பாகிஸ்தானுக்கு எதிரான இருபது-20 உலக கிண்ணத் தொடரின் இறுதி லீக் போட்டியில் 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள்; அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
பங்களாதேஷில் 5ஆவது இருபது-20 உலக கிண்ணத் தொடர் நடக்கிறது. மிர்பூரில் இன்று நடந்த ‘பிரிவு-2’ லீக் போட்டியில், ‘நடப்பு சாம்பியன்’ மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தானுடன் மோதியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவர் சமி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஸ்மித் (8), கெய்ல் (5) சொதப்பினர். சிம்மன்ஸ் (31), சாமுவேல்ஸ் (20) ஓரளவு கைகொடுத்தனர். பிராவோ, சமி ஜோடி அசத்தியது. பிராவோ 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
மேற்கிந்திய அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் எடுத்தது. சமி (42), ரசல் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சான்டோகி வீசிய முதல் பந்தில் ஷேசாத் எவ்வித ஓட்டமும் பெறாது ஆட்டமிழந்தார். பத்ரீ சுழலில் கம்ரான் அக்மல் (0), உமர் அக்மால் (1), சோயப் மாலிக் (2) அடுத்தடுத்து விழுந்தனர். ஹாபீசும் 19 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார். பின் வந்த நரைனின் சுழலில், மக்சூத் (18), தன்வீர் (14), அப்ரிடி (18) சரணடைந்தனர்.
சயீத் அஜ்மல் (1), உமர் குல் (4) வெளியேற, பாகிஸ்தான் அணி 17.5 ஓவரில், 82 ஓட்டங்களை மட்டும் எடுத்து, 84 ஓட்டங்கள்; வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேற்கிந்திய அணி சார்பில் பத்ரீ, நரைன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.