நான் ஜன்னலின் ஊடாக பார்த்தபோது அக்கா சீலையினால் வீட்டினுள் கழுத்தில் சுருக்கு போட்டுக் கொண்டிருந்தாள். உடனே ஒடி வந்து கதவைத் திறந்து அக்காவின் கால்களை பிடித்து தூக்கியபடி கூக்குரலிட்டேன்.
அப்போது அயலவர்கள் ஓடிவந்து சுருக்கை கழற்றி அவரை நிலத்தில் கிடத்தினர்.
இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட எருவில் கிராமத்தைச் சேர்ந்த உ.சுதர்சினி, (வயது 21) என்பவரின் மரண விசாரணையில் சாட்சியமளித்த அவரின் சகோதரி உ.கீர்த்தனா தனது சாட்சியத்தின் போது கூறினார்.
இவரின் மரண விசாரணை மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி த.காராளசிங்கத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்டது. அப்போது சாட்சி மேலும் கூறியதாவது,
அக்காவின் காதலர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளார். தொலைபேசி மூலம் அவர் அக்காவுடன் உரையாடுவார். கடந்த இரவும் அவர் அக்காவுடன் கதைத்தார்.
ஆனால், என்ன கதைத்தார் என்று தெரியாது. விடிந்ததும் நான் எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்துக்குச் சென்றேன் அங்கு நான் 9 ஆம் தரம் படிக்கிறேன்.
நான் பாடசாலை முடிந்து நண்பகல் வீடு வந்தபோது அக்கா வீட்டில் இருந்தார். எனினும், அவரின் முகம் வாட்டமாக காணப்பட்டது. நான் பாடசாலை சீருடையை மாற்றிவிட்டு வந்தபோது அக்காவைக் காணவில்லை.
ஜன்னலினூடாக பார்த்த போது அவர் தற்கொலை முயற்சி செய்து கொண்டிருப்பதைக் கண்டு ஓடி வந்து கதவை ஒருவாறு திறந்து கொண்டு உள்ளே சென்றேன்.
பின்னர் அக்காவை ஒரு முச்சக்கர வண்டியில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன். அவரை பரிசோதனை செய்த வைத்தியர் அவரின் உயிர் பிரிந்துவிட்டதாகக் கூறினார்.
பின்னர் வீடு வந்து வயலுக்குச் சென்றிருந்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தகவல் அனுப்பினேன். களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரி இல்லை என்றும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமாகையால் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் தெரிவித்தனர். இவ்வாறு கீர்த்தனா கூறினார். இறந்தவரின் தந்தையான பா.உதயகுமாரும் சாட்சியமளித்தார்.
பிரேத பரிசோதனை செய்த டாக்டர் மஞ்சநாயக்க கழுத்தில் சுருக்கிட்டு மூச்சுத் திணறியதால் மரணம் ஏற்பட்டது என்று அறிக்கை சமர்ப்பித்தார்.
மரண விசாரணை செய்த மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி த.காராளசிங்கம் தற்கொலை என்று தீர்ப்பு வழங்கினார்.
இந்திய அணி தோல்வியடைந்ததும் மயங்கி விழுந்தவர் திடீர் மரணம் : கம்பஹாவில் சம்பவம்
07-04-2014
பங்களாதேஷில் இடம்பெற்று முடிந்த உலகக் கிண்ண இருபது-20 போட்டித் தொடரின் இறுதிபோட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என பந்தயம் கட்டியிருந்த கம்பஹா வர்த்தகர் ஒருவர் இந்தியாவின் தோல்வியை அடுத்து திடீர் என மரணமடைந்த சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.
கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இந்தியா இறுதிப் போட்டியில் வெற்றிபெறுவது உறுதியென தெரிவித்து பந்தயம் கட்டியுள்ளார். அத்துடன் நேற்று இரவு இடம்பெற்ற குறித்த இறுதிப் போட்டியை பந்தய நிலையம் ஒன்றில் இருந்து அவர் கண்டு களித்துள்ளார்.
இதன் போது இறுதியில் இலங்கை அணி வெற்று பெற்றுவிட்டதாகவும் இந்தியா தோல்வியடைந்துவிட்டதாகவும் அறிவிக்கப்படவே குறித்த வர்த்தகர் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.
இதனை அடுத்து அந்த வர்த்தகர் உடனடியாகவே கம்பஹா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கம்பஹா திடீர் மரண விசாரணை அதிகாரி வைத்தியர் பீ.பீ.ஆர்.பீ.ராஜபக்ஷ முன்னிலையில் இன்று இடம்பெற்றது. இதன் போது சாட்சியமளித்த குறித்த வர்த்தகரின் மனைவி இதற்கு முன்னர் தனது கணவருக்கு எவ்வித நோய்களும் இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணைகளில் திடீர் மாரடைப்பு காரணமாகவே குறித்த வர்த்தகர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.