அழகிரியை கட்சியிலிருந்து நீக்கியதன் மூலம் ஒரு தொல்லை தீர்ந்தது என்று தி.மு.க. எதிர்பார்த்தது. ஆனால் காலைச் சுற்றிய பாம்பாக அழகிரி மீண்டும் மீண்டும் பிரச்சினை கொடுத்து வருகிறார். தம்மை கட்சியிலிருந்து யாராலும் நீக்க முடியாதென்றும் தி.மு.க தன்னுடைய கட்சியென்றும் அழகிரி கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, எம்.ஜி.ஆர். தி.மு.க.வி லிருந்து வெளியேற்றப்பட்டபோது அவர் அதிலிருந்து வெளியேறி அ.தி.மு.க. வைத் தொடங்கினார். தான் அவ்வாறு செய்யப்போவதில்லையென்றும் தொடர்ந்து தி.மு.க. விலேயே இருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது தந்தையும் தி.மு.க தலைவருமான மு.கருணாநிதி செயல்பட முடியாத நிலையிலிருப்பதாகவும் எனவே அவரைத் தனது தம்பியும் தி.மு.க. பொருளாளருமான மு.க. ஸ்டாலின் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு இஷ்டம்போல் ஆட்டி வைப்பதாகவும் குற்றஞ் சுமத்தியுள்ளார்.
தி.மு.க. விலிருந்து விலக்கப்பட்டவர்கள், விலகியவர்கள், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள், தி.மு.க. அதிருப்தியாளர்கள் அனைவரையும் சந்தித்து வருகிறார் அழகிரி, இதில் தி.மு.க. விலிருந்து வெளியேறி ம.தி.மு.க.வை உருவாக்கி செயற்படும் வைகோ என்றழைக்கப்படும் வை.கோபால்சாமி முக்கியமானவர்.
இவர் கடந்த வாரம் அழகிரியின் (மதுரையிலுள்ள) வீட்டுக்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். லோக்சபா தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்கும்படியும் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து செயல்படுமாறும் அழகிரிக்கு வைகோ அழைப்பு விடுத்ததாகவும் தெரியவருகிறது.
அழகிரியை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் தி.மு.க.வுக்கு எதிராக செயற்பட வைப்பதற்கு தி.மு.க. வின் எதிரியான வைகோவும் பா.ஜ.க. வும் ஆரம்பத்திலிருந்தே செயற்பட்டு வருவதாக கூறப்பட்டது.
அத்துடன் காங்கிரஸும் அழகிரியை தமது பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மட்டுமன்றி தென் பிராந்தியத்திலுள்ள பல்வேறு எதிர்க்கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் அழகிரியை சந்தித்து தனிப்பட்ட முறையில் (லோக்சபா தேர்தலுக்கு) ஆதரவு கோரி வருகின்றனர்.
இதேவேளை அழகிரியின் செயற்பாடுகளை உன்னிப்பாக அ.தி.மு.க அவதானித்து வருகிறது. அழகிரி தி.மு.க. வுக்கு எதிராக செயற்பட்டு வருவதில் அ.தி.மு.க.வுக்கு அதிக சந்தோசமே!
அதனால் தி.மு.க. வுக்கான வெற்றி வாய்ப்பே பாதிக்கப்படும். அதன் மூலம் இலாபமடைவது அ.தி.மு.க. வேயாகும்! அதேவேளை வைகோ பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அணிகளில் அழகிரி சேர்வதையோ அல்லது அந்த அணிகளுக்கு ஆதரவு வழங்குவதையோ அ.தி.மு.க. சிறிதும் விரும்பவில்லை.
அதேநேரம் எல்லா கட்சிகளிடமும் போய் பேசிவிட்டு இறுதியில் தம்மிடமும் அழகிரி வரக்கூடும் என்று அ.தி.மு.க. எதிர்பார்க்காமலும் இல்லை. எதிரியின் எதிரியுடன் கூட்டுச் சேர்ந்து எதிரியை அழிக்கும் மந்திரம் அழகிரிக்கு தெரியாமலா இருக்கும்.
தனது எதிரியான மு.க.ஸ்டாலினை அழிப்பதற்கு மு.க. அழகிரி எதனையும் செய்வதற்குத் தயாராகவே இருக்கிறார். அதற்கு ஆட்சி அதிகாரத்திலுள்ள அ.தி.மு.க. வை நாட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் நாடுவார் என்பதில் சந்தேகமில்லை.
இந்தளவுக்கு வந்த பின்னர் அண்ணனாவது தம்பியாவது? அல்லது அப்பாவாவது? பதவிதான் முக்கியம்!
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தி.மு.க.வையும் அதன் தலைமைகளையும் விமர்சித்து வந்த அழகிரி தற்போது சற்று அடங்கிப் போனவராகவே காணப்படுகிறார். சென்னை கோபாலபுரத்திலுள்ள (கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று) தாய் தயாளு அம்மாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
அத்துடன் தங்கை கனிமொழியையும் அவரது தாய் ராஜாத்தி அம்மாவையும் சந்தித்து தமக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை எடுத்துக் கூறியுள்ளார். இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்ட கனிமொழியும் அவரது தாயாரும் இது பற்றி கருணாநிதியுடன் பேசி தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதாகவும் அதுவரை பொறுமையுடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மு.க. அழகிரி தமக்குக் கிடைத்த பெரும் சந்தர்ப்பத்தை தவற விட்டுள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க. விலிருந்து நிரந்தரமாகவே அழகிரியை நீக்குவதாக அதன் தலைமை அறிவித்தபோது அழகிரி அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்ததுடன் புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்றே கூறி வருகிறார். சுடச்சுட புதிய கட்சியை ஆரம்பிப்பதற்கு அவருக்குக் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு விட்டதாகவே சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேபோன்று ஒரு காலத்தில் தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். மற்றும் வைகோ போன்றவர்கள் புதிய கட்சிகளை ஆரம்பித்து தமது இருப்பை உறுதி செய்து கொண்டனர். அதேவேளை வெளியேற்றப்பட்ட வேறு சிலர் காணாமல் போயுள்ளனர். இதில் எது அழகிரிக்கு பொருந்தும் என்பது கேள்விக்குறியாகும்.
தி.மு.க. வின் கணக்கு வழக்கை கேட்டார் என்பதற்காக 1972 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி கட்சியிலிருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டார். மகிழ்ச்சியுடன் கட்சியிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர். ஒரே வாரத்தில் ஒக்டோபர் 17 ஆம் திகதி புதிய கட்சியான அ.தி.மு.க.வை ஆரம்பித்தார்.
மக்கள் முன் சென்று உண்மையை விளங்கப்படுத்தினார். தி.மு.க.வின் அதிருப்தியாளர்கள், எதிரிகள், எதிர்க்கட்சியிலுள்ளவர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அனைவரையும் தொடர்ச்சியாக சந்தித்துப் பேசினார். அத்துடன் தமது அரசியல் பயணத்தை நியாயப்படுத்தி திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.
அதன் காரணமாக நல்ல பலன் கிடைத்தது. 1977இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வரானார். அவரை அதற்கு பின்னர் 1987 வரை அசைக்க முடியவில்லை. அவர் விட்டுச்சென்ற சுவடுகள் இன்றும் மறையவில்லை தொடர்கின்றது.
அதுபோன்றே 1993 ஆம் ஆண்டு ஒக்டோபரில் வைகோ தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து அடுத்த வருடம் 1994 இல் புதிய கட்சியான ம.தி.மு.க வை ஆரம்பித்தார். அவர் தமிழகத்தின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இல்லாவிட்டாலும் தமிழக அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக விளங்கினார், தொடர்ந்து இருந்து வருகின்றார் என்பது மறுக்க முடியாதது.
இங்கு ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள் புதிய கட்சியை ஆரம்பித்ததால் அவருக்கு மக்கள் செல்வாக்கு கூடியது. அதிருப்தியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவருடன் அணி திரண்டனர். ஆனால் வைகோ ஆறுதலாக 7 – 8 மாதங்களின் பின்னர் புதிய கட்சியை ஆரம்பித்ததால் அவருக்கு சக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு குறைந்து போனது. இதுதான் உண்மை.
இப்போது அழகிரியை நோக்குவோம். அழகிரியின் தனிப்பட்ட அரசியல் நடவடிக்கையை விடுவோம். ஆனால் தி.மு.க. வின் செல்வாக்கு தென்மண்டலத்தில் – மதுரை தொடங்கி தென்தமிழகத்தில் நிலை நிறுத்தியவர் அழகிரிதான். அங்கு அழகிரி இன்றி அணுவும் அசையாது என்ற நிலையே காணப்பட்டது.
தென்மண்டலத்தை தன்பிடிக்குள் வைத்திருந்த அழகிரிக்கு தொண்டர்கள், கட்சி உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என பல்வேறு தரப்பினரும் நெருக்கமான ஆதரவை வழங்கி வந்தனர். இதற்காகவே அழகிரியை ‘அஞ்சாநெஞ்சன்’ என்று கருணாநிதியே பாராட்டினார்.
அப்படிப்பட்ட அழகிரியை கட்சியிலிருந்து நீக்குவதாக தி.மு.க. தலைமை அறிவித்ததைக் கேட்டு தென்மண்டல தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர். இனி என்ன செய்யப்போகின்றோம் என்று திகைத்தனர். இந்த நிலையில் அழகிரியின் தீர்மானத்தை எதிர்பார்த்தனர்.
அழகிரியும் புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்தனர். அதற்கு ஏற்றதுபோல் அவரது நெருங்கிய ஆதரவாளர்களால் புதிய கட்சிக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ‘கலைஞர் தி.மு.க.’ என்றும் பெயரிட்டனர்.
ஆனால் அவை எதுவும் நடைபெற வில்லை. பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசுவதில் மட்டும் அழகிரி ஈடுபட்டுள்ளார். இதனால் அழகிரியை நம்பியிருந்த அவரது ஆதரவாளர்கள், தி.மு.க. அதிருப்தியாளர்கள், தொண்டர்கள் அனைவர் மத்தியிலும் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. அரசியல் எதிர்காலம் சூனியமாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக அழகிரியை நம்பி தி.மு.க.வை கைவிட்ட கதையாகி விடுமோ என்று பயந்தனர்.
இதன் காரணமாக தற்போது அழகிரியுடன் இருந்த பலர் அவரை விட்டு விலகி தி.மு.க. தலைமையுடன் (குறிப்பாக மு.க.ஸ்டாலினுடன்) இணைந்து வருகின்றனர். பலர் ஏற்கனவே ஸ்டாலினுடன் சேர்ந்து விட்டனர்.
இவ்வாறான நிலையில், அழகிரி என்ன செய்யப்போகிறார்? எம்.ஜி.ஆர் பாதையில் சென்று தி.மு.க.வுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கப் போகிறாரா? வைகோவைப் போன்று பெயருக்கு ஒரு கட்சியே வைத்துக் கொண்டு தலைவராக செயற்பட போகிறாரா? அல்லது தொடர்ந்து தி.மு.க விலேயே இருக்கப்போகிறாரா? இல்லையென்றால் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து கொள்ளப்போகிறாரா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
–நல்லதம்பி நெடுஞ்செழியன்