கொவிட் -19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 20 தொடக்கம் 29 வயதுடைய பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் அல்லது கல்விசாரா ஊழியர்களுக்கான சினோபாம் (Sinopharm) கோவிட்-19 தடுப்பூசியானது யாழ் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை வழங்கப்பட உள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ள எந்தவொரு அரச பல்கலைக்கழகத்திலும் கல்வி பயிலும் மாணவர்கள், பணிபுரியும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் தமது பல்கலைக்கழக அடையாள அட்டையினை சமர்ப்பித்து யாழ் பல்கலைக்கழகத்தில் தமது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும்.
தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றம் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை வழங்குவதற்கான ஒழுங்குகள் , செய்யப்பட்டுள்ளன.
அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் பல்கலைக்கழக தடுப்பூசி வழங்கும் நிலையத்தில் உள்ள வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.