ஒற்றையாட்சி மற்றும் சமஷ்டி என்று சொற்பிரயோகங்களில் நாம் ஒட்டிக்கொண்டு இருப்போமானால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது கடினமாகிவிடும். எனவே ஒற்றையாட்சி முறைமையின் கீழ் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களுடன் ஒத்திசைவு பட்டியலையும் நீக்கி அரசியல் தீர்வுக்கு செல்வதே பொருத்தமாக இருக்கும் என்று சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்தார்.
சிங்கள மொழியில் அமையும் அரசியலமைப் பில் ஒற்றையாட்சி (ஏக்கிய) என்று குறிப்பிட லாம். ஆங்கிலத்திலும் ( ஏக்கிய) என்ற சொற்பிரயோகத்தையே பயன்படுத்தலாம்.
அப்போது தான் நிலைமையை சமாளிக்க இயலும். இந்த விடயத்தில் தமிழ்க் கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமானதுதான். ஆனால் சொற்பிரயோகத்தில்
தொங்கிக்கொண்டிருந்தால் எதுவும் நடக்காமல் போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒற்றையாட்சியின் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை ஏற்க முடியாது என்று தமிழ்க் கூட்டமைப்பினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் டிலான் பெரெரா மேலும் குறிப்பிடுகையில்
இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வுகாணப்படவேண்டும் என்பதில் நான் எனது வாழ்நாள் முழுவதும் தீவிரமாக இருக்கின்றேன். ஆனால் தனிப்பட்ட டிலான் பெரெரா என்பவர் சமஷ்டிக்கும் விருப்பம் என்பதனை தெளிவாக குறிப்பிடவேண்டும்.
காரணம் சமஷ்டி என்பது நாட்டை பிரிப்பதல்ல. அது நாட்டை ஒன்றிணைக்கும் செயற்பாடாகும். எனவே தனிப்பட்ட டிலான் பெரெரா சமஷ்டி முறைமையில் தீர்வுத்திட்டம் வருவதையே விரும்புகின்றேன்.
ஆனால் சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் என்ற வகையில் அவ்வாறு கூற முடியாது. அவ்வாறு பார்க்கும்போது ஒற்றையாட்சி முறைமையின் கீழ் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களுடன் ஒத்திசைவு பட்டியலையும் நீ்க்கி தீர்வுக்கு செல்வதே பொருத்தமாக இருக்கும் என்பது எமது நிலைப்பாடாகும்.
பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கி ஒத்திசைவு பட்டியலை நீக்கினால் அது மிகப்பெரிய அதிகாரப் பகிர்வாக இருக்கும். எனவே அதுவே சிறந்த தெரிவாக இருக்கும்.
மாறாக அதனை விடுத்து ஒற்றையாட்சி சமஷ்டி என்று சொற்பிரயோகங்களில் நாம் ஒட்டிக்கொண்டு இருப்போமானால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது கடினமாகிவிடும்.
ஒற்றையாட்சி மற்றும் சமஷ்டி என்ற விடயத்தில் தமிழ்க் கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமானதுதான். ஆனால் சொற்பிரயோகத்தில் தொங்கிக்கொண்டிருந்தால் எதுவும் நடக்காமல் போய்விடும்.
அதற்கு நாங்கள் சிறந்த தீர்வை வைத்திருக்கின்றோம். அதாவது சிங்கள மொழியில் அமையும் அரசியலமைப்பில் ஒற்றையாட்சி (ஏக்கிய) என்று குறிப்பிடலாம்.
ஆங்கில மொழியில்வரும் அரசியலமைப்பு பிரதியிலும் ஆங்கில எழுத்துக்களைக்கொண்டு ஒற்றையாட்சி ( ஏக்கிய) என்ற சொற்பிரயோகத்தையே பயன்படுத்தலாம்.
ஆனால் இந்த ஒற்றையாட்சி முறைமையின் கீழ் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும். அத்துடன் 13 பிளஸ் என்ற இடத்துக்கே செல்ல முடியும். எனவே இந்த விடயம் குறித்து கூட்டமைப்பு சிந்திக்கவேண்டும்.
எங்களது இந்த யோசனை தொடர்பில் பிரதான வழி நடத்தல் குழுவில் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்திருந்தது. அப்போது நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் தற்போது ஒற்றையாட்சியின் கீழ் தீர்வை ஏற்கமாட்டோம் என கூட்டமைப்பு கூறியிருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும் என்றார்.