யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் கடும் நிபந்தனையுடனான பிணைக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை யாழ்.மேல் நீதிமன்றத்தில் குறித்த பிணை மனுவனாது விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது நிபந்தனையுடனான பிணைக்கு அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் ஆட்சேபனை இல்லையென தெரிவித்ததையடுத்தே மேற்படி பிணை அனுமதியானது நீதிபதியால் வழங்கப்பட்டிருந்தது.
கடந்த 2016.10.21 அன்று இரவு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது அப் பகுதியில் கடமையில் இருந்த பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
இத் துப்பாக்கி பிரயோகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற மாணவன் உயிரிழக்க அதனால் ஏற்பட்ட விபத்தில் மற்றைய மாணவனும் உயிரிழந்திருந்தார்கள். இதன்படி யாழ்.பல்கலைகழகத்தை சேர்ந்த நடராஜ கஜன் மற்றும் பவுண்ராஜா சுலக் ஷன் ஆகிய இருவருமே உயிரிழந்திருந்தார்கள்.
இத் துப்பாக்கி சூட்டு சம்பவத்தையடுத்து அந் நேரம் அங்கு கடமையாற்றிய யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஜந்து பொலிஸ் உத்தியோகத்தர்களான திசநாயக்க முதியான்சலாகே, தயலவிதானலகே நவரத்ன பண்டார, தங்கராஜன் லங்காமணன், எக்கநாயக்க முதியான்சலாகே, சமர ஆராச்சிகே சந்தன குமார ஆகியோர் தண்டனை சட்டக் கோவையின் பிரிவு 296இன் கீழ் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்ற கட்டளையின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன் இது தொடர்பான வழக்கு விசாரணைகளும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்றது.
இவ்வாறான நிலையில் குறித்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பிணையில் விடுதலை செய்யக் கோரி அவர்களது உறவினர்கள் மனுத்தாரர்களாகவும், சட்டமா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு, மக்கள் முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரியை எதிர்மனுத்தாரர்களாகவும் கொண்டு சட்டத்தரணி றெமிடியஸால் யாழ்.மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்டது.
இவ் பிணை விண்ணப்பத்தின் பரிசிலனையானது யாழ்.மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டு தகுந்த காரணங்களின் அடிப்படையில் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் குறித்த பிணை விண்ணப்பமானது விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணை வழங்கக்கோரி மனுத்தாரர்கள் தரப்பு சட்டத்தரணி வாதங்களை முன்வைத்தார். அத்துடன் இவ் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் 11 மாதங்களாக விளக்கமறியலில் உள்ள நிலையில் அவர்களை பிணையில் விடுதலை செய்யக் கோரி தனது வாதத்தினை முன்வைத்திருந்தார்.
இவரது வாதம் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்கள அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் நிபந்தனையுடனான பிணை அனுமதிக்கு தமக்கு ஆட்சேபனை இல்லையென தெரிவித்தார். இதனை தொடர்ந்து மன்றானது பிணை தொடர்பாக கடுமையான நிபந்தனைகளை விதித்தது.
இதன்படி ஒவ்வொருவரும் 50ஆயிரம் ரூபா பெறுமதியான காசுப் பிணையுடனும், இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆட் பிணைகளுடனும், பிணையில் செல்ல முடியும் எனவும் பிணையாளிகள் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவானால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும், குறித்த சந்தேகநபர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 மணியிலிருந்து நண்பகல் 12மணிக்கு இடையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கையொப்பமிட வேண்டும் எனவும்,
அவர்களது கடவுசீட்டுக்களை யாழ்.நீதிவான் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளை பிணை தொடர்பாக மன்றானது பிறப்பித்தது.
மேலும் குறித்த ஐவருக்கும் வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை விதித்ததோடு இவ் மேல் நீதிமன்ற கட்டளையை குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பிற்கும், குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கும், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் அறிவிக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற பதிவாளருக்கு மன்று உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து மேற்குறித்த நிபந்தனைகளுடன் குறித்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் பிணையில் செல்வதற்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.