தமிழகத்தின் ஒட்டன்சத்திரம் அருகே பலத்த சத்தத்துடன் வானில் இருந்து மர்ம பொருள் கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கூத்தம்பூண்டி அடுத்த மோதுபட்டி கிராமத்தில் நேற்று மதிய வேளையில் அப்பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது தோட்டத்தில் பலத்த சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று விழுந்துள்ளது.
இதைக் கேட்ட தோட்டத்து வீட்டில் இருந்த சிவகாமி என்பவர் ஓடிச்சென்று அந்த பொருளை பார்த்த்துள்ளார். அப்போது அந்த பொருள் பாதி எரிந்த நிலையில் அலுமினிய உருளையில் வயர்களை சுற்றி இருந்ததுபோல் காணப்பட்டது.
இதைப்பார்த்து ஆச்சரியமடைந்த சிவகாமி, அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்து காவல்நிலயத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டதுடன்,மதுரையில் உள்ள தடய அறிவியல் துறைக்கு தகவல் அளித்தனர்.
தொடர்ந்து மதுரை தடய அறிவியல் உதவி இயக்குனர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் அந்த பொருளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
மேலும் ஏராளமான பொதுமக்களும் கூட்டமாக வந்து இதனை பார்த்து செல்வதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.