ஐ.நா. அமர்வில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையை, வடகொரிய அதிகாரிகள் ‘நாயின் குரைப்புடன்’ ஒப்பிட்டுள்ளனர்.
நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா.வின் 72வது அமர்வில், ட்ரம்ப் தனது கன்னியுரையை நிகழ்த்தினார். அதில், ‘அமெரிக்காவை தொடர்ந்து அச்சுறுத்திவந்தால், வடகொரியாவை நிர்மூலமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அதே ஐ.நா. அமர்வில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றடைந்த வடகொரிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரி யோங் ஹோவிடம், ட்ரம்ப்பின் பேச்சு குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஹோ, “வடகொரியாவில் ஒரு பழமொழி உண்டு. நாய் குரைத்தாலும் வீரர்களின் நடைபவனி தொடரும் என்று! அதுபோலத்தான் ட்ரம்ப்பின் எச்சரிக்கையும். நாய் போலக் குரைத்து எம்மை அச்சுறுத்த நினைத்தால் அது நாய் கண்ட கனவு போலத்தான் ஆகும்” என்று குறிப்பிட்டார்.