எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாம் தடவையாக போட்டியிடுவதில் அரசியலமைப்பில் எவ்விதமான சட்ட சிக்கலும் இல்லை. சிலர் இறந்து அடக்கம் செய்யப்பட்ட சட்டங்களுக்கு உயிர்கொடுக்க முயற்சிக்கின்றனர் என்று சிரேஷ்ட சட்டத்தரணிகள் இருவர் தெரிவித்தனர்.
அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தகூட்டம் ஒன்றில் உரையாற்றிய சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயமான்ன ஆகியோர் மேற்கண்ட விடயத்தை வலியுறுத்தினர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்று ஒரு சிலரினால் முன்வைக்கப்படும் தர்க்கம்விவாதிக்கவேண்டிய விடயமே அல்ல. அவ்வாறு ஒரு பிரச்சினையே சட்டததில் இல்லை. ஜனாதிபதியினால் அடுத்தத் தேர்தலில் போட்டியிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற இந்த மக்கள் கருத்தாடல் நிகழ்வை புத்திஜீவிகள் அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயமான்ன உரையாற்றுகையில்
அரசியலமைப்பின் 31 ஆவது சரத்து மற்றும் 92 ஆவது சரத்து என்பனவே ஜனாதிபதி தேர்தல் குறித்து குறிப்பிடுகின்றன. 92 ஆவது சரத்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் குறித்து குறிப்பிடுகின்றது.
31 ஆவது சரத்தின் இரண்டாம் பிரிவானது ஜனாதிபதி தேர்தலில் இரண்டு தடவைகள் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒருவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறுகின்றது.
31 இன் 2 ஆம் பிரிவு நீக்கம்
ஆனால் கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி நாட்டில் 18 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் திருத்தச் சட்டத்தின் ஊடாக அரசியலமைப்பின் 31 ஆவது சரத்தின் 2 ஆம் பிரிவு நீக்க்பபட்டுவிட்டது.
அவ்வாறெனின் ஒருவர் எத்தனை தடவைகளும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும். அதற்கு முன்னர் இரண்டு தடவைகள் பதவி வகித்திருந்தாலும் போட்டியிடலாம்.
தற்போதுள்ள சட்டம்
இதில் எழுப்புவதற்கு எவ்விதமான சந்தேகங்களும் இல்லை. அதாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும்போது உள்ள சட்டத்தின் பிரகாரமே தகுதிகள் பார்க்கப்படும். அந்தவகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாம் தடவையாக போட்டியிடுவதில் அரசியலமைப்பில் எவ்விதமான சட்ட சிக்கலும் இல்லை.
சந்திரிகாவும் போட்டியிடலாம்
இங்கு ஒரு பிரச்சினையும் இல்லை. காரணம் அரசியலமைப்பின் 31 ஆவது சரத்தினட் 2 ஆம் பிரிவு தற்போது அமுலில் இல்லை. இல்லாத சட்டத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.
அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம். முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். ஆனால் ஜனாதிபதியினால் மூன்றாவது தடவையாக போட்டியிட முடியும். பல உதாரணங்களை இதற்கு எம்மால் கூற முடியும் என்றார்.
சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி உரையாற்றுகையில்
நாங்கள் இந்த விடயத்தில் தர்க்கங்களை முன்வைக்கலாம். ஆனால் அரசியலமைப்பு தொடர்பான இறுதி சட்ட வியாக்கியானத்தை வழங்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கே உள்ளது என்பதனை முதலில் தெரிவிக்கின்றேன். தர்க்கங்களை முன்வைப்பதற்கும் கருத்துக்களை தெரிவிப்பதற்கும் நாட்டில் ஜனநாயக உரிமை உள்ளது.
போட்டியிட முடியும்
கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் திருத்தச் சட்டத்தின் ஊடாக அரசியலமைப்பின் 31 ஆவது சரத்தின் 2 ஆம் பிரிவு நீக்க்பபட்டுவிட்டது.
இந்த 31 ஆவது சரத்தின் இரண்டாவது பிரிவுதான் ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியாது என்று கூறியது. ஆனால் அது நீக்கப்பட்டுவிட்டது.
அவ்வாறெனின் ஒருவர் எத்தனை தடவைகளும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும். அந்தவகையில் வேட்பு மனுக் கோரப்படும் காலத்தில் எந்த சட்டம் நடைமுறையில் இருக்கின்றதோ அதனையே நாங்கள் பார்க்கவேண்டும்.
எனது நிலைப்பாடு
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேர்தல் நடைபெற்றது. ஆனால் ஜனாதிபதி 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே பதவியேற்றார். அதனால் 2014 நவம்பரின் பின்னர் அவரால் தேர்தலுக்குச் செல்ல முடியும்.
ஆனால் என்னுடைய நிலைப்பாட்டின் படி 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னரே அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்ல முடியும். ஆனால் நீதிமன்றம் இதற்கு முடிவு கூறலாம். நாங்கள் தர்க்கங்களை முன்வைக்கலாம்.
நீதிமன்றத்தை நாடுங்கள்.
அரச சேவைக்கு ஒருவர் செல்வதற்கு சாதாரண தரத்தில் ஆங்கில மொழியில் சி. தரம் பெற்றிருக்கவேண்டும் என்று சட்டம் உள்ளதாக வைத்துக்கொள்வோம். எனவே ஆங்கில மொழிப் பாடத்தில் சி தரம் பெறாதவர்கள் அரச சேவையில் இணைய முடியாது.
ஆனால் 2010 ஆம் ஆண்டு அவ்வாறு ஆங்கில மொழியில் சி தரம் பெறாதவர்களும் அரச சேவைக்கு வரலாம் என்று சட்டம் கொண்டுவரப்பட்டால் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் படித்து சி தரம் பெறாதவர்களும் அரச சேவையில் இணையலாம்.
இது இலகுவாக புரிந்துகொள்ளவேண்டிய விடயமாகும். அவ்வாறு இந்த ஜனாதிபதி தேர்தல் விவாகரமும் உள்ளது. இதனை எதிர்ப்பவர்கள் நீதிமன்றத்தை நாடுங்கள்.
இறந்துபோன சட்டம்
இன்று இறந்துபோன சட்டத்துக்கு உயிர்கொடுக்க முயற்சிக்கின்றவர்கள் ஏன் 18 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது சர்வஜன வாக்கெடுப்பு தேவை என்று கூறவில்லை. அந்த நேரம் அவர்கள் யாருடன் இருந்தனர் என்று தெரியவில்லை.
மக்களின் விருப்பமே முக்கியம்
18 ஆவது திருத்தச் சட்டத்தை நான் ஆதரிக்க ஒரு முக்கிய காரணம் உள்ளது. ஒரு தலைவரை மக்கள் 50 வீதத்துக்கு மேல் வாக்களித்து தெரிவு செய்தால் அதனை நாங்கள் ஏற்கவேண்டும். அதுதான் ஜனநாயகம். ஜனாதிபதியாக இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்று அமெரிக்க அரசியலமைப்பில் உள்ளது.
அதனை அன்று முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன இலங்கைக்கும் கொண்டுவந்துவிட்டார். மக்களுக்கு அந்தத் தலைவர் தேவை எனின் அதனை தடுக்க முடியாது. அதனை இந்த 18 ஆவது திருத்தச் சட்டம் உறுதிபடுத்துகின்றது.
உலக நாடுகள் பல தடவை பிரதமர்கள்
இந்தியா பிரிட்டன் ஸ்வீடன் நோர்வே அவுஸ்திரேலியாபோன்ற நாடுகளில் பிரதமர்கள் எத்தனையோ தடவைகள் பதவி வகித்துள்ளனர். மக்கள் விரும்பினால் அதனை செய்ய வேண்டும். இரண்டு தடவை அல்லது ஐந்து தடவையும் பதவி வகிக்கலாம். ஜனாதிபதி முறைமையை நீக்கவேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் ஜனாதிபதி முறைமை இன்னும் நீண்டகாலத்துக்கு இருக்கவேண்டும் என்று நான் கருதுகின்றேன்.
கூட்டமைப்பு அரசை தீர்மானிக்கும் நிலை வரலாம்
காரணம் தெற்கில் சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசிய கட்சி மக்கள் விடுதலை முன்னணி என்பன உள்ளன. ஆனால் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே உள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி முறைமை இல்லாவிடின் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக கூட்டமைப்பு உருவாகிவிடும். அப்போது அடிக்கடி கவிழும் பாராளுமன்றம் உருவாகிவிடும்.
ஏற்றுக்கொள்ள முடியாத பொலிஸ் அதிகாரங்களை கேட்டு பேரம் பேசும் நிலைமை உருவாகிவிடும். காரணம் புலிகளை அழித்து இன்று வடக்கு மக்கள் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு 425000 வாக்குகள் உள்ளன. எனவே ஜனாதிபதி முறைமை தொடர்ந்து நீடிக்கப்படவேண்டும்.
ஆனால் அதன் அதிகாரங்கள குறைக்கப்படவேண்டும். ஜனாதிபதியும் சாதாரண மனிதரைப் போன்று சட்டத்தின் முன் சமமானவர் என்ற வகையில் திருத்தங்கள் வரவேண்டும்.
6 மாதத்தில் உயிரை விடப்போகிறார் மாவையார்! அடுத்த தமிழரசுக்கட்சி தலைவர் யார்?