ஒருவழியாக முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்ட அறிக்கையொன்று சுமார் இரு மாதங்களில் முதல் முறையாக இன்று வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கை அதிமுக கட்சியினருக்கும், ஜெயலலிதா நலம் பெற பிரார்த்தித்த தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்பது உண்மை. அதிலும், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சை, நெல்லித்தோப்பு ஆகிய நான்கு தொகுதி அதிமுகவினருக்கு இது ரெட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பணப் பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டு தள்ளி வைத்த தொகுதிகள் தஞ்சை, அரவக்குறிச்சி. எனவே இந்த தேர்தலிலும் அடாவடிகளுக்கு பங்கு இல்லை. இடைத்தேர்தல் என்பதால் இயல்பாகவே, திருப்பரங்குன்றத்திலும், திருமங்கலம் பார்முலா பாயலாம்.
இத்தனை களேபரங்களுக்கு நடுவே, எப்போதுமே இடைத்தேர்தல்களில், ஆளும் கட்சி கைதான் ஓங்கியிருக்கும். ஆனால், வித்தியாசமாக இந்த 3 தொகுதிகளுக்கான தேர்தலின்போது மட்டும், இதுவரை எதிர்க்கட்சிகள் கரங்கள்தான் ஓங்கியுள்ளன.
ஸ்டாலின் தீவிரமாக நடத்தி வரும் பிரசாரத்தின்போது அரசை தாக்கி எவ்வளவோ பேசியுள்ளார். ஆனால், பதிலடி தர ஆளும் கட்சியில் யாருமே தயாரில்லை. பெரிதும் நம்பிய தம்பி துரை கூட, ஜெயலலிதாவை புகழ்ந்து பேசி பிரசாரத்தை முடித்துக்கொண்டாரே தவிர, திமுக குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தரவில்லை.
மேலிடத்தின் கிரீன் சிக்னல் இன்றி, எதையுமே செய்ய முடியாத நிலையில் அதிமுக நிர்வாகிகள் இருப்பதுதான், இதற்கு காரணம் என கூறப்பட்டது. மோடியின் செல்லாத பண அறிவிப்பும் கலக்கத்தை உருவாக்கியது. ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த செய்திகள் அதிமுக நிர்வாகிகளை சோர்வடைய செய்திருந்தது. வாக்காளர்களை அணுகும்போது, ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த கேள்விகளை அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இப்படி ஆளும் கட்சியினர் ஒடுங்கிப்போயிருந்த நிலையில்தான், ஜெயலலிதாவின் அறிக்கை உத்வேகத்தை ஊட்டியுள்ளது. இப்போது அதிமுகவினர் யானை பலம் பெற்றதை போல உணருவதாக கூறுகிறார்கள். இனிமேல் அவர்கள் பதிலடியை களத்தில் பார்க்க முடியும். இது 3 தொகுதி தேர்தலிலும் எதிரொலிக்கும் என நம்புகிறார்கள் அதிமுக விசுவாசிகள்.
ஜெயலலிதாவின் அறிக்கையை தொடர்ந்து 3 தொகுதிகளுக்கான தேர்தலிலும் நாளை முதல் சூடு பறக்க உள்ளது. ஜெயலலிதா நலமோடு இருப்பதை சொல்லியே அதிமுகவினர் தைரியமாக வாக்குகளை கேட்க இது வசதியாகியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலிலும், ஜெயலலிதா அறிக்கை அதிமுகவுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையிலிருந்தபடியே ஜெயலலிதா ஏவியுள்ள இந்த பிரம்மாஸ்திரத்தை எதிர்க்கட்சிகள் எப்படி தாக்குப்பிடிக்கப்போகின்றன என்பதை இன்னும் சில நாட்களில் நடக்கும் பிரசாரம் விடை பகரும்.