தெலுங்கானா மாநிலத்தில் காணாமல்போன 17 வயது மாணவியை ’வாராய் நீ வாராய்..’ பாணியில் மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவளது காதலன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தின் மியாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் ஜெயின். இவரது மகள் சாந்தினி(17). பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியான இவர் கடந்த இரண்டாண்டுகளாக சாய் கிரண் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மாலை வெளியே செல்வதாக வீட்டில் இருந்து சென்ற சாந்தினி திடீரென்று மாயமானாள். இதுதொடர்பாக, சாந்தினியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில், அமின்புரா அருகாமையில் உள்ள மடினகுடா மலையடிவாரத்தில் சாந்தினி உடல் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
அவரது பிரேதத்தை கைப்பற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்த நிலையில் சாய் குமாருக்கும் சாந்தினிக்கும் இடையில் இருந்துவந்த காதல் விவகாரம் அவளது தோழிகள் மூலமாக தெரியவந்தது.
இதற்கிடையில், சாந்தினியின் பிணம் கிடைத்த பகுதிக்கு அருகாமையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது சாந்தினியும் சாய் கிரணும் மலையடிவாரத்தில் உள்ள ஒரு புதருக்குள் நுழைந்த காட்சி பதிவாகி இருந்தது.
இதையடுத்து, சாய் கிரணை போலீசார் கைது செய்து விசாரித்தபோது சில திடுக்கிடும் உண்மை தெரியவந்தது.
தன்னை உயிருக்குயிராக காதலித்துவந்த சாய் கிரண் வேறொரு பெண்ணின் மீது கொண்ட மோகத்தால் விலகிச் செல்வதை அறிந்த சாந்தினி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நச்சரித்து வந்துள்ளார்.
திருமணம் பற்றி பேசுவதாக மெசேஜ் அனுப்பி சம்பவத்தன்று சாந்தினியை ஒரு ஆட்டோவில் மலைப்பகுதிக்கு அழைத்து சென்ற சாய் கிரண் அவளை மலையில் இருந்து கீழே தள்ளிக் கொன்றதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.