கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான தசாவதாரம் திரைப்படத்திலேயே, உலக நாயகன் கமல் ஹாஸன், எபோலா குறித்து எச்சரித்தது தற்போது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 4 ஆயிரத்து 500 பேரின் உயிரை குடித்த எபோலா வைரஸ் அமெரிக்காவுக்குள்ளும் நுழைந்துவிட்டது.
தற்போது உலக மக்கள் பயப்படுவது எபோலா வைரஸை பற்றி தான். காரணம் வைரஸ் தாக்கினால் பெரும்பாலும் மரணம் தான். இந்நிலையில் கமல் 6 ஆண்டுகளுக்கு முன்பே எபோலா பற்றி எச்சரித்தது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கமல் ஹாஸன் கதை, திரைக்கதை எழுத, கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய திரைப்படம் தசாவதாரம். பத்து கதாபாத்திரங்களில் நடித்துள்ள கமல், அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் எபோலா குறித்து எச்சரித்திருப்பார்.
அமெரிக்காவில் இருந்து ஒரு பார்சல் பாட்டி வேடத்தில் இருக்கும் கமல் கையில் கிடைக்குமே. அந்த காட்சியில் தான் கமல் ‘இந்த பார்சலில் இருப்பது பயோ ஆயுதம். இது எபோலா – மார்பர்க் ஆகும். மிகவும் ஆபத்தானது’ என்று கூறியிருப்பார்.
இத்திரைப்படத்தை பார்த்தவர்கள் கமல் ஏதோ புரியாத ஒன்றை பற்றி பேசுகிறார் என்று நினைத்தனர். தற்போது தான் அவர்களுக்கு எபோலா என்றால் என்னவென்பது தெரிந்துள்ளது.
2004ஆம் ஆண்டு சுனாமி தாக்கி இலட்சக்கணக்கானோர் பலியாகினர். ஆனால் 2003ஆம் ஆண்டு வெளியான அன்பே சிவம் திரைப்படத்தில் கமல் சுனாமி என்ற வார்த்தையை தெரிவித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் திரைப்படத்தை பார்த்த போது சுனாமி என்பது ஏதோ புதிய வார்த்தை என்பது மட்டுமே பலருக்கு புரிந்தது. மறு ஆண்டு தான் சுனாமியின் அர்த்தத்தை மக்கள் தெரிந்து கொண்டனர்.
கடந்த 2000ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ஹேராம் திரைப்படத்தில் கலவர காட்சியொன்று அமைந்திருந்தது. இந்த திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் கழித்து, குஜராத்தில் கலவரம் நடந்தது.
வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இரண்டு மனநோயாளி கொலைகாரர்களை கமல் கைது செய்வார். இந்த திரைப்படம் வெளியான சில மாதங்கள் கழித்து, நொய்டாவில் மொனிந்தர் – சதீஷ் ஆகியோர் பலரை கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்தது.
எபோலா, சுனாமி, கலவரம், கொலை என்று என்று சில சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே கமல் ஹாஸனின் திரைப்படங்களில் அவை காட்சியாகியுள்ளன குறித்து பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.