ஓர் ஆண்டுக்கு முன் மரணித்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் ஆடம்பர இறுதிச் சடங்கு தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்று வருகிறது.
இதனை பார்வையிட கால் மில்லியன் மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.
பாங்கொக் அரண்மனைக்கு முன்னாள் கடந்த பத்து மாதங்களாக 164 அடி உயரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு அதனை அலங்கரிக்க ஒன்பது கோபுரங்கள் உருவாக்கப்பட்டு இறுதிச் சடங்கு இடம்பெறுகிறது.
இந்த இறுதிச் சடங்குகளுக்கு சுமார் 90 மில்லியன் டொலர்கள் செலவிடப்படுகிறது.
மன்னரின் இறுதிச் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், ஆயிரக்கணக்கான மக்கள் கறுப்பு நிற ஆடையில், தாய்லாந்து அரண்மனைக்கு அருகில் கூடியுள்ளனர்.
நேற்று இரவு நடைபெற்ற தகனச் சடங்கின் போது, சுமார் 250,000 பேர் தாய்லந்து தலைநகரின் வீதிகளில் கூடி, மன்னரின் இறுதி ஊர்வலத்தைக் பார்வையிட்டனர்.
தொடர்ந்து மன்னரின் அஸ்தி இன்று அரண்மனைக்கு எடுத்துவரப்படுவதோடு மேலும் இரண்டு தினங்களுக்கு இறுதிச் சடங்கு தொடரவுள்ளது.
மன்னர் பூமிபால் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தனது 88 ஆவது வயதில் மரணித்தார். அன்று தொடக்கம் கடந்த ஓர் ஆண்டாக தாய்லாந்தில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த காலத்தில் மக்கள் பெரும்பாலும் குறுப்பு நிற ஆடையை அணிந்தனர். பல்வேறு அரசியல் கொந்தளிப்புகளையும், புரட்சிகளையும் பார்த்த தாய்லாந்துக்கு, ஒரு நிலைத்தன்மை வழங்குபவராக மன்னர் பார்க்கப்பட்டார்.