– இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் – வையாபுரி, சிநேகன், ஆரவ், ஹரீஷ்
– சாணிக்குள் வொஷர்; கோல்டன் கார்ட் சவால்
வெளியேறுவோம் என்று தெரிந்தோ, அல்லது சவால்களை வீரத்துடன் செய்ய வேண்டும் என்று கமல் உத்வேகம் தந்ததாலோ என்னவோ காலையிலேயே எழுந்து வீட்டின் வாசலில் வீரமாக கோலம் போட்டுக் கொண்டிருந்தார் பிந்து.
பரவாயில்லை, அலங்கோலமாக இல்லாமல் சுமாராகவே இருந்தது. இது மட்டுமல்லாமல் வீடு பெருக்கவும் கற்றுக் கொள்கிறார் பிந்து.
பிக் பாஸ் வீட்டை விட்டுச் சென்றவுடன் விரைவில் ‘நல்ல செய்தியை’ எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது.
பிந்து ஆர்மி கலைக்கப்படும் நேரம் விரைவில் வரும் போல. “பாருங்க, குப்பைக்கு வலிக்காம பெருக்கறாங்க” என்று கிண்டலடித்தார் ஆரவ்.
“2 நிமிஷம் கதவு திறக்கும் போது நீ ஏன் போகலை” என்று பிந்துவிடம் விசாரித்தார் வையாபுரி. ‘ரொம்ப அசிங்கமா இருக்குமில்லையா?” என்றார் பிந்து.
“ஆமாம். ஃபேமிலியை பிரிஞ்சு இருந்தாலாவது அதைக் காரணம் காட்டி ஓடிடலாம். கெளரவமா இருக்கும். இப்பதான் ஃபேமிலியை கூட்டிட்டு வந்து காட்டினாங்க.
இப்ப அந்தக் காரணத்தையும் சொல்ல முடியாது. 75 நாள் இருந்துட்டு இப்ப ஓடி வந்துட்டியே-ன்னு கிண்டல் பண்ணுவாங்க” என்றார் வையாபுரி.
ஆக.. பிந்துவும் வையாபுரியும் ஏதோ அரைமனதாகத்தான் இங்கு இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
உடல்திறன் சார்ந்த சவால்களை இருவரும் வெறுக்கிறார்கள் என்று யூகிக்க முடிகிறது. எனவே இறுதிப் போட்டி வரை இவர்கள் தாக்குப் பிடிப்பது சிரமம்தான்.
பிந்து சமையல் செய்வதை லைவ் ரிலேவாக ஜாலியாக வர்ணித்தார் ஆரவ். கூடவே சிநேகனையும் ஓட்டினார்.
ஆரவ்வின் லூட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த சுஜா ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார்.
“ஆரவ்.. உங்களுக்கு நிறைய பெண் விசிறிகள் இருக்கிறார்களாமே? அவங்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?” என்று பதிலுக்கு கலாய்த்தார் பிந்து.
“எப்ப பார்க்கலாம்னு வெயிட் பண்றேன்” என்ற ஆரவ்வின் கண்களில் பல்பு எரிந்தது. பல்பு வாங்காமல் இருந்தால் சரி.