தனது முதலாவது கணவருக்கு பிறந்ததும் 18 வயதுக்கு குறைந்த வயதையுடையதுமான பெண் பிள்ளையைத் தனது பாதுகாப்பில் வைத்துக் கொண்டு அப்பெண் பிள்ளைக்கு உடலில் காயங்களை ஏற்படுத்தி துன்புறுத்திய தாயொருவருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட் இரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் மேற்படி தீர்ப்பை வழங்கினார்.
வாழைச்சேனை கண்ணகிபுரத்தைச் சேர்ந்த கோபாலப்பிள்ளை சிறிதேவி எனும் பெண் தனது முதலாவது கணவருக்குப் பிறந்த ரவிச்சந்திரன் ஹிஸாலி எனும் பெண் பிள்ளையைத் தமது பாதுகாப்பில் வைத்திருந்தாரென்றும் கடந்த 07.02.2007 இல் குறித்த பெண் பிள்ளைக்கு உடல்நல பாதிப்பு வேதனை ஏற்படுத்தும் வகையில் உடலில் காயங்களை ஏற்படுத்தி தண்டனை விதிக்கக் கூடிய குற்றம் புரிந்தாரெனவும் அவர் மீது வழக்குத்தாக்கல் தொடரப்பட்டது.
இந்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிரியான கோபாலப்பிள்ளை சிறிதேவி தானாகவே குற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் எதிரிக்கு பத்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனையும் 15 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்டஈடும் வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்தார்.
15 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்த தவறினால் 6 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு கட்டத் தவறினால் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் எதிரி அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.