க பள்ளம் தோண்டும் ஊழியர். மனைவி புஷ்பம், சில ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இவர்களது மூத்த மகன் ராம்குமார், செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தான். தொடர்ந்து, ஆலங்குளத்தில் உள்ள ஐன்ஸ்டீன் இன்ஜி., கல்லுாரியில், பி.இ., மெக்கானிக்கல் படித்தான்.
பல பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. சென்னைக்கு வேலைத் தேடி வந்தான். சென்னை, சூளைமேட்டில் தனியார் விடுதியில் தங்கி, ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்தான்.
அதே பகுதியில் குடியிருந்த சுவாதி, இந்த விடுதியை கடந்து, நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் செல்வார். அவரை, ராம்குமார் ஒருதலையாக காதலித்து உள்ளான்.
இதற்காக, சுவாதியை தினமும் பின்தொடர்ந்தான். பலமுறை சொல்லியும், அவனது காதலை சுவாதி ஏற்க மறுத்ததால், ஆத்திரத்தில் கொலை செய்ய திட்டமிட்டான்.
ஜூன் 24ம் தேதி, காலை 6:30 மணிக்கு, சுவாதியை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தான். அன்று இரவே, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில், செங்கோட்டைக்கு சென்றுள்ளான்.
அவனது சொந்த ஊரான மீனாட்சிபுரம், பின்தங்கிய கிராமம். சுவாதி கொலை குறித்து, பெரியளவில், அங்குள்ள மக்களுக்கு தெரியவில்லை. ராம்குமாரின் வீடு சிறியது. பின்புறம் திறந்த வெளியில், ஆடுகளை அடைக்கும் பட்டி உள்ளது.
ஜூன் 25ம் தேதி முதல், அங்கேயே ராம்குமார் அதிக நேரம் படுத்து கிடந்துள்ளான். அவ்வப்போது, ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வானாம். யாருடனும் தொடர்பு கொள்ளாமல், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்ததால், அவனது இருப்பிடம், வெளியில் யாருக்கும் தெரியவில்லை.
* துரத்திய போலீஸ்
இதற்கிடையில், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான உருவத்தை வைத்து, குற்றவாளியின் வரைபடத்தை தயாரித்த சென்னை போலீசார், தீவிர விசாரணையில் இறங்கினர்.
சூளைமேடு விடுதிகளில் தங்கியிருந்து, ஜூன், 24ம் தேதிக்கு பின் தலைமறைவானவர்களின் பட்டியலை தயாரித்தனர்.
அதை வைத்து, தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதில், ராம்குமார் பெயரும் இருந்தது. அவன், ஒரு வாரமாக வராமல் இருந்துள்ளது, அவர்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அந்த விடுதியில் சேரும் போது, அவன் அளித்த விண்ணப்பத்தில் இருந்த புகைப்படமும், வரைபடமும் ஒன்றாக இருந்ததால், ஏறக்குறைய அவன் தான் கொலையாளி என்ற முடிவுக்கு வந்தனர்.
ஆனால், பரபரப்பை உண்டாக்கி, காரியத்தை கெடுத்து விடக் கூடாது என்பதற்காக, மிகவும் அமைதியாக, ரகசியமாக கைது நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டனர்.
அதன்படி, தென்காசி போலீசாருக்கு, ராம்குமாரின் முகவரியை தெரிவித்து, அவன் சொந்த ஊருக்கு வந்திருக்கிறானா என, ரகசியமாக விசாரிக்கும்படி கூறினர். நெல்லை எஸ்.பி., விக்ரமன் உத்தரவில், தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், போலீசாருடன் மீனாட்சிபுரம் சென்றார்.
பரமசிவத்தின் வீட்டை, இரவு 11:00 மணிக்கு அடைந்தனர். போலீசாரை கண்டதும், ஆட்டுப்பட்டியில் படுத்திருந்த ராம்குமார், தப்பி ஓட முயற்சித்தான். முடியாமல் போகவே, பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டான். அப்போது, போலீசார் அவனை மடக்கி பிடித்தனர்.
கழுத்தில் ஆழமாக அறுத்துக் கொண்டதால் ரத்தம் கொட்டியது. அவன் தான் கொலையாளி என்பதை தெரிந்து கொண்ட போலீசார், தென்காசியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின், அவசர சிகிச்சைக்காக, அதிகாலை 1:30 மணிக்கு, நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஒரு மணி நேர சிகிச்சைக்கு பின், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான்.
காலையில், ஆப்பரேஷனுக்கு பிந்தைய சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டான். ”அவனது உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை.
இரு நாட்களில் உடல்நிலை சரியாகிவிடும்,” என, மருத்துவக் கல்லுாரி, ‘டீன்’ சித்தி அத்திய முனவரா தெரிவித்தார். மேல் விசாரணைக்கு, சென்னைக்கு கொண்டு செல்லலாம் என்ற திட்டத்தில் இருந்த போலீசார், இரு நாட்கள் சிகிச்சை பெற அனுமதித்தனர்.
* உதவி கமிஷனர் விசாரணை
ராம்குமார் சிக்கியதாக தகவல் கிடைத்ததும், இந்த வழக்கை விசாரிக்கும் தனிப்படை உதவி கமிஷனர் தேவராஜன் தலைமையில், இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உட்பட, ஏழு பேர் குழுவினர், சென்னையில் இருந்து, நேற்று பிற்பகல் நெல்லை வந்தனர். மருத்துவமனையில், எஸ்.பி., விக்ரமன், ‘டீன்’ சித்தி அத்திய முனவரா ஆகியோருடன், ஆலோசனை மேற்கொண்டனர்.
ராம்குமாரின் உடல்நிலை குறித்து, மருத்துவச் சான்றிதழ் கிடைத்த பின்னே, சென்னைக்கு அழைத்துச் செல்வது என, முடிவு செய்தனர். பின், அவர்கள், ராம்குமாரை சென்று பார்த்தனர்.
* மதம் மாறிய மீனாட்சிபுரம்
மீனாட்சிபுரத்தில், 400க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் உள்ளன. இவர்களில், 210 குடும்பத்தினர், 1981 பிப்., 19ம் தேதி, மதம் மாறினர். சில ஆண்டுகளுக்கு பின், அவர்களில் சிலர் மீண்டும் தாய் மதத்திற்கு திரும்பினர். ராம்குமாரின் சித்தப்பா இதயத்துல்லாவை, நேற்று போலீசார் ஆம்புலன்சில் விசாரணைக்கு அழைத்து வந்திருந்தனர்.
ஆனால், கொலை குறித்து ராம்குமார் குடும்பத்தினர் யாருக்கும் தெரியவில்லை. நெல்லையில், அவர்களை பத்திரிகையாளர்கள் படம் எடுத்த போது தான், ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டனர்.
‘காதலை ஏற்க மறுத்ததால் கொன்றேன்’ கொலைகாரன் ‘பகீர்’ வாக்குமூலம்
”மென்பொறியாளர் சுவாதி, என் காதலை ஏற்க மறுத்ததால் கொன்றேன்,” என, கைதான ராம்குமார், ‘பகீர்’ வாக்குமூலம் அளித்துள்ளான்.
ராம்குமார், தனிப்படை போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்: தந்தை பெயர் பரமசிவம், தாய் புஷ்பம், எனக்கு மதுபாலா, காளீஸ்வரி என, இரண்டு தங்கைகள் உள்ளனர்.
மதுபாலா, பி.பி.ஏ., படித்துவிட்டு, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். நான், 2015ல், நெல்லை மாவட்டம், ஆலங்குளத்தில் உள்ள, ஐன்ஸ்டின் பொறியியல் கல்லுாரியில், மென்கானிக்கல் இன்ஜி., படித்தேன். பல பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால், விரக்தியில் இருந்தேன்.
வேலை தேடி, ஏப்., 8ம் தேதி, சென்னை வந்தேன். நண்பன் மூலம், சூளைமேடு, சவுராஷ்ட்ரா நகர், 8வது தெருவில், தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான, எஸ்.ஏ., மேன்ஷனில், இரண்டாவது மாடியில், 404 எண் அறையில் தங்கினேன்.
என்னுடன், 50 வயது மதிக்கத்தக்க ஒருவரும் தங்கி இருந்தார்; 1,500 ரூபாய் மாத வாடகை.
ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்க வேண்டும் என்பது, என் ஆசை. நான், பி.இ., முடிக்காததால் நிராகரிக்கப்பட்டேன்.
சாப்பாடு, மாத வாடகை தர வேண்டுமே என, ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்தேன். நான் தினமும் வேலைக்கு செல்லும், சவுராஷ்ட்ரா நகர், ஏழாவது தெரு வழியாகத் தான், சுவாதியும் ரயில் நிலையத்திற்கு செல்வார்.
ஒரு நாள், அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தேன். முதலில் தயங்கினார். பின், நான் பி.இ., படித்து இருக்கிறேன் என்றதும், அவரும் பேசினார்.
அவரது நடவடிக்கைகள் என்னை ஈர்த்தன. ஒரு கட்டத்தில், அவரை தீவிரமாக காதலிக்க துவங்கினேன்.
சுவாதி தினமும், எங்கள் மேன்ஷன் அருகில் உள்ள, கங்கை அம்மன் கோவிலுக்கு வருவார். நானும் அங்கு சென்று பார்ப்பேன்; சிரிப்பார்.
இதனால், அவர் என் காதலை ஏற்றுக் கொள்வார் என, நம்பினேன். ஒரு நாள், என் காதலை சொன்ன போது கண்டித்தார். ‘உனக்கும், எனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது’ என்றார்.
ஆனால், நான் தொடர்ந்து என் காதலை ஏற்கும்படி வலியுறுத்தி வந்தேன். அவர் என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டார்.
இதனால், அவர் செல்லும் இடமெல்லாம் சென்று, காதலை ஏற்கும்படி கூறினேன். அவர் பணியாற்றிய பரனுார், மகேந்திரா வேல்டு சிட்டி வரை சென்றுள்ளேன்.
ஒரு மாதமாக பின்தொடர்ந்த போதிலும், அவர் என் காதலை ஏற்கவே இல்லை. நான் பின்தொடர்வதை, தன் தோழிகளிடம் கூட தெரிவித்து உள்ளார்.
அவர் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதனால், ‘எனக்கு கிடைக்காத சுவாதி, வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது’ என, கொலை செய்ய திட்டம் தீட்டினேன்.
அதற்காக, சொந்த ஊருக்கு சென்று, ‘ஆட்டுக்கு தழைக்கொத்து அறுத்து போட வேண்டும்’ எனக்கூறி, பக்கத்து ஊரில் அரிவாள் வாங்கி வந்தேன்.
ஜூன் 24ம் தேதி, சுவாதி தன் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் செல்வதை நோட்டமிட்டு பின் தொடர்ந்தேன். ரயில் வந்து விடும் என்பதால், வேகமாக நடந்து சென்று, சுவாதியிடம் காதலை தெரிவித்தேன்.
அப்போது, அவர் என்னை திட்டினார். இதனால் ஆத்திரமடைந்து, அரிவாளால், நான்கு முறை வெட்டி விட்டு தப்பினேன். அவரது மொபைல் போனையும் பறித்து சென்று விட்டேன்.
ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் துரத்தினர். ஏற்கனவே, எப்படி தப்பிக்க வேண்டும் என, திட்டம் தீட்டிருந்ததால்தப்பிவிட்டேன். பின்,
அறைக்கு சென்று குளித்துவிட்டு, மாலை, 3:30 மணிக்கு பின் கிளம்பி, சொந்த ஊர் சென்று விட்டேன்.
இவ்வாறு ராம்குமார் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.
போலீசார் வெளியிட்டு இருந்த கொலையாளியின் படத்தை பார்த்த, மேன்ஷன் காவலாளி கோபால், போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து, போலீசார், ராம்குமார் தங்கி இருந்த, எஸ்.ஏ., மேன்ஷனுக்கு சென்று விசாரித்தனர். அவன் அறை கதவை உடைத்து பார்த்த போது, கட்டிலுக்கு அடியில், ரத்தக்கறை படிந்த சட்டை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
கொலையாளி ராம்குமார் தான் என, உறுதி செய்த தனிப்படை போலீசார், நெல்லை போலீசார் உதவியுடன் அவனை கைது செய்துள்ளனர்.
சென்னையில் கொலை செய்யப்பட்ட சுவாதிக்கு, நேற்று, அவரது பெற்றோர் ஸ்ரீரங்கத்தில் ஈமக்கிரியைகள் செய்தனர்.சென்னை, சூளைமேட்டை சேர்ந்த சுவாதி, கடந்த மாதம், 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சுவாதியின் தாய் ரெங்கநாயகியின் சொந்த ஊர் திருச்சி, ஸ்ரீரங்கம். ரெங்கநாயகியின் சகோதரர்கள் இருவரும், சகோதரியும் ஸ்ரீரங்கத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுவாதியின் தாய் ரெங்கநாயகி, தந்தை சந்தானகோபால கிருஷ்ணன் ஆகியோர், நேற்று முன்தினம், ஸ்ரீரங்கம் வடக்கு அடையவளஞ்சான் தெருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர்.
சுவாதி கொலையாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனியார், ‘டிவி’ கேமராமேன்கள் நேற்று அதிகாலை முதலே, சுவாதியின் உறவினர் வீட்டின் முன் முகாமிட்டனர்.
இதனால், சுவாதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை, 8:00 மணிக்கு, ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரை விஷ்ணு பாதம் கட்டடத்துக்கு சென்றனர்.
அங்கு, சுவாதியின் தந்தை, ஈமக்கிரியைகள் செய்து, தர்ப்பணம் கொடுத்தார். இன்று, சுவாதிக்கு, 10ம் நாள் காரியங்களை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
–