தனது 58 வயதான தந்தையை, 25 வயதான மகனொருவன் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கடித்துக் குதறிய சம்பவமொன்று, பொகவந்தலாவை பொலிஸ் பிரிவில், புதன்கிழமையன்று இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட, லெச்சுமி தோட்டம் மத்தியப் பிரிவைச் சேர்ந்த
எஸ்.சுப்ரமணியம் (வயது 58), பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் அவருடைய மகனான, எஸ். ராஜகுமார் என்பவரை கைது செய்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தோட்டத்தொழிலாளியான சுப்ரமணியம், தன்னுடைய ஊழியர் நம்பிக்கை நிதி பெறுவதற்காக விண்ணப்பித்துவிட்டு, கொழும்புக்குச் சென்று வேலைசெய்துள்ளார். அங்கு, ஏற்பட்ட விபத்தொன்றில் அவருடைய இடுப்பு பாதிப்படைந்துள்ளது.
ஆகையால், வேலையை விட்டுவிட்டு, வீட்டுக்குச் சென்று தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், ஊழியர் நம்பிக்கை நிதியும் கிடைத்துள்ளது.
அதனைபெற்றுக்கொண்ட மகன், வீடு கட்டுவதாகக் கூறி, இரண்டொரு அறைகளை மட்டுமே கட்டிவிட்டு, மிகுதிப் பணத்தை குடித்துநாசமாக்கியுள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய மனைவியென, பெண்ணொருவரையும் வீட்டுக்கு அழைத்துவந்துள்ளார். இவ்வாறான நிலையில், தந்தைக்கும் மகனுக்குமிடையில் அடிக்கொருதடவை, சண்டை ஏற்பட்டுள்ளது.
சம்பவதினமாக கடந்த 19ஆம் திகதியன்று, இரவு 7:30 மணியளவில் நிறைபோதையில் வந்திருந்த மகன், வீட்டைவிட்டு வெளியேறுமாறு தந்தையுடன் சண்டையிட்டுள்ளார்.
அவரை, தலையில் தாக்கி, கீழே தள்ளிவிட்டு, வயிறு மற்றும் கழுத்துப்பகுதிகளில் கடித்துக் குதறியுள்ளார்.