இலங்கையில் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடிப் பெற்ற வெற்றியினை சீரழிக்கும் முயற்சியில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன.
பயங்கர வாதத்திற்கு உயிர்கொடுக்க இந்த அமைப்புக்கள் முனைகின்றன. இந்த நடவடிக்கையானது எமது நாட்டில் உள்ள தமிழர் களுக்கு செய்யும் அநீதியாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
இன்று நாட்டின் ஜனநாயகம் பற்றி பேசுவோர் அதற்கு முன்பிருந்த நிலைமையை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்களை கொன்றுகுவித்து அடிமைகளாக நடத்திய பிரபாகரனுக்கு மலர்வளையம் வைப்பதற்கு பலர் முயற்சிக்கின்றனர்.
இத்தகையவர்கள் பயங்கரவாதத் தலைவனின் உத்தரவால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான சிங்கள, தமிழ், முஸ்லிம் பிள்ளைகளின் கல்லறைகளுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த முன்வருவது இல்லை தமிழ்த் தலைவர்களையும் நினைவு கூர எவரும் முன்வருவதில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
யுத்த வெற்றியின் 5 ஆவது ஆண்டு வெற்றிவிழா நேற்று மாத்தறை நகரில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் குறியதாவது;
நாம் பெற்றது யுத்த வெற்றியல்ல சமாதானத்தின் வெற்றி. அந்த மாபெரும் வெற்றியை எப்போதும் நினைவு கூர வேண்டியது அவசியமாகும். வெற்றி பெற்ற சமாதானத்தை பாதுகாப்பதே யுத்தத்தில் தாய்நாட்டிற்காக உயிர்கொடுத்த படையினருக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும்.
அன்று போல் இன்றும் இன்று போல் நாளையும் நாளையை போன்று எதிர்காலத்திலும் அனைத்து சவால்களுக்கும் அச்சமின்றி முகம் கொடுத்து வெற்றி பெறுவோம்.
நாட்டின் பாரிய பிரச்சினைக்கு 4 வருடங்களில் தீர்த்து வைத்த நாம் கைவிடப்பட்ட அபிவிருத்திகளையும் நீண்ட கால தொலைநோக்குடன் முன்னெடுப்போம்.
நாட்டில் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் நிலை நிறுத்துவதற்கு அரசாங்கம் செய்த அர்ப்பணிப்புக்களை சிறிதாக மதித்து விட முடியாது. இன்று தேசியக் கொடியை உயர்த்துவது போல் இந்த நாட்டையும் நாம் உயர்த்துவோம்.
இன்று நாட்டின் ஜனநாயகம் பற்றி பேசுவோர் அதற்கு முன்பு நாடிருந்த நிலைமையை நினைத்துப் பார்க்க வேண்டும்.
2009 ஆம் ஆண்டில் இன்று போல் ஒரு தினத்தில் தான் இலங்கை தாய்நாட்டுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த நாளாகும். சமாதானம் உண்மையான ஜனநாயகம், சுதந்திரம் கிடைத்ததும் இன்றைய நாளில் ஆகும்.
இந்த மாபெரும் வெற்றியை பெற்றுக்கொள்வதற்காக கை கால்கள் கண்களை இழந்த எமது படை வீரர்கள் இந்த அணிவகுப்பில் முதன்மையாக செல்கின்றனர்.
அத்தோடு மனிதாபிமான நடவடிக்கைகளில் பங்களிப்பு வழங்கிய ஏனைய படையதிகாரிகளும் இவ் அணிவகுப்பில் செல்கின்றனர்.
கொடூரமான பயங்கரவாதியை தோல்வியடையச் செய்வதற்காக பாவிக்கப்பட்ட ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது எமக்கு கௌரவத்தை வழங்கும் நிகழ்வாகும்.
அத்தோடு இந்த வெற்றிக்கு ஆசீர்வாதம் வழங்கிய அனைத்து மதத் தலைவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
பல தசாப்தங்களாக இந்த நாட்டை ஆட்டிப் படைத்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு 2005இல் மக்கள் எனக்கு ஆணை வழங்கினர். அதற்கமைய நாட்டின் தலைவனாகவும் முப்படைகளின் தளபதியாகவும் எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது இப் பிரச்சினையை தீர்த்து மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றினேன்.
மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றியதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தல் பொதுத்தேர்தல் பிரதேச சபை தேர்தல் உட்பட அனைத்திலும் எனது அரசாங்கத்திற்கு மக்கள் வெற்றிகளை பெற்றுக் கொடுத்தனர்.
எனவே அன்று போல் இன்றும் இன்று போல் நாளையும் நாளையைப் போல் எதிர்காலத்திலும் நாடு எதிர்கொண்டுள்ள அனைத்து சவால்களுக்கும் அச்சமின்றி சரியான வழியில் முகம் கொடுத்து வெற்றிகளை பெற்றுக்கொடுப்பேன் என்பதை இங்கு அச்சமின்றி கூறிக்கொள்கிறேன்.
முப்பது வருடங்களுக்கு மேலாக இந்நாட்டை ஆட்டிப்படைத்த பாரிய பிரச்சினையான பயங்கரவாதத்திற்கு நான்கு வருடங்களில் தீர்வைக் கண்டோம்.
இதன் பின்னர் கைவிடப்பட்ட அபிவிருத்திகளை நீண்ட கால தொலை நோக்குடன் முன்னெடுத்துச் செல்கிறோம்.
வடக்கை விடுவிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் கிழக்கில் அபிவிருத்திகளை மேற்கொண்டோம். தெற்கிலும் முன்னெடுத்தோம்.
இதனால் வடக்கை விடுவித்த பின்னர் அபிவிருத்தி செய்யப்பட்ட பிரதேசங்களூடாகவே தமது ஊர்களுக்கு வந்து சேர்ந்தனர்.
யுத்தத்தில் பங்கு கொண்ட முப்படையினரிடமும் பொலிஸாரிடமும் நான் ஒன்றை கேட்க விரும்புகின்றேன். யுத்த காலத்தில் நீங்கள் கண்ட ???? ??????????அதிவேக நெடுஞ்சாலைகள் காபட் வீதிகள், கொங்கிறீட் வீதிகள் கிராமிய அடிப்படை வசதிகள் என அபிவிருத்திகளுக்காக பல மில்லியன்கள் செலவு செய்யப்பட்டன.
வைத்தியசாலைகள் குடிநீர் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நூற்றுக்கு 96 வீத மக்களுக்கு மின்சாரமும் வழங்கப்பட்டுள்ளது. புதிய பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகளில் தொழில்நுட்ப கல்விகளை வழங்குகின்றது. வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்குமே சொந்தமானதாகும்.
அதேபோன்று இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த சுதந்திரத்தை வழங்க நாம் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களை சிறியதாக மதிப்பிடக்கூடாது.
அத்தோடு பல தசாப்தங்களுக்கு பின்னர் வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயகத்தை உரிமைகளை உறுதிப்படுத்தினோம். எமது காலத்தில் ஊடகங்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. யுத்தக் காலத்திலும் ஊடகவியலாளர்கள் களத்திற்கு நேரடியாக செல்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இன்றும் ஊடகச் சுதந்திரம் உள்ளது. அரசாங்கத்தை விமர்சனம் செய்வது தடுக்கப்படவில்லை.
இலங்கையின் ஜனநாயகம் பற்றி பேசுவோம் அதற்கு முன்னர் இருந்த நிலைமையை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று எமது நாட்டின் மீது உலகம் நம்பிக்கை வைத்துள்ளது. வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் தொகை அதிகரித்துள்ளது.
சர்வதேச விளையாட்டுப்போட்டிகள் சர்வதேச மாநாடுகள் அனைத்தும் இன்று இடம்பெறுகின்றன. ஆனால் அன்று இவ்வாறான நிகழ்ச்சிகளை நடத்துவதை பயங்கரவாதிகளே தீர்மானித்துள்ளனர்.
எமக்கு மறைப்பதற்கு எதுவும் இல்லை. எனவே உலகிற்கு எமது கதவுகளை திறந்து விட்டோம். ஆனால் சிலர் இதனை எமக்கெதிராக பிழையாக பயன்படுத்துகின்றனர்.
இன்று தேசியக் கொடியை உயர்த்தியது போன்றும் நாட்டையும் உயர்த்துவோம். சிங்கள முஸ்லிம் தமிழ் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து அடிமைகளாக நடத்திய பிரபாகரனுக்கு மலர் வளையம் வைப்பதற்கு பலர் முயற்சிக்கின்றார்கள்.
ஆனால், அவ்வாறானவர்களுக்கு பயங்கரவாத தலைவனின் உத்தரவால் கொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான சிங்கள தமிழ் முஸ்லிம் பிள்ளைகளின் கல்லறைகளுக்கு மலர் வலயம் வைத்து அஞ்சலி செலுத்த முன்வருவதில்லை.
தமிழ் மக்களின் தலைவர்களான துரையப்பா, அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், ரவிராஜ், கதிர்காமர், சாம் தம்பிமுத்து உட்பட கூட்டமைப்பு எம்.பி. சித்தார்த்தனின் தந்தை பீ. தர்மலிங்கம் உட்பட தமிழ் தலைவர்களை நினைவு கூர எவரும் முன்வருவதில்லை.
இவர்களும் கொடூரமான பயங்கரவாதத்திற்கு இரையானவர்கள். சமாதானத்தை மதிப்போர் இவர்களை தான் நினைவுகூர வேண்டும். நைஜீரியாவில் அண்மையில் பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டனர். இதற்கு உலகின் ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தின.
ஆனால் எமது நாட்டில் பயங்கரமாக பிள்ளைகளை பயங்கரவாதிகள் கடத்தினர். அவர்களை மீட்டெடுத்து பெற்றோரிடம் கையளித்தோம். பாடசாலைகளுக்கும் அனுப்பினோம்.
ஆனால், இது தொடர்பாக சில வெளிநாடுகள் பேசுவதில்லை. குருடர்களாக ஊமைகளாக செவிடர்களாக உள்ளனர். அவர்கள் நாம் பெற்றுக்கொண்ட மாபெரும் வெற்றியை நினைவு கூருவதை எதிர்க்கின்றனர்.
இது யுத்த வெற்றியல்ல. சமாதானத்தின் வெற்றி. எமது நாட்டில் சமாதானத்தை நிலைநாட்ட வெளிநாடுகளிலிருந்து படையினர் வரவில்லை. மனிதக் கேடயங்களாக பயங்கரவாதிகளால் பணயம் வைக்கப்பட்டிருந்த மக்களை காப்பற்றியது எமது படையினர்.
நன்றியுணர்வுள்ள இனம் என்ற ரீதியிலும் மனிதத்துவத்தின் மதிப்பை உணர்ந்த இனம் என்ற ரீதியிலும் மாபெரும் வெற்றியை நினைவு கூர வேண்டியது எமது கடமையாகும்.
எவர் எதிர்த்தாலும் எவர் கலந்து கொள்ளா விட்டாலும் நாட்டுக்கே சொந்தமான இந்த மாபெரும் வெற்றியை இந்நாட்டில் தொடர்ந்தும் நினைவு கூர வேண்டும்.
இன்று புலம்பெயர் தமிழர்கள் இணைந்து பயங்கரவாதத்திற்கு உயிர் கொடுக்க முனைகின்றனர். இது இந்நாட்டிலுள்ள தமிழர்களுக்கு செய்யும் அநீதியாகும். ஒரு சில சிறிய குழுக்களுக்கு கிடைக்கும் டொலர்களால் நாட்டிற்கு அழிவை ஏற்படுத்துகின்றனர்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சிறந்த இடம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவாகும். இன்று அதனை ஏற்படுத்தியுள்ளோம். அன்று பாதுகாப்பிற்காக தமிழ் மக்கள் வடக்கிலிருந்து தெற்கிற்கே வந்தனர்.
இன்று 58 வீதம் தமிழ் மக்கள் வடக்கிற்கு வெளியே வாழ்கின்றனர். இனங்களிடையே இணக்கப்பாடு புரிந்துணர்வு ஏற்படும் அளவிற்கு தீர்மானங்களை இலகுவாக எடுக்க முடியும். இதற்கு இடமளியுங்கள்.
யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் அடங்கிய காணொளி