பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கடந்த திங்கட் கிழமை ஷங்கராஷ் சேனா அமைப்பின் மாநில தலைவரான விபின் ஷர்மா மர்ம நபர்களால் பட்ட பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில் அருகிலிருந்த கண்காணிப்பு கெமராவில் பதற வைக்கும் இந்த முழு கொலை சம்பவமும் பதிவாகியுள்ளது.
அமிர்தசரஸின் பாரத் நகர் பகுதியில் இருக்கும் ஒரு சந்தையில் தனது நண்பருடன் விபின் பேசிக்கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த முகமூடி அணிந்த இரு நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் அவரை நோக்கி சுடத் தொடங்கியுள்ளனர்.
முதல் குண்டு தன் மீது பட்டவுடன் தரையில் விழுந்த நிலையில் இருந்த விபின் ஷர்மாவை சரமாரியாக இருவரும் பலமுறை சுட்டுவிட்டு அந்த இடத்தைவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
14 குண்டுகள் தன் மீது பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே விபின் உயிர் இழந்துள்ளார்.
இந்தப் பயங்கர கொலை சம்பவம் அருகிலிருந்த கடையின் சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.
அதில் கொலையாளிகளின் முகமும் தெளிவாக பதிவாகி இருப்பதாகக் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
இதுவரை கொலைக்கான சரியான காரணமும் தெரியாத நிலையில் கெமராவில் பதிவான முகங்களை வைத்து கொலையாளிகளை தேடி வருவதால் விரைவில் அவர்கள் பிடிபடுவர் என்று பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பஞ்சாபின் சிவ சேனா கட்சித் தலைவரான சேத்தன் கக்கர் இந்தச் சம்பவம் குறித்து தனது கருத்தைக் கூறுகையில் இந்தக் கொலைக்கு காலிஸ்தானி பயங்கரவாதிகள் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.