சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூருரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அ.தி.மு.க (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உறவினர்களான விவேக், கிருஷ்ணப்ரியா, திவாகரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான 187 இடங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
ஆயிரக்கணக்கான அதிகாரிகள் ஐந்து நாள்கள் தொடர்ச்சியாக நடத்திய சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள், தங்க, வைர நகைகள் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஐந்து நாள்கள் சோதனைக்குப் பின்னர் விவேக்கை விசாரணைக்கு அழைத்துச் சென்றது வருமான வரித்துறை. இரவு வரை நீட்டித்த இந்த விசாரணையின்போது விவேக் அசராமல் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து மன்னார்குடி உறவினர்கள் சிலரிடம் பேசியபோது, “ஐந்து நாள்களில் நடந்த விசாரணையின்போது விவேக் தொடர்புடைய ஜாஸ் சினிமா, ஜெயா டிவி உள்ளிட்டவற்றில் நடந்த சோதனையில் பெரியதாக எதுவும் கைப்பற்றப்படவில்லை.
அமெரிக்க டாலர்கள் அதிகப்படியாகக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அதிகாரிகள் வந்தார்கள். அதிகப்படியாக அமெரிக்க டாலர்கள் இருந்தால் அமலாக்கத்துறை விசாரணையைத் துரிதப்படுத்தி கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்வதுதான் அவர்களின் நோக்கமாக இருந்தது.
அமெரிக்க டாலர்கள் விவேக்கின் நண்பர்கள் சிலரிடம் வீட்டில் இருக்கிறதைத் தெரிந்துகொண்டு அங்கெல்லாம் குறிவைத்து அதிகாரிகள் போனார்கள். ஆனால், டாலர்கள் எதுவும் பெரிதாகச் சிக்கவில்லை.
முதல் மூன்றுநாள் சோதனைக்குப் பின்னர் அடுத்த இரண்டு நாள் விவேக்கைக் கடுமையாக மனரீதியான டார்ச்சருக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.
“எங்களுக்கு மேலிடத்திலிருந்து தகவல் வரும் வரைக்கும் 100 நாள்கள் ஆனாலும் உங்கள் வீட்டில்தான் தங்கியிருப்போம்” என்று அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள்.
ஜாஸ் சினிமாவில் சோதனை நடந்துகொண்டிருந்தபோது, “இது எங்களது நூறாவது சோதனை” என்று கூறி அதிகாரிகள் கேக் வெட்டிக்கொண்டாடியிருக்கிறார்கள்.
கடைசி இரண்டு நாள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த விவேக்கை எழுப்பி கேள்வி கேட்பது, பிறகு “ஜெயலலிதா உங்கள் பெயரில் வாங்கிய சொத்தை எங்கு வைத்திருக்கிறீர்கள் “என்று கேட்டுள்ளனர்.
“அதெல்லாம் இல்ல சார்” என்று கூறியிருக்கிறார். பின்னர் தூங்கப்போங்க என்று கூறிவிட்டு அரைமணி நேரம் கழித்து மீண்டும் எழுப்பி விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் கூப்பிட்டுக் கூப்பிட்டு கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருந்துள்ளனர். ‘பெங்களூருவில் உங்கள் பெயரில் சொத்து வாங்கினீங்களே அந்த டாக்மென்டை எடுத்துவாங்க’ என்று கேள்விகேட்டுக்கொண்டே இருந்துள்ளனர்.
‘அப்படியெல்லாம் இல்ல சார்’ என்று கூறியிருக்கிறார். ‘இல்ல, லிஸ்ட்டில் இருக்கிறது என்று சொன்னாங்களே’ என்று கூறியிருக்கிறார்கள்.
“சார் அப்படியெல்லாம் இல்ல” என்று கூறிய விவேக்கிடம் கேள்விக்குமேல் கேள்விகேட்டு உளவியல் ரீதியாகக் கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.
மன்னார்குடியில் ஏழ்மையில் உள்ள விவேக்கின் நண்பர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தியிருக்கிறார்கள். விவேக்கின் மனைவி கீர்த்தனா தங்க, வைர நகைகளுக்கெல்லாம் கணக்கு கேட்டுள்ளனர். பில் அனைத்தும் சரியாக இருந்திருக்கிறது.
டி.டி.வி.தினகரன், திவாகரன், விவேக் இந்த மூன்றுபேரும் ஆக்டிவ் அரசியலுக்கு வரக் கூடாது அப்படிங்கிற நோக்கத்துக்காகதான் இந்தச் சோதனை நடந்திருக்கிறது.
மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக் வீட்டில் சோதனை நடந்தபோது வீட்டின் சொத்துப் பத்திரங்களைக் கொண்டு வாங்க என்று சொல்லியிருக்கிறார்கள்.
“சொத்துப்பத்திரம் எல்லாம் கிடையாது சார். எனக்கு முன்னாடி நடிகர் பாக்யராஜ் இந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். அவருக்குப் பிறகு நான் வாடகைக்கு குடியிருக்கிறேன்.
இது என்னுடைய சொந்தவீடு இல்லை” என்று கூறியிருக்கிறார். இதை அதிகாரிகள், நம்பவே இல்லை. கிருஷ்ணப்ரியா, இளவரசி மற்றும் உறவினர்கள் ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களெல்லாம் கூடுதல் சிக்கல்களை உருவாக்கும்.
நண்பர்களிடமிருந்து வாக்குமூலம் வாங்கி விவேக்கை சிக்க வைக்கணும். ஜெயா டிவியை முடக்க வேண்டும். தினகரன், திவாகரன் எல்லாவற்றையும் விட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
குறிப்பாக, அரசியல் ரீதியாக திவாகரன் கூட்டத்தைக் கூட்டுவது உள்ளிட்ட எல்லா இடத்திலும் அவர்தான் வருகிறார். அவரை ஆக்டிவ் அரசியலிலிருந்து முடக்கதான் இந்தச் சோதனையின் முக்கிய கட்டமாக இருக்கிறது. இதை அனைத்தையும் எதிர்கொண்டு நாங்கள் வருவோம்” என்றனர்.
ஐ.டி அதிகாரிகள் தரப்பில், “இந்தச் சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியிருக்கிறது. பினாமி என்ற பெயரில் உள்ள சொத்துகள் யார் பெயரில் எப்போது வாங்கப்பட்டது என்பது குறித்த அனைத்து ரிப்போர்ட் (பஞ்சநாமா ரிப்போர்ட்) எங்கெங்கு கைப்பற்றப்பட்டிருக்கிறது என்ற அனைத்து விவரத்தையும் வைத்துக்கொண்டும் விவேக் யார் யார் பெயருக்கு எப்போது சொத்துகளை மாற்றினார்.
திவாகரன் சொத்துகளைப் பராமரிப்பது யார் என்பது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மிகத் துல்லியமாகக் குறிவைத்து இந்த ஆபரேஷன் நடந்திருக்கிறது.
இது தொடக்கம்தான். கார்டனின் முழு கஜானாவை கொண்டுவரும் வரை எங்கள் ரெய்டு ஓயப்போவதில்லை” என்கின்றனர்.
விவேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து அதிகாரிகள் கூறுகையில், என்ன விவேக் எதுக்குமே கேள்வி கேட்டால் இயல்பாகவே பதில் சொல்லிக்கொண்டிருங்கீங்க என்றோம். “சார், ஸ்கூல் படிக்கிற காலத்தில போயஸ்கார்டனில்தான் தங்கியிருந்தேன்.
அப்பா இறந்தபிறகு அம்மாவையும் அக்காவையும் நான் கைக்குழந்தையாக இருந்தபோது ஜெயலலிதா கூட்டிட்டு வந்துட்டாங்க. வீட்டில் இருக்கும்போது 91-96-ல் ஜெயலலிதாவின் கார்டன் வீட்டில் சோதனை நடந்தபோது நான் இங்கேதான் சுத்திக்கிட்டு கிடப்பேன்.
அதிகாரிகள் நாள் முழுவதும் சோதனை செஞ்சிக்கிட்டுயிருப்பாங்க. டையடால் நான் தூங்கிவிடுவேன்.
சோதனை முடிந்தபின்னர் அதிகாரிகள் என்னை எழுப்பிவிட்டு போவாங்க. இந்தமாதிரி பல ரெய்டுகளைப் பார்த்திருக்கிறேன். உங்கள் ரெய்டு பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கவில்லை” என்று அசராமல் கூறியதாகத் தெரிவித்தனர்.