சூரிய சக்தியில் இயங்கும் விமானம் ஒன்று அடுத்த ஆண்டு உலகைச் சுற்றி பறக்கவிருக்கின்ற நிலையில், பரிசோதனை வெள்ளோட்டமாக சுவிட்ஸர்லாந்தில் அவ்விமானம் முதல் முறையாக பறக்கவிடப்பட்டுள்ளது.
சென்ற வருடம் அமெரிக்காவின் குறுக்காக பறந்த சோலார் இம்பல்ஸ் 1 என்ற விமானத்தின் பெரிய மற்றும் மேம்பட்ட வடிவம் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த சோலார் இம்பல்ஸ் 2 விமானம் ஆகும்.
வடிவ முன்மாதிரியான இந்த விமானம் ஏற்கனவே பல உலக சாதனைகளை செய்துள்ளது.
மனிதரை சுமந்து தொடர்ந்து நெடுந்தூரம் பறந்த சூரிய சக்தி விமானமாக 26 மணி நேரம் இந்த விமானம் பறந்துள்ளது.
மாற்று ஆதார எரிசக்தியின் எல்லைகளை விரிவாக்க தாம் விரும்புவதாக இந்த விமானத்தின் விமானிகள் கூறுகின்றனர்.
கரிம இழைகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமானத்தின் இறக்கைகள் போயிங் 747 ரக விமானத்தின் இறக்கைகளை விட அகலமானவை என்றாலும், இந்த விமானத்தின் எடையோ ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவு.
இரான் புழுதிப் புயல் – வீடியோ
இரானியத் தலைநகர் டெஹ்ரானில் இன்று தாக்கிய புழுதிப் புயல் குறைந்தது ஐந்து பேரைப் பலி வாங்கியுள்ளது.
மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் டெஹ்ரான் மற்றும் அதன் புற நகர்ப் பகுதிகளில் நுழைந்து வீசிய இந்தப் புழுதிக் காற்றில் மேலும் 30 பேர் காயமடைந்தனர்.
இந்த புழுதிப் புயலுடன் கடும் மழையும் மின்னலும் சேர்ந்து தாக்கின. புழுதியும், கணலும் ஒரு சுவர் அளவுக்கு உயர்ந்து எழுந்து டெஹ்ரானைச் சூழ்ந்தது. இதனையடுத்து டெஹ்ரானில் மின் தடை ஏற்பட்டு நகரெங்கிலும் இருள் சூழ்ந்தது.
வானத்தை ஆரஞ்சு நிறமாக்கிய இந்தப் புழுதிப் புயல் , ஜன்னல்களையும் உடைத்து, துகள்களை சிதறடித்தது.
சில மரங்கள் விழுந்ததாலும், சிதறடிக்கப்பட்ட துகள்களாலும், மக்கள் சிலர் காயமடைந்தனர்.
கடைக்காரர்கள் பலர் கடைகளின் கதவுகளை மூடி, சேதத்தைக் குறைத்துக்கொண்டனர்.
பல கார்களும் சேதமடைந்தன.
டெஹ்ரான் விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. ஆனால் புயலின் வேகம் குறைந்த பின்னர் விமானச் சேவைகள் இயல்பு நிலைக்கு வந்தன.
இந்தப் புழுதிப் புயல் ஏற்படும் என்று முன்கூட்டியே சொல்லாததற்காக, வானிலை முன்னறிவிப்புத் துறை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.