சென்னை: புதிய கட்சி தொடங்கப்போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் அறிவித்த சில மணி நேரங்களில் அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது காங்கிரஸ் மேலிடம். தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்ததால், வாசனை நீக்கியதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று சென்னையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்த முன்னாள் மத்திய அமைச்சரான ஜி.கே. வாசன், புதிய கட்சியின் சின்னம் மற்றும் கொடியை விரைவில் திருச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அவரை கட்சியிலிருந்து விலக வேண்டாம் என தமிழக காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுக்கொண்டார். ஆனால் டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடம் வாசனை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கட்சிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
வாசன் தனிக்கட்சி தொடங்குவதால், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், அவரை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் சேர்க்கும் எண்ணம் இல்லை என்றும் முகுல் வாஸ்னிக் கூறியுள்ளார்.
வழக்கமாக முக்கியத் தலைவர்கள் விலகும் நிலை வரும்போது காங்கிரஸ் தலைமை சமாதானம் பேசிப் பார்க்கும். ஆனால் வாசனை காங்கிரஸ் மேலிடம் கண்டு கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோஷ்டித் தலைவர்களைத் தேடித் தேடிப் போய்ப் பார்க்கும் இளங்கோவன்… நாளை தங்கபாலுவுடன் சந்திப்பு!
சென்னை: ஜி.கே.வாசன் கட்சியை விட்டு விலகிப் போய் விட்டதால் சற்றும் கவலைப்படாமல் கட்சியில் உள்ள கோஷ்டித் தலைவர்களை ஒருங்கிணைத்து கட்சி குலைந்து போகவில்லை என்று காட்டும் நடவடிக்கையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தீவிரமாகியுள்ளார்.
இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு தற்போது மிகுந்த பக்குவத்துடன் இளங்கோவன் நடந்து கொள்வதாகவும் காங்கிரஸார் உற்சாகத்துடன் கூறுகின்றனர். தமிழக காங்கிரஸில் கோஷ்டிப் பூசல்தான் மிகப் பிரபலம். இந்த கோஷ்டிப் பூசல் காரணமாக ஒரே காங்கிரஸாக இல்லாமல் சிதறுண்டு போய்க் கிடக்கிறது தேசியக் கட்சியான காங்கிரஸ்.
நம்பர் ஒன் கோஷ்டி வாசன் அவுட் தமிழக காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை வாசன் கோஷ்டிதான் பெரிய கோஷ்டியாக இருந்து வந்தது. இவரை எதிர்த்து மற்ற கோஷ்டியினர் அவ்வப்போது இணைந்து அட்டாக் செய்யும் நிலையும் ஏற்பட்டது. தற்போது வாசன் கோஷ்டி போய் விட்டது.
கோஷ்டிகளை ஒருங்கிணைக்கும் இளங்கோவன் இதையடுத்து பெரிய நிம்மதி கிடைத்துள்ளதாக காங்கிரஸார் மத்தியில் கருத்து நிலவுகிறது. இதை வைத்து கட்சியை ஒருங்கிணைக்கும் இமாலய நடவடிக்கையில் புதிய தலைவர் இளங்கோவன் இறங்கியுள்ளார்.
ப.சிதம்பரத்திற்கு முதல் ஐஸ் முதலில் 2வது பெரிய கோஷ்டியின் தலைவரான ப.சிதம்பரத்திற்கு நேற்றே ஐஸ் வைத்து விட்டார் இளங்கோவன். தன்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் வந்து வாழ்த்திய ப.சிதம்பரத்திற்கு நன்றி தெரிவித்தஅவர், அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு உங்களிடம் கேட்டு விட்டே செய்வேன் என்று கூறி விட்டார்.
அடுத்து தங்கபாலு அடுத்து நாளை காலை 9 மணிக்கு முன்னாள் தலைவரும், இன்னொரு முக்கிய கோஷ்டியின் தலைவருமான தங்கபாலுவை அவரது அடையார் வீட்டுக்குப் போய் நேரில் சந்திக்கவுள்ளார் இளங்கோவன்.
அடுத்தடுத்து தலைவர்களுடன் சந்திப்பு இதேபோல பிற தலைவர்களையும் அவர் சந்தித்து முதலில் அனைவரின் நம்பிக்கையையும் பெற்று பின்னர் அதிரடியாக நடவடிக்கைகள் மற்றும் அரசியலில் இறங்குவார் என்று தெரிகிறது.
Post Views: 97