திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 13 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
மாவட்ட செயலகத்தில் நேற்று(03) நடைபெற்ற மாவட்ட கொவிட் செயலணி கூட்டத்தில் அவர் இதனைத் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் கொவிட் தொற்று பரவாமல் இருக்க அனைவரும் பொறுப்புடன் செயற்படல் வேண்டும். குறிப்பாக சுகாதாரத்துறையினர் மற்றும் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடித்தல் காலத்தின் தேவையாகும்.
அநாவசியமான பயணங்களை தவிர்த்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல், கைகளை கழுவல் போன்றன மிகப் பிரதானமாகும்.
பிரதேச செயலாளரின் தலைமையில் செயற்படும் பிரதேச கொவிட் குழு மற்றும் கிராம உத்தியோகத்தரின் தலைமையிலான கிராமிய கொவிட் குழுவினை வலுப்படுத்தல் இன்றியமையாயததாகும். மக்களின் இயல்பு வாழ்க்கை கெடாத வகையில் கொவிட் 19 அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்பட மக்களை அறிவுறுத்துமாறு இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெளிமாவட்டங்களுக்கு செல்வதாயின் அத்தியவசிய தேவைகளுக்கு மாத்திரமே செல்ல முடியும். மாவட்டத்திற்கு உள்நுழையும் நான்கு பிரதான வழிப்பாதைகளில் வழித்தடைகள் ஏற்படுத்தப்பட்டு மாவட்டத்திற்கு உள்நுழைதல் மற்றும் வெளிச்செல்லல் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஏ.அனஸ்,பிரதேச செயலாளர்கள், முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.