நாடுபூராகவும் பிரதேசங்களில் 65 பெண்களை ஏமாற்றி 10 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை பெற்று மோசடிகளில் ஈடுபட்டுவந்த 38 வயதுடைய நபரொருவர் யக்கலமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் , பொலிஸ் அதிகாரிகள் , வர்த்தகர்கள் உள்ளிட்டோருடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளை பேணியுள்ள இந்த நபர் பல வருடங்களாக சூட்சுமான முறையில் பெண்கள் பலரை ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் நாடுபூராகவும் 65 பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளதுடன் 40பேருடன் கணவன் மனைவி போன்று வாழ்க்கையும் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த பெண்களிடையே திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களும் இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் தொடர்பாக கிடைக்கப் பெற்றிருந்த பல முறைப்பாடுகளை அடிப்படையாக கொண்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த திறந்த பிடியாணை உத்தரவுக்கமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.