இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண வேணும் எண்டால், இதுவரையிலயும் நாங்கள் செய்த போராட்டங்களை ஒரு தடவை காய்தல் உவத்தல் இல்லாமல் வெளிப்படையாக மீளாய்வு செய்ய வேணும். முழுமையாக விமர்சனத்துக்கு உட்படுத்திப் பாக்கோணும்.
அதைப்போல இதுவரையிலயும் நாங்கள் நம்பிய இந்தியா தொடக்கம் நோர்வே, அமெரிக்கா, ஐ.நா போன்ற சர்வதேச சமூகம் என்ன மாதிரியான நன்மைகளைத் தந்தன? எங்கட நம்பிக்கைகளுக்கெல்லாம் என்ன நடந்தது எண்டதையும் நாங்கள் ஆராயவேணும்.
எப்பவும் பெரும்பான்மையான தமிழர்களும் தமிழ்த்தலைமைகளும் ஆட்சியில இருக்கிற அரசாங்கத்தோட எதிர்த்துக்கொண்டேயிருக்கினம். இந்த எதிர்ப்பால கிடைச்ச நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? எண்டதையும் கணக்கிடவேணும்.
சர்வதேச சமூகத்தையும் பிராந்திய சக்தியையும் தமிழ்நாட்டையும் நம்பிய அளவுக்கு இங்கே உள்ள பிற சமூகத்தின் தலைவர்களையும் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் நம்பியிருக்கிறமா?
இலங்கையில் உள்ள ஏனைய சமூகங்களிடம் எங்கட பிரச்சினையை தெளிவுபடுத்தியிருக்கிறமா?
அவர்கள் எங்கட பிரச்சினையைப் புரிந்து கொள்ளுகிற அளவுக்கு நாங்கள் என்ன முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறம்?
இந்தப் பிரச்சினையை இன்னும் நாங்கள் தீர்க்காமல் இப்பிடியே இழுத்தடிச்சுக்கொண்டிருந்தால், இன்னும் நாங்கள் காரணங்களைக் கற்பித்துக் கொண்டிருந்தால் மக்களின்ரை எதிர்காலம் எப்பிடியிருக்கும்?
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் என்பது எப்பிடி இருக்கோணும்?
அந்த அரசியலைச் செய்யிறதுக்கு விவேகமும் அர்ப்பணிப்பும் முக்கியமாகத்தேவையல்லவா! இந்த விவேகத்தை தமிழ்த்தரப்பு எந்த அளவுக்குப் பயன்படுத்தியிருக்கு? போராளிகளைத் தவிர, மிதவாத அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு மக்களுக்காகத் தங்களை அர்ப்பணித்திருக்கினம்?
இதையெல்லாம் செய்தால்தான் நாங்கள் புதிசாக எதைப்பற்றியும் யோசிக்கலாம்.
ஆனால், இப்ப நடக்கிறது எப்பிடியிருக்குதெண்டால்…. ‘எல்லாரும் ஏறி விழுந்த நொண்டிக் கழுதையில சக்கடத்தாரும் ஏறிச் சறுக்கி விழுந்த மாதிரி’த்தான் ஒவ்வொருத்தரும் வந்து ஒவ்வொரு கதையைச்சொல்லித் தங்கட பதவிக்காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கினம்.
முந்திச் செல்வநாயம், அமிர்தலிங்கம், பிரபாகரன் ஆட்கள் சொன்ன கதையைத்தான் இப்ப சம்மந்தனும் சுமந்திரனும் விக்கினேஸ்வரனும் சொல்லுகினம்.
இதையெல்லாம் புதுசாகக் கேட்கிறவைக்கு – கடந்த காலத்தில என்னவெல்லாம் நடந்திருக்கு எண்டு தெரியாதவைக்கு – இது அருமையான மருந்து போலத்தான் தெரியும்.
ஆனால். கடந்த கால வரலாற்றைத் தெரிஞ்சவைக்கு இந்த விளையாட்டைப்பார்க்க விசர்தான் வரும்.
அரசியல் எண்டது வரலாற்றோட நூறுவீதமும் சம்மந்தப்பட்டது.
கடந்த காலத்தைப்பற்றி முறையாக ஆராயாத எந்தச் சமூகமும் அரசியலில் வெண்டதாகச் சரித்திரமேயில்லை.
தமிழாக்கள் எப்பவும் மற்றவையில பிழையைக்காணுகிற அளவுக்குத் தங்கட தவறுகளைப்பற்றி ஒரு நாளும் ஆராயிறதில்லை. அதுக்குத்தயாரும் இல்லை.
இதாலதான் தொடர்ந்தும் பிழைகள் நடந்து கொண்டிருக்கு.
ஏதோ அரசாங்கத்தைக் குற்றம் சாட்டிச் சாட்டி தங்கட அரசியல் நலன்களையும் தங்கட பதவி, பவிசுகளையும் எப்பவும் பெற்றுக்கொள்ளலாம் எண்டு தமிழ்த்தலைமைகள் எண்ணிக்கொண்டிருக்கக் கூடாது.
இப்பிடி எண்ணிக்கொண்டிருந்த அமிர்தலிங்கத்தின்ரை அணியை அண்டைக்குத் தமிழ் இயக்கங்கள் தீர்த்துக்கட்ட வெளிக்கிட்டதை நாங்கள் நினைச்சுப் பாக்கோணும்.
1977 ஆம் ஆண்டுத்தேர்தலில் அமிர்தலிங்கம் சொன்னார் இனித்தமிழீழத்திலதான் அடுத்த தேர்தல் நடக்கும் எண்டு.
இந்தச் சொல்லைக் கேட்ட அண்டையான் இளைஞர்கள் எல்லாம் அமிர்தலிங்கத்தின்ரை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்குகளை அள்ளி அள்ளிப் போட்டிச்சினம்.
ஆனால், அடுத்த தேர்தலை எப்பிடித் தமிழீழத்தில நடத்திறது எண்டதைப்பற்றி அமிர்தலிங்கத்துக்கும் விளக்கமில்லை. அவற்றை அணியில இருந்த தலையாட்டின ஆட்களுக்கும் விளக்கமில்லை. அப்பிடி நடக்கக் கூடிய சாத்தியமும் இல்லை.
அமிர்தலிங்கம் அணி சளாப்பத்துடங்கிச்சு.
இதால ஆத்திரமடைஞ்ச பெடியள் அமிர்தலிங்கத்தையும் அவற்றை ஆட்களையும் துரோகிகள் எண்டு மண்டையில போட வெளிக்கிட்டாங்கள்.
விழுந்தவை விழ, மற்றவையெல்லாம் தப்பியோடிப்போய், தமிழ்நாட்டில தஞ்சம் புகுந்திச்சினம்.
பதினைஞ்சு வருமாகத் தலைமறைவாக இருந்திட்டுக் கொழும்புக்கு வந்த அமிர்தலிங்கத்தை புலிகள் 1990 இல் போட்டுத்தள்ளிச்சினம்
.
தியாகியாக ஒருகாலம் போற்றப்பட்ட அமிர்தலிங்கம் துரோகி எண்டு தூற்றப்பட்டார்.
இப்பிடியொரு நிலைதான் இப்பவும் இருக்கு.
– வடபுலத்தான்-
தமிழக அம்மாவுக்கு கம்பெனி கொடுக்கும் ஜப்பான் அம்மா