மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வை நாடு முழுவதும் 11.35 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.
சி.பி.எஸ்.இ மேற்பார்வையில் நடைபெற்ற இந்தத் தேர்வுக்காக, இந்தியா முழுவதும் 103 மையங்கள் அமைக்கப்பட்டன. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பின்வரும் ஆடைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
* பெல்ட், தொப்பி, மோதிரம், தோடு, மூக்குத்தி, செயின், செயின் டாலர், சட்டை பின், பேட்ஜ் போன்றவற்றை அணிந்து வரக் கூடாது.
*அரைக் கை வைத்த லேசான ஆடைகளையே அணிந்திருக்க வேண்டும். ஆடையில் பெரிய பொத்தான்களோ, பின்களோ, பூக்களோ இருக்கக் கூடாது. ஷூ வகைக் காலணிகளுக்கும் தடை.
மேற்கூறப்பட்டுள்ள விதிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்த போதிய தகவல் கிராமப்புறத்திலிருந்து தேர்வெழுத வந்த மாணவர்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.
இதனால் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்த பின்பு சட்டையைக் கிழித்து தேர்வு எழுதச் சென்ற அவலம் நேரிட்டது. அதிகப்படியான சோதனை நடவடிக்கையால் நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தேர்வு அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவி ஒருவரின் உள்ளாடையைக் கழற்ற சொன்ன சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
குறிப்பாக, இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்தன.
இதைத்தொடர்ந்து சி.பி.எஸ்.இ மற்றும் அந்தப் பள்ளி, சம்பந்தப்பட்ட மாணவியிடம் மன்னிப்புக் கேட்டது. இந்நிலையில், மாணவியிடம் அப்படி நடந்து கொண்ட நான்கு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நான்கு பேரும், ஒரு மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.