இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலையெடுக்கும் ஆபத்து தோன்றியிருப்பதாக ஜெனீவாவில் பீதியைக் கிளப்பியதன் மூலம் உள்நாட்டில் நடக்கும் ‘புலிவேட்டை’யை அரசாங்கம் நியாயப்படுத்தியிருக்கிறது.
புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைவதாக கோபி என்பவரைத் தேடத் தொடங்கிய அரசாங்கம் இப் போது, மெல்ல மெல்ல தமது தேடுதல்களையும் கெடுபிடிகளையும் விரிவாக்கியிருக்கிறது.
ஜெனீவா கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த போது தொடங்கிய இந்த இராணுவக் கெடுபிடிகளின் பின்னணி கள் குறித்து பலரும் பலவித சந்தேகங்களை எழுப்பியிருந்தனர்.
ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், வடக் கில் படைக் குறைப்புச் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதை தடுப்பதற்காகவே – இந்தப் ‘புலிவேட்டை’யை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பலரும் கருதியிருந்தனர்.
ஏனென்றால், வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர், படைக்குறைப்பை மேற்கொண்டு, வடக்கில் சிவில் வாழ்வில் இருந்து படையினரின் தலையீடுகளை நீக்க வேண்டும் என்ற கருத்து, வெளிநாடுகள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது.
அதற்கு அரசாங்கமோ, வடக்கில் இருந்து 35 சதவீதமான படையினரை குறைத்து விட்டதாகவும், தற்போது அங்கு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையானளவு படையி னரே இருப்பதாகவும், பதிலளித்து வந்தது. ஆனாலும், வடக்கில் இருந்து படைகளை குறைத்தது பற்றிய முழுமையான ஆதாரத்தை அரசாங்கத்தினால் வெளியிட முடியவில்லை.
வடக்கின் படைக்குறைப்பை வலியுறுத்திய எந்த உள்நாட்டு, வெளிநாட்டுத் தரப்புகளுமே, அரசாங்கத்தின் கணக்கை நம்பவில்லை.
நம்பக்கூடிய வகையில் அரசாங்கத்தின் கணக்கு அமைந்திருக்கவும் இல்லை.
இந்தநிலையில் தான், வடக்கில், அரசாங்கம் ‘புலிவேட்டை’ யை ஆரம்பித்த போது, இது வடக்கில் நிலைமை சரியா கவில்லை என்று கூறி, ஜெனீவாவில் படைவிலக்கல் பற்றிய அழுத்தங்களை சமாளிக்க அரசாங்கம் முற்படுகிறதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், அரசாங்கமோ அந்தக் கோணத் தில் சிந்தித்ததாகத் தெரியவில்லை.
வடக்கில் படையினரின் கொள்ளள வை ஒரு தீவிரமான பிரச்சினையாக அரசாங்கம் ஜெனீவாவில் கருதவில்லை. ஏனென்றால், அதனை தமது உள்நாட்டு பிரச்சினையாக சுலபமாகச் சமாளித்து விடக்கூடிய திறன் அரசாங்கத்துக்கு இருந்தது.
அதைவிட, வடக்கில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள முடியாது என்று அரசாங்கம் பல சந்தர்ப்பங்களிலும், தெளிவாகவே கூறிவிட்டது
படைக்குறைப்பு விவகாரத்தில், எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்று வெளிப்படையான முடிவை எடுத்து அறிவித்திருந்த அரசாங்கத்துக்கு, அதை நியாயப்படுத்துவதற்கு ‘புலி வேட் டை’ என்ற காரணம் ஒன்று தேவைப்பட்டிருக்காது.
ஆனால், அரசாங்கமோ அதிகம் கவனத்தில் செலுத்திய விடயம் வேறானது.
வேறொரு நிகழ்ச்சிநிரலின் அடிப்படையிலானது. அதனை யாரும் உடனடியாகப் புரிந்து கொள்ள முடியவும் இல்லை.
இலங்கையில் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத் தின் மூலம் விசாரணை நடத்தும் விடயத்தை தான் அரசாங்கம் ஆபத்தான சமிக்ஞையாகப் பார்த்தது.
அதற்கு இந்தப் ‘புலிவேட்டை’ யை எப்படிப் பயன்படுத்தலாம் என்று அரசாங்கம் சிந்தித்ததாகவே தெரிகிறது.
pirbakaranவடக்கில் நடக்கும் ‘புலிவேட்டை’ குறித்து ஜெனீவாவில், பிரச்சினை எழுப்பப்பட்ட போது, அதற்கு அரசாங்கம் கொடுத்த பதிலும், ‘புலிவேட்டை’க் கான காரணத்தை விபரித்து அரசாங்கம் கூறிய தகவல்களும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியவை.
அதாவது, அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அது இலங்கையில் பயங்கரவாதத்தைத் தோற்றுவிக்கும் என்று அரசாங்கம் கூறியது.
வெளிநாடுகளில் உள்ள புலிகள் இதனால் புத்துயிர் பெறுவார்கள் என்றும், இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலையெடுப்பதற்குக் காரணமாகி விடும் என்றும் இலங்கை அரசின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க திரும்பத் திரும்ப எச்சரித்திருந்தார்.
அதாவது, இந்தப் ‘புலிவேட்டை’ யைப் பயன்படுத்தி, அமெரிக்கத் தீர்மானத்தைத் தடுக்கும் உத்தியையே இலங்கை கையாளப் பார்த்தது.
ஆனால், ஜெனீவாவில் அரசாங்கத்தின் இந்த முயற்சி பலிக்கவில்லை.
ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தினால், மீண்டும் புலிகள் எழுச்சி பெறுவார்கள் என்றோ, பயங்கரவாதம் தலைதூக்கும் என்றோ இலங்கை அரசாங் கம் கூறிய கதை அங்கு எடுபடவில்லை.
ஏனென்றால், போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளாகின்ற நிலையில், போருடன் தொடர்புடைய – அதன் எச்சங்களான – எந்தவொரு சின்னஞ்சிறிய வன்முறைச் சம்பவம் கூட, வடக்கு, கிழக்கில் நிகழ்ந்திருக்கவில்லை.
மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் வடக்கு, கிழக்கில் தோற்றம் பெறுவதற்கான சூழல் இல்லை என்பதை உலகம் நன்றாகவே அறிந்து வைத்திருந்தது.
இலங்கை அரசாங்கமும் கூட, மீண்டும் தீவிரவாதம் தலையெடுக்க வாய்ப்பே இல்லை என்றும், அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் பலமுறை தெளிவாக கூறியிருந்தது.
அதுமட்டுமன்றி, இலங்கை இராணு வம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் என்று பாதுகாப்புத் துறை சார்ந்த எல்லா அமைப்புகளினதும் புலனாய்வுக் கட்டமைப்புகள் வடக்கிலும் கிழக்கிலும் மிக வலுவாகவே கட்டியெழுப்பப்பட்டுள்ளன.
இத்தகையதொரு புலனாய்வு வலையமைப்பையும், பாதுகாப்பு வலைப்பின்னலையும், உடைத்துக் கொண்டு ஒரு தீவிரவாத இயக்கம் தலைதூக்குவதென்பது எந்தளவுக்குச் சாத்தியமானது என்பதை சர்வதேசம் அறியாததல்ல.
எனவே, அரசாங்கம் கூறிய நியாயங்களை ஜெனீவா கருத்தில் எடுக்கவோ, கவனத்தில் கொள்ளவோ இல்லை.
அதேவேளை, அரசாங்கம் நடத்தி வருகின்ற இந்தப் ‘புலிவேட்டை’ ஒரு கட் டத்தில் அரசாங்கத்தையே திருப்பித் தாக் கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், போர் முடிவுக்கு வந்த பின்னர், பொறுப்புக்கூறலின் முக்கியத்துவம் குறித்து அமெரிக்கா வலியுறுத்திய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஆயுதப் போராட்டத்தின் மீள் எழுச்சி குறித்தும் சுட்டிக்காட்டியது நினைவிருக்கலாம்.
ரொபட் பிளேக் தொடக்கம், நிஷா பிஷ்வால் வரையிலான அமெரிக்க இராஜதந்திரிகள் வரை, இதனைக் குறிப்பிட்டுள்ளார்கள். தமது அனுபவத்தின்படி, சரிவரப் பொறுப்புக்கூறாத,- நல்லிணக்கத் தை ஏற்படுத்தத் தவறிய நாடுகளில், 10, அல்லது 20 வருடங்களில் தீவிரவாதம் மீளத் தலையெடுத்திருப்பதாக அமெரிக்கா கூறிவந்துள்ளது.
அதேபோன்ற நிலை இலங்கையிலும் ஏற்படலாம் என்பதால், பொறுப்புக்கூறல் மிக முக்கியம் என்று அமெரிக்கா சுட்டிக்காட்டி வந்தது.
இப்போது, அரசாங்கம் கூறும் பயங்கரவாத மிரட்டலை – அமெரிக்காவினது முன்னைய எச்சரிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஒருவேளை இது சரியானதாக இருக்கலாமோ என்ற எண்ணமும் ஏற்படலாம்.
ஆனால், தற்போதைய சூழலில் அவையிரண்டையும் முடிச்சுப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை.
அதேவேளை, இப்போது இலங்கை அரசாங்கம் தீவிரவாதம் தலையெடுப்பதாக நிறுவ முயன்றால், அதனால் தான், பொறுப்புக் கூறவேண்டும் என்று வலியுறுத்தியதாக அமெரிக்கா பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது,
எனவே, அரசாங்கத்தின் இந்தப் புலிப் பூச்சாண்டி நீண்டகாலத்துக்கு நீடிக்க வாய்ப்புக்கள் குறைவு.
ஏனெனில் இது தொடருமேயானால், அது இன்னும் புதிய பிரச்சினைகளை சர்வதேச அரங்கில் அரசாங்கத்துக்கு ஏற்படுத்தி விடும்.
ஜெனீவா சூடு குறையத் தொடங்க, இந்தப் ‘புலிவேட்டை’ களும் அடங்கக் கூடும். ஆனால் அது நிச்சயமானது என்று கூற முடியாது. ஏனென்றால், இந்த அரசாங்கம், ஜெனீவாவுக்குப் பதிலடி கொடுப்பதாக நினைத்து இதைத் தொடரச் செய்யலாம்.
எவ்வாறாயினும், அது தமிழர்களை தம்பக்கம் இழுப்பதற்குப் பதிலாக இன்னும் தூர விலகிச் செல்வதற்கே இடமளிக்கும்.
அது அரசாங்கத்துக்குச் சவாலாக உள்ள நல்லிணக்கத்தை, ஏற்படுத்துவதற்கு இடையூறாக அமையும்.
எது எவ்வாறயினும், புலிப்பூச்சாண்டியைக் காட்டி ஜெனீவா தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ள நிலையில், இதற்காக, தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள நெருக்கடிகள் அவர்களைப் பெரிதும் அசௌகரியத்துக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நடவடிக்கைகளால் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி, அரசாங்கத்துக்கே எதிர்விளைவுகளை ஏற்படுத்துமே தவிர, சர்வதேச சமூகத்துக்கு அல்ல.
-சுபத்ரா-