நடிகர் கமல் அரசியலில் இறங்கவிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்தும் பரபரப்புச் செய்தி வந்த வண்ணமுள்ளது.
‘காலா’ படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் இருப்பதால் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த மாதத்தில் ரசிகர்களை சந்தித்து தனது அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் அறிவிக்க உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘கபாலி’ பட இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் மும்பை தாதாவாக நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிய இருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில் ‘காலா’ படப்பிடிப்பால் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்கும் படலம் தடைப்பட்டுப் போயுள்ளது.’காலா’ படப்பிடிப்பு முடிந்தவுடன் ஒக்டோபர் மாதத்தில் 6 நாட்கள் தொடர்ச்சியாக ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்திலே இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ள ரசிகர்களுக்கான அடையாள அட்டைகள் தயாராகி வருகின்றன.
ரசிகர்களுடனான இந்தச் சந்திப்பின் போது ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரேவசம் குறித்த தெளிவான நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று தெரிகிறது.
கடந்த முறை ரசிகர்களுடனான சந்திப்பின் போது “போருக்குத் தயாராகுங்கள், நேரம் வரும் போது அரசியல் பற்றி அறிவிப்பேன்” என்று கூறியிருந்தார்.
அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ள மாட்டேன் என்றார் அவர். ரஜினியின் அரசியல் முடிவு குறித்து அவரது குடும்பத்தினரும் ஆதரவான கருத்தையே தெரிவித்து வருகின்றனர்.
இதுஒருபுறமிருக்க நடிகர் கமலின் அரசியல் பிரவேசம்தான் இப்போது கூடுதல் பரபரப்பைப் பெற்றுள்ளது.தமிழ்நாடு எங்கும் கமலுக்கு ஆதரவு அலை வீசுவதால் ரஜினியின் அரசியல் பிரவேசம் அடிபட்டுப் போயுள்ளதாகவே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதுமாத்திரமன்றி விகடன் நடத்திய கருத்துக் கணிப்பின்படி கமலின் அரசியல் பிரவேசத்தை தமிழ்நாட்டில் கூடுதலானோர் விரும்புவதாகத் தெரியவந்துள்ளது.
“அரசியலுக்கு வந்து விட்டேன்” என்று கூறி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.
விரைவில் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று தெரிகிறது. இந்நிலையில் ரஜினியும் தனது அரசியல் பிரவேசம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை “மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரவும் தயார், ரஜினியை கூட்டணி சேர்க்கவும் தயார்” என்று விழா ஒன்றில் நடிகர் கமல் பேசிய நிலையில், ரஜினிகாந்த் இன்னும் மௌனம் காப்பது ஏன் என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்திய ‘பெரும் தலைப்பு’ என்று பார்த்தால் அதிமுக களேபரங்களையும் தாண்டி ரஜினி, கமல் அரசியல் பிரவேசம்தான் முன்னணி வகித்து வருகிறது.
அதிலும் கமல்தான் இப்போது உச்சத்தில் உள்ளார்.ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக நேரடியாக அறிவிக்கவில்லை என்றாலும் அவரது அரசியல் ஆசையை அவரது நண்பர் ராம் பகதூர் மூலமும், தமிழருவி மணியன் மூலமும் தெரிவித்து விட்டார்.
இதனால் மனம் குளிர்ந்த ரஜினி ரசிகர்கள் ‘தலைவர்’ எப்போது கட்சியைத் தொடங்குவார், நாம் எப்போது ‘தலைவரின்’ கொள்கைகளை பிரசாரம் செய்வது என்று அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசனையில் உள்ளனர்.
அரசியல் குறித்து முதலில் பேசியது ரஜினிகாந்த்தான். ஆனால் அதன் பின்னர் பேசிய கமலோ இன்று ரஜினியையே கூட்டணிக்கு அழைக்கும் உச்சத்துக்கு சென்று விட்டார்.
ஆனால் இதுவரை ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று ரசிகர்கள் ஆதங்கத்தில் உள்ளனர்.
ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கான கட்சி, கொடி தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் உலா வருகின்றன.
கடந்த முறை நடந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தின் போது ரஜினியின் அரசியல் பேச்சால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் மீண்டும் நடைபெறவுள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சியில் தலைவர் ஏதேனும் அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் அதிகரித்து வருகிறது.
ரஜினியை பொறுத்தவரை அவர் கமலின் அழைப்பை ஏற்று அவருடன் செல்வாரா அல்லது “என் வழி தனி வழி” என்று தனிக் கட்சியைத் தொடங்குவாரா என்பதை அவராகவே விளக்கினால் மட்டுமே ரஜினிகாந்தின் மௌனத்தின் பின்னணி தெரிய வரும்.
இந்த மௌனத்தின் பின்புலத்தில் ஏதேனும் பெரிய திட்டங்களுடன் ரஜினி இருக்கிறாரா என்பது குறித்து அடிக்கடி அவர் கூறுவது போல, ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.
‘எப்போது ஆண்டவன் சொல்வது? அதை இந்த அருணாசலம் செய்வது?” என்ற எதிர்பார்ப்பில் இலட்சக்கணக்கான ரஜினி ரசிகர்கள் வழிமீது விழி வைத்து காத்திருக்கின்றனர். கமலின் கருத்துக்காவது ரஜினி பதில் சொல்வாரா என்பது அவர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, தமிழக அரசியல்குறித்து நடிகர் கமல்ஹாசன் பதிவிடும் கருத்துகள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
‘கேரள முதல்வருடனான சந்திப்பு, விவசாயப் பிரதிநிதிகளைச் சந்திப்பது என முழு நேர அரசியல்வாதியாக மாறிக் கொண்டிருக்கிறார் கமல்’ என்ற தகவல்களும் வலம் வருகின்றன.
‘தனிக்கட்சி தொடங்குவேன்’ எனவும் அவர் பேசியிருக்கிறார்.
எதிர்பார்த்ததைப் போலவே, கமலுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு கொட்டிக் கிடக்கிறது. களத்தில் இறங்கி போராடுவது தான் அடுத்த கட்டத்திற்கான பாய்ச்சலாக இருக்கும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கிறது.