கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் சக மாணவர்களது, பகிடிவதை காரணமாக காயமடைந்த நிலையில் மாணவரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வியாபார முகாமைத்துவ பிரிவில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வியாபார முகாமைத்துவ முதலாம் பிரிவில் ஆண்டில் தரத்தில் கல்வி பயிலும் மாணவனை, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இருவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்து சென்று சுவரில் தலையை முட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த மாணவனுக்கு மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறிதுடன், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. உடனே குறித்த மாணவன் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த மாணவனுக்கு தலையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் ஒரு மாதத்திற்குள் இரத்த கசிவை களைக்க வேண்டியுள்ளதாகவும், இரத்த கசிவு தொடர்ந்தும் இருந்தால் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டிற்கு அமைய இரண்டு மாணவர்களை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கிழக்கு பல்கலைகழகத்தின் மருத்துவ பீடத்தில் கற்கும் 15 மாணவர்களுக்கு இந்த வாரம் தொடக்கம் அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக் கழக நிருவாகம் அறிவித்துள்ளது.
வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் மருத்துவ பீடத்தின் கனிஷ்ட மாணவர்களை மிக மோசமான பகிடிவதைக்கு உட்படுத்தியது விசாரணைகளின்போது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, இந்த வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிலவேளை இவ்வாறான பகிடிவதைகள் இனவாத திசை திருப்பலில் வந்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் இவ்வாறான பகிடிவதைகளுக்கு அதி உச்ச தண்டனை வழங்குவது சிறந்தது என்று குறிப்பிடும் சமூக ஆர்வலர்கள் ஈவிரக்கமற்ற அநாகரிக பகிடிவதை புரிந்த மாணவர்களுக்கெதிராக பல்கலைக் கழக நிருவாகம் தீர்மானித்த இந்த வகுப்புத் தடையை வரவேற்பதாகவும் தெரிவிக்கின்றனர்.