கிளிநொச்சியிலிருந்து பளை நோக்கிய ரயில் சேவை, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவினால் உத்தியோகபூர்வமாக இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங், பாராம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், போக்குவரத்து அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உட்டபட புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்திய அரசின் உதவியுடன் புகையிரதப் பாதையின் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய பணிகள் நிறைவடைந்து ஓமந்தையிலிருந்த கிளிநொச்சி நோக்கிய சேவை கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதன் அடுத்த கட்டமாக கிளிநொச்சியிலிருந்து பளை நோக்கிய சேவைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய இன்று காலை கிளிநொச்சியில் இருந்து சேவைகள் ஆரம்பமாகின.
தினமும் காலை 5.45 இற்கு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் யாழ்தேவி ரயில் பிற்பகல் 1.21 இற்கு பளையை சென்றடையும்.
பளையில் இருந்து கொழும்பு வரை பயணிக்கும் யாழ்தேவி ரயில் காலை 10.40இற்கு புறப்பட்டு மாலை 6.25 இற்கு கொழும்பை வந்தடையும். இதேவேளை பளைக்கும் கொழும்பிற்கும் இடையிலான கடுகதி ரயில் சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
காலை 06.50 இற்கு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த கடுகதி ரயில் நண்பகல் 12.27 இற்கு பளையை சென்றடையும். பளையில் இருந்து கொழும்பு வரை பயணிக்கும் கடுகதி ரயில் பிற்பகல் 02.15 இற்கு புறப்பட்டு இரவு 08.05 இற்கு கொழும்பை வந்தடையும்.
இதேவேளை, கொழும்பு – பளை இடையே குளிரூட்டப்பட்ட விசேட சொகுசு ரயில் சேவையொன்றும் நாளாந்தம் இடம்பெறவுள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்த ரயிலுக்கான பயணச்சீட்டை வடபகுதி ரயில் மார்க்கத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் முன்பதிவு செய்து, பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ரயில்வே பொது முகாமையாளர் கூறினார்.
இந்த செகுசு ரயில் சேவைக்காக கொழும்பு கோட்டையிலிருந்து பளை வரை 1,400 ரூபா கட்டணமாக அறவிடப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.