நடிகர் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கப் போவதாக கூறியுள்ளார். 100 நாளில் தேர்தல் வந்தால் போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார். இதனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவார் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சென்னையில் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கமலுடன் பல விஷயங்கள் குறித்து விவாதித்தாக கூறிய கெஜ்ரிவால், ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துள்ளதாக தெரிவித்தார். அத்துடன், கமல் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன், எந்த கட்சியிலும் இணைந்து செயல்பட விரும்பவில்லை என்றும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேசிய கமல், இது கட்டாயத் திருமணம் என்றும், அதில் இருந்து விடுபட மக்கள் விரும்புவதாகவும் கூறினார். 100 நாட்களில் தேர்தல் வந்தால் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் கூறினார்.
“ரஜினிகாந்தை நான்கைந்து வாரங்களுக்கு முன்பு சந்தித்து பேசினேன். முதலில் ஊழலுக்கு எதிராக போராடுவதற்காக இருவருக்குமே ஒரு பொதுவான இலக்கு உள்ளது.
ஆனால் ஒரு பாதையில் செல்கிறேன், அவர் ஒரு பாதையில் செல்கிறார். எங்கள் சந்திப்பின்போது வேறு விஷயங்கள் குறித்து எதுவும் பேசவில்லை” என்றும் கமல் தெரிவித்தார்.