புதிய அரசியலமைப்பின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையென்பது கட்சிகளது கருத்துத் தொகுப்பே தவிர, அனைத்து தரப்புகளுக்குமிடையிலான இணக்கப்பாடு எவையுமில்லாதுள்ளது.
இதன் பிரகாரம் அரசியலமைப்பு மாற்றம் சிங்கள தரப்பினர் தமிழர்களின் ஆதரவுடன் தமக்குத் தேவையான மாற்றத்தை செய்து தமிழ் மக்களை நடுத்தெருவில் விடப் போகின்றனர் என்பது தெளிவாவதாக ஈ.பி.ஆர்.எல். எவ்.கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; புதிய அரசியலமைப்பின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது.
இதில் தெளிவாக எந்தவொரு முடிவும் குறிப்பிடப்படவில்லை. இதனைப் பார்க்கும் போது ஜே.வி.பி., தமிழ்க் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிப் பொது எதிரணி முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளது கருத்துகளின் தொகுப்பாகவேயுள்ளது.
வழிநடத்தல் குழுவிலுள்ள கட்சிப் பிரதிநிதிகள் 73 தடவை கூடிப் பேசிய போதும் அவற்றுக்கிடையில் இணக்கப்பாடு எவையும் எட்டப்படவில்லை. இந்நிலையில் அறிக்கையை முன்வைத்த பிரதமர் அதிஉச்ச அதிகாரப் பகிர்வு எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இடைக்கால அறிக்கையில் பொலிஸ் சட்டம், ஒழுங்கு குறித்து பேசப்படவில்லை. காணி அதிகாரம் மீண்டும் மாகாணத்துக்கும் மத்திக்கும் பகிரப்பட்டுள்ளது.
காணிப் பிணக்கு ஏற்படின் அரசியல்சாசன நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும். இந்த இழுபறி மட்டுமன்றி ஒன்றையாட்சிக்குப் பதிலாக தமிழில் ஒருமித்த நாடு என சொல்லப்படுகின்றது.
இந்தப் பதம் தொடர்பில் ஒருமித்த நாடு பிளவுபடாத நாடு என சொல்லப்படுகின்ற நிலையில் எதிர்காலத்தில் நீதிமன்றம் செல்ல நேரிடும் போது ஒற்றையாட்சியுடைய நாடு என வியாக்கியானப்படுத்தலாம்.
ஸ்கொட்லாந்தும் அயர்லாந்தும் பிரித்தானியாவிலிருந்து பிரிந்து செல்லாதிருக்க அம்மக்களை திருப்திப்படுத்த அதிகாரங்களை வழங்குகின்றனர். ஆனால் இங்கு அதிகாரம் வழங்க மறுக்கின்றனர்.
அரசியலமைப்பு மாற்றத்துக்கு காரணமாக மூன்று முக்கிய விடயங்கள் உள்ளன. அதாவது ஜனாதிபதி முறையை ஒழித்தல், தேர்தல் முறை மாற்றம் மற்றது அதிகாரப் பகிர்வு ஆகியன இதில் 19 வது திருத்தம் மூலம் ஜனாதிபதியின் அதிகாரம் பராளுமன்றத்துக்கும் பிரதமருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் 60 : 40 என்ற கலப்பு முறையில் உள்ளூராட்சி தேர்தல்சட்டம் வந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலும் 60 : 40 கலப்புத் தேர்தல் முறைக்கு மாற்றப்படவுள்ளது.
இதனை வைத்துப் பார்க்கும் போது தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வேயுள்ளது. இது வருமா வராதா என்ற நிலையில் உள்ளது.
வடக்கு, கிழக்கு இணைப்பில்லை. சமஷ்டி இல்லை.பௌத்தத்துக்கு முதலிடம் என்ற நிலையில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட போகின்றனர்.
அதாவது அரசியலமைப்பு மாற்றத்தினை தமிழ் தரப்பு ஆதரவுடன் சிங்கள தரப்பு தமக்குத் தேவையானதை செய்து கொண்டு தமிழ் மக்களை சிங்களத் தரப்பு நடுத்தெருவில் விடப்போகின்றது என்பது இடைக்கால அறிக்கையில் தெளிவாகின்றது என்றார்.