ஒட்டாவா: கனடாவில் தனியார் நிறுவன லாக்கர் ஒன்றில் ஆறு குழந்தைகளின் பிணம் மீட்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டின் வின்னிபெக் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்று கட்டண அடிப்படையில் பொதுமக்களுக்கு லாக்கர் வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இந்நிலையில், அதன் ஒரு லாக்கரில் இருந்து துர்நாற்றம் வருவதாக நிறுவனத்திற்கு புகார் வந்தது.
அதையடுத்து போலீசார் முன்னிலையில் அந்த லாக்கரை உடைத்துப் பார்த்த நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. காரணம் அதற்குள்ளாக பல மாதங்களுக்கு முன் இறந்த 6 குழந்தைகளின் சடலம் மறைத்து வைக்கப் பட்டிருந்தது.
அந்த குழந்தைகள் 6 பேரும் ஒரு மாதத்தில் இருந்து 6 மாதத்திற்குட்பட்ட வயதுடையவர்கள் என்றும், அவர்களது உடல் வெவ்வேறு காலகட்டத்தில் லாக்கரில் மறைத்து வைக்கப் பட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், அது யாருடைய லாக்கர் என விசாரித்து வருகின்றனர். அதேபோல், அவை யாருடைய குழந்தைகள் ? எவ்வாறு அவற்றை இந்த லாக்கரில் கொண்டு வந்து வைத்தார் என்ற கேள்விகளுக்கும் விடை தேடிக் கொண்டிருக்கின்றனர்.