தனித்து ஒரு அறைக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கப்பட்ட 2 மாதம் முதல் 6 வயதுக் குழந்தை வரையான நான்கு பிள்ளைகள் சமுகசேவையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பிறந்த நாள் முதல் லாக்கூர்நெவ்விலுள்ள உள்ள ஒரு தொடர்மாடிக் கட்டடத்திலுள்ள ஒரு வீடடில் ஒரு அறைக்குள்ளேயே வைத்து வளர்கப்பட்டுள்ளனர்.
(Dans cet appartement de La Courneuve (Seine-Saint-Denis), les services sociaux ont découvert des enfants qui vivaient reclus dans une seule pièce)
இந்தியாவின் புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தமிழக் குடும்பத்தினரே இவ்வாறு தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்பாது வளர்த்துள்ளனர்.
ஜனவரி மாதத்தில் பிறந்த ஒரு கைக்குழந்தைதையை மருத்துவப் பரிசோதனைக்காக இந்தப் பெற்றோர் Seine-Saint-Denis இலுள்ள ஒரு வைத்தியமையத்திற்குக் கொண்டு சென்றபோதே வைத்தியர்கள் சமூகசேவையினர்க்கும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கும் அறிவித்துள்ளனர்.
அங்கு பரிசோதனைக்காக வந்த குழந்தை சில நாட்களிற்கு முன்னரே பிறந்திருந்தது என்றும் அந்தக் குழந்தையின் பிறப்பு எந்த வைத்தியசாலையிலும் பதிவு செய்ப்படாமல் இருந்தமையே வைத்தியர்களிற்குச் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் குடும்பத்தில் ஆறரை வயது, ஐந்தரை வயது மற்றும் இரண்டு வயதுடைய ஆண்குழந்தைகளும் மூன்று மாதங்களாகும் ஒரு பெண்குழந்தையும் உண்டு.
இதில் இரு பிள்ளைகள் பிறப்பிலேயே ஊனமுற்ற குழந்தைகளாகப் பிறந்துள்ளனர். இந்தக் குழந்தைகளிற்கான எந்த விதமான அரச பதிவுகளும் செய்யப்பட்டிருக்கவில்லை.
அவர்களிற்கான தடுப்பு ஊசிகள் எதுவும் போடப்பட்டிருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இவர்கள் யாரும் பாடசாலைகளில் சேர்க்கப்பட்டும் இருக்கவில்லை.
இந்தக் குழந்தைகள் யாரும் எதற்காகவும் எந்த மருத்துவரிடமும் கொண்டு செல்லப்பட்டிருக்கவில்லை. அதை விட மோசமாக இந்தக் குழந்தைகள் யாரும் அந்த வீட்டை விட்டு வெளியே வந்ததே இல்லை. அரசாங்கத்தின் சமூக சேவைகள் பிரிவு இந்தக் குழந்தைகளைப் பொறுப்பேற்றதுடன் காவற்துறையினர் 33 வயதுடைய தந்தையையும் 27 வயதுடைய தாயாரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.