புலம்பெயர் தமிழரின் இரண்டாவது தலைமுறை தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் அதே நிலையில் அந்தந்த நாட்டின் உள்ளூர் அரசியலிலும் பிரவேசித்து முத்திரை பதித்து வருகின்றது.
அந்த வரிசையில் சுவிற்சர்லாந்து நாட்டின் பேர்ண் மாநிலத்தில் உள்ள தூண் நகர நகராட்சித் தேர்தலில் இளம் தமிழ்ப் பெண்மணி ஒருவர் களம் இறங்கி இருக்கிறார்.
சுவிற்சர்லாந்து நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் சோசலிசக் கட்சியின் சார்பில் திருமதி தர்சிக்கா கிருஸ்ணாணந்தம் (வடிவேலு) அவர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
கணக்காளராகப் பயின்று பட்டம் பெற்ற தர்சிக்கா ஒரு தொழில்முறை மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கி வருகின்றார். அதேவேளை, தூண் நகரசபையில் இந்துமதம் மற்றும் தமிழர் கலாசாரம் என்பவற்றுக்கான ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
நவம்பர் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் தூண் நகரசபைக்காக 40 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இவர் சார்ந்த சோசலிசக் கட்சி சார்பில் கடந்த தேர்தலில் 8 உறுப்பினர்கள் தெரிவாகி இருந்தனர். இந்தத் தேர்தலில் சுவிஸ் பிரஜா உரிமை பெற்றவர்களும் ‘சீ” ரக வதிவிட உரிமை பெற்றவர்களும் வாக்களிக்க முடியும்.
எனவே, இந்த நகரப் பிரதேசத்தில் வாழும் நூற்றுக் கணக்கான தமிழர்கள் ஏகோபித்த ரீதியில் ஒற்றுமையாக தர்சிக்காவிற்கு வாக்களிக்கும் நிலையில் அவர் ஒரு உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.