பாட்னா : பீகார் மாநிலம், பாட்னாவில், பள்ளி மாணவர்கள், மூன்று பேர், பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பாட்னாவில், தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் மூன்று பேர், கடந்த வாரம், திடீரென காணாமல் போயினர். அவர்களை, போலீசார் தேடி வந்துள்ளனர்.இந்நிலையில், காணாமல் போன, மாணவர்கள் மூன்று பேரும், அவர்களாகவே, நேற்று வீடு திரும்பினர்.
இதுகுறித்து, போலீசார், மாணவர்களிடம் விசாரித்ததில், மும்பை நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிமை பிடிக்க, தாங்கள் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர். தாவூத் இப்ராகிமை பிடித்து தருபவர்களுக்கு, பரிசு அளிக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்திருந்ததை அடுத்து, இந்த மாணவர்கள், மூன்று பேரும், கையில் கிடைத்த பணத்தை வைத்து, இப்ராஹிமை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.
முதலில், பாட்னாவில் உள்ள, ஷாப்பிங் மால் ஒன்றுக்கு சென்றுள்ளனர். பின், கோல்கட்டாவிற்கு சென்று, இப்ராஹிமை தேடியுள்ளனர். கையில் இருந்த பணம் செலவழிந்ததால், சில நூறு ரூபாய்களுடன் வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து, பாட்னா உயர் போலீஸ் கண்காணிப்பாளர் மனு மகாராஜ் கூறியதாவது;மாணவர்கள் மூன்று பேரும், ‘டிவி’யைப் பார்த்து, இப்ராஹிமை பிடித்துக் கொடுத்து, பணக்காரர்களாக ஆகலாம் என்ற நினைப்பில், இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பெற்றோர், தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்