பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவின் தலையீட்டினால் உலகைக் காணும் வரம் பெற்ற பிறப்பிலேயே தனது கண் பார்வையை இழந்த கலென்பெந்துனுவெவ, பலுகொல்லாகம ஜீவந்த ரத்நாயக்க என்ற சிறுவன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, இன்று (28) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து சந்தித்தார்.
13 வயதான ஜீவந்த ரத்நாயக்க என்ற சிறுவன் தனக்கு பார்வை வேண்டி சமூக வலைத்தளங்களில் எழுப்பிய குரல், ரோஹித ராஜபக்ஷவை சென்றடைய, அவர் அதனை தனது தாயான, பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
அதற்கமைய குழந்தைகள் மீது எப்போதும் பரிவும் பாசமும் கொண்டவராக விளங்கும் பிரதமரின் பாரியார், அச்சிறுவனின் ஏக்கத்தை தீர்க்க முன்வந்தார்.
முதலில் சிறுவனை கொழும்புக்கு அழைத்து நாட்டின் சிறந்த மற்றும் புகழ்பெற்ற கண் மருத்துவரிடம் அவரை சிகிச்சைக்காக அனுமதித்து, அச்சிறுவனுக்கு பல பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
அப்பரிசோதனைகளுக்கமைய கண் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாது அச்சிறுவனின் ஒரு கண்ணில் பார்வை பெற முடியும் என்ற விசேட வைத்திய நிபுணரின் பரிந்துரைக்கமைய சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கமைய ஷிரந்தி ராஜபக்ஷ, அனைத்து சுமைகளையும் பொறுப்பேற்று, பல சந்தர்ப்பங்களில் அச்சிறுவனை கொழும்பிற்கு அழைத்து தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவ்வாறே ஜீவந்த ரத்நாயக்க சிறுவனுக்கு உலகை காணும் வரம் கிடைத்தது.
பிரதமரை சந்திப்பதற்காக வருகைத்தந்த தனது புதல்வர் குறித்து அவரது தந்தை சுகதபால கருத்துத் தெரிவிக்கையில்,
எனது மகனுக்கு பிறப்பிலேயே பார்வை இல்லை. அதனால் எனது மகன் மிகுந்த இன்னல்களுக்கு முகங்கொடுத்தார். எமது மகனின் கண் பார்வைக்காக சிகிச்சை அளிக்கும் அளவிற்கு எம்மிடம் செல்வம் இல்லை.
இவ்வாறான நிலையிலேயே ஷிரந்தி ராஜபக்ஷ, எனது மகனுக்கு சிகிச்சை அளிக்க உதவுவதற்கு முன்வந்தார். அவர் கொழும்பில் விசேட கண் வைத்திய நிபுணர் ஒருவரிடம் எனது மகனை சிகிச்சைக்கு அனுமதித்தார்.
கூறுவதற்கே மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது எனது மகனுக்கு பார்வை கிடைத்துவிட்டது. சைக்கிள் ஓடுகிறார். புத்தகங்களை வாசிக்கிறார். தற்போது அவர் தனது வேலைகளை தானே செய்துக் கொள்கிறார்.
எனது மகன் அனுராதபுரம் ரியன்சி அழகியவன்ன விசேட பாடசாலையில் கல்வி பயில்கிறார். இது மிகவும் உன்னதமான புண்ணிய காரியமாகும் என சுகதபால குறிப்பிட்டார்.