அதிகரித்து வருகிறது. நேற்று வெள்ளிக்கிழமை மாத்திரம் 31 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிக கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
இலங்கையில் 5 நாட்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் நூற்றுக்கும் அதிகமான கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 9ஆம் திகதி நாட்டில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 800ஐ கடந்து 801 ஆக பதிவாகியிருந்தது.
இந்நிலையில், கடந்த 5 நாட்களில் 122 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியதுடன், மரணங்களின் எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது. 10ஆம் திகதி 26 மரணங்களும், 11ஆம் திகதி 23 மரணங்களும், 12ஆம் திகதி 18 மரணங்களும், 13ஆம் திகதி 24 மரணங்களும், நேற்றைய நாளில் 31 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதையடுத்து, இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 923 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி, இலங்கையின் கொவிட்-19 மரணங்களின் சதவீதமானது, 0.67 ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச கொவிட்-19 மரணங்களின் சதவீதம் 2.07 ஆக பதிவாகியுள்ளது. உலகளவில் பிரேஸிலில் கொவிட் மரணங்களின் சதவீதம் அதிகமாகும். 2.79 சதவீதமாக பிரேஸிலில் கொவிட் மரணங்கள் பதிவாகின்றன.
பிரான்ஸில் 1.84 சதவீதமாகவும், அமெரிக்காவில் 1.78 சதவீதமாகவும், இந்தியாவில் 1.09 சதவீதமாகவும் கொவிட்-19 மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் கொவிட்-19 தரவுதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றைதினம் கொவிட் தொற்றினால் கர்ப்பிணி தாயொருவரும் குருணாகல் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்த மூன்றாவது கர்ப்பிணி இவராவார். 28 வயதுடைய குறித்த கர்ப்பிணியில் குழந்தையை காப்பாற்ற முடிந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை நாட்டில் 2,269 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். நேற்றை தினம் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 555 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இதே போன்று காலியில் 281 தொற்றாளர்களும், கம்பஹாவில் 236 தொற்றாளர்களும், குருணாகலில் 218 தொற்றாளர்களும், களுத்துறையில் 211 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டனர். எஞ்சிய தொற்றாளர்கள் நாட்டில் ஏனைய பகுதிகளிலிருந்து இனங்காணப்பட்டனர்.
தற்போது மேல் மாகாணத்தில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் வாரங்களில் கண்டி, குருணாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்று காலை வரை 1,154,795 பேருக்கு முதற்கட்ட கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 243,957 பேருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.