டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் 4ஆவது வெற்றியை பதிவு செய்தது. 8 அணிகள் இடையிலான 7ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 2ஆவது கட்ட ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஓப்’ என்ற அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் மும்பை டெல்லியில் நேற்று நடந்த 23ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 152 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியில் களம் இறங்கி துப்பெடுத்தாடிய குயின்டான் டீ கொக் (42 ஓட்டங்கள்), முரளிவிஜய் (13 ஓட்டங்கள்), கெவின் பீட்டர்சன் (14 ஓட்டங்கள்), தினேஷ் கார்த்திக் (12 ஓட்டங்கள்), டுமினி (39 ஓட்டங்கள், கெதார் ஜாதவ் (28 ஓட்டங்கள், ஆட்டமிழப்பின்றி) என்று அனைவரும் இரட்டை இலக்கை தொட்டனர். ராஜஸ்தான் தரப்பில் பவுல்க்னெர், பிரவின் தாம்பே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்து 153 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் கருண் நாயர் நங்கூரம் போன்று நிலைத்து நின்று விளையாடினார். அவருக்கு ரஹானே (12 ஓட்டங்கள்), சஞ்சு சாம்சன் (34 ஓட்டங்கள், 2 பவுண்டரி, 2 சிக்சர்), ரஜத் பாட்டியா (17 ஓட்டங்கள்) கணிசமான ஒத்துழைப்பு கொடுத்ததால், ராஜஸ்தான் அணி வெற்றியை நோக்கி துரிதமாக பயணித்தது.
இறுதியில் கருண் நாயரும், ஷேன் வொட்சனும் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். ராஜஸ்தான் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 156 ஓட்டங்கள் திரட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை சுவைத்தது.
கருண் நாயர் 73 ஓட்டங்களுடனும் (50 பந்து, 8 பவுண்டரி 2 சிக்சர்), வொட்சன் 2 சிக்சருடன் 16 ஓட்டங்களுடனும் (10 பந்து) களத்தில் இருந்தனர். 6ஆவது ஆட்டத்தில் ஆடிய முன்னாள் சாம்பியன் ராஜஸ்தானுக்கு இது 4-வது வெற்றியாகும். 6-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய டெல்லிக்கு 4-வது தோல்வியாகும்.