பாலிவுட் சூப்பர் ஹீரோ சல்மான்கானுக்கு, தங்கை என்றால் ரொம்பப் பிடிக்கும். அதுவும், இளைய தங்கை அர்பிதா என்றால் அவ்வளவு உயிர். ஆச்சர்யம் என்னவென்றால் அர்பிதா, சல்மானுக்கு உடன் பிறந்த சகோதரி அல்ல.
‘மும்பையில் தாய்-தந்தையை இழந்த அர்பிதா சல்மானின் அம்மாவால் தத்தெடுக்கப்பட்டவர்; ரோட்டோரத்தில் அழுது கொண்டிருந்த குழந்தை அர்பிதா, எதேச்சையாக சல்மானின் தந்தை சலீம்கான் மற்றும் அவரின் மனைவியான நடிகை ஹெலன் கண்களில் பட்டார்’ என்று அர்பிதா, சல்மானின் தங்கையானதற்கு நிறைய கதைகள் சொல்கிறார்கள். சரி அதை விடுவோம்.
சாதாரண அர்பிதாவை அர்பிதா கான் ஆக்கி, லண்டனில் படிக்க வைத்து, இப்போது மும்பையின் பிஸினஸ் புள்ளியான ஆயுஷ் ஷர்மா என்பவருக்கு மணமுடித்தது வரை, அண்ணனாக தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியில் இருக்கிறார் சல்மான்.
2014-ல் நடந்த திருமணங்களில், முக்கியமான திருமணமாக தன் தங்கை திருமணம் பேசப்பட வேண்டும் என்ற வெறியோடு, பல கோடிகளை இறைத்து, பல வி.ஐ.பி.க்களை வரவழைத்து இதைச் செய்து முடித்திருக்கிறார் சல்மான்.
திருமணத்தன்று, ‘‘என்னைப்போல் அதிர்ஷ்டசாலிப் பெண் இந்த உலகத்தில் நிச்சயம் கிடையாது!’’ என்று அண்ணனின் தோள் சாய்ந்து அர்பிதா அழுதது, அண்ணன் – தங்கைப் பாசத்தின் உண்மையான சாட்சி. திருமணம் முடிந்த கையோடு, 16 கோடி செலவில் மும்பையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றையும் தங்கைக்குப் பரிசளித்தார் சல்மான்.
திருப்தியடையாத சல்மான், தடாலென ரோல்ஸ்ராய்ஸ் காரையும், திருமணம் நடந்த ஹைதராபாத் மண்டபத்துக்கு சஸ்பென்ஸாக வரவழைத்து விட்டார். 453 குதிரைகளின் சக்தி கொண்ட இந்த ரோல்ஸ்ராய்ஸ் பேன்டம் பெட்ரோல் கார், 12 சிலிண்டர் கொண்டது. இதன் விலை 6 கோடி ரூபாய்.
தங்கையை மேலும் மேலும் சந்தோஷப்படுத்தி, சந்தோஷப்பட்டுக் கொண்டே இருக்கிறார் அண்ணன் சல்மான்.