நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராகும் தகுதியை உடையவர் யார் என முழு நாடுமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க மற்றும் …..
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகனும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ ஆகியோரே அதற்குத் தகுதியானவர்களாகக் காணப்படுகின்றார்கள் என ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக கூறியுள்ளார்.
தமிழருக்கு சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திவரும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை பொது எதிர்க்கட்சி வேட்பாளராக தெரிவது மேலும் முரண்பாடுகளையே தோற்றுவிக் கும்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மாதுலுவாவே சோபித தேரர் ஆகியோரில் யாராவதொருவர் வேட்பாளர் பதவியை பிரநிதிப்படுத்துவதென்பது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் பெருவெற்றி பெறுவதற்கு வழிசமைப்பதாய் அமைந்து விடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யாரை முன்நிலைப்படுத்துவது என அரசியல் தளத்தின் திரைமறைவில் பல்வேறு பிரத்தியேகச் சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள் கூட்டு முயற்சிகள், நடைபெற்று வருகின்றன.
அத்துடன் எதிர்க்கட்சித் தலமைகள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதையே பிரதானமாக பிரஸ்தாபித்துவரும் நிலையில் குறித்த விடங்கள் தொடர்பில் முன்னாள் ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயத்திலக்க கேசரிக்கு பிரத்தியேகமாக கருத்து வௌியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான முன் ஆயத்தங்களை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக பல கலந்துரையாடல்களையும் பிரத்தியேகச் சந்திப்புக்களையும் நடத்திவருகின்றன.
உண்மையில் நாட்டில் பிரதான எதிர்கட்சி பலமில்லாதவொரு நிலையில் பொது எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவரை நியமனம் செய்வதானது சிறந்ததொரு முடிவு.
குறிப்பாக மத்தியில் குடும்பமொன்றின் பிடியில் இருக்கும் அதிகாரங்களை குறைப்பதற்கான ஒரு உபாயமாக இது அமையும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.
ஆனால் பொதுவேட்பாளர் நியமனம் குறித்து பேசப்படும் பொது தற்போதுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்ற வேண்டும் என்ற விடயத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பிரஸ்தாபிக்கப்படுகின்றது.
உண்மையில் ஜனாதிபதி முறையை மாற்றுமாறு யாரும் கோரவில்லை. ஜனாதிபதி முறையை மாற்ற வேண்டுமாயின் முதலில் பொது மக்களின் கருத்துக்களை கேட்டறியவேண்டும்.
அதன் பின்னர் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதனையடுத்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்பட வேண்டும். அதன் மூலமே ஜனாதிபதி முறையை மாற்றமுடியும்.
அதனை விடுத்து ஜனாதிபதியாகியவுடன் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவோம் என பிரஸ்தாபிப்பது கேலிக்குரியவிடயமாகவே உள்ளது. தற்போது மக்கள் பிரச்சினைகளும், மதவாதமற்ற இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமுமே முக்கியமான விடயமாகக் காணப்படுகின்றது.
உதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொண்டால் நீண்டகாலமாக மத்தியில் ஆட்சியில் நீடித்து வந்த காங்கிரஸிற்கு எதிராக மோடியின் அலை மேலெழுந்திருக்கின்றது.
அதுபோன்று 2005ஆம் ஆண்டிலிருந்து ஜனாதிபதி பதவியை கைப்பற்றி பாராளுமன்றத்தில் அதிகாரம் பெற்றிருக்கும் மகிந்த ராஜபக்ஷவின் குடும்ப அதிகாரத்தை ஒழிப்பதற்கு வலுவான ஒரு எதிர்ச் சக்தி வேண்டும்.
அவ்வாறானதொரு சக்தி பொதுவேட்பாளராக நியமனம் பெறலாம் என கருதப்படுபவர்களிடம் காணப்படுகின்றதா என்பதை ஆராய்வது அவசியமாகும்.
அநுரகுமார
மக்கள் விடுதலை முன்னிணியின் புதிய தலைவராக நியமனம் பெற்றிக்கும் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு பொதுவேட்பாளராகும் தகுதி காணப்படுகின்றது.
ஆனால் அக்கட்சி ஜனாதிபதி முறைமை தொடர்பில் பிரசாரம் செய்வதை முற்றாக நிறுத்த வேண்டும். அநுர குமார பதவியேற்றதன் பின்னர் நடைபெற்ற மேல், தென் மாகாணத் தேர்தல்களில் அக்கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.
ஆகவே அத்தலைமைக்கு மக்கள் ஆதரவளிக்கின்றார்கள் என்பது வௌிப்பட்டுள்ளது. மதவாதம், இனவாதம் தொடர்பில் அக்கட்சின் கடுமையான கருத்துக்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் பொதுமக்களுக்கு தேவையானவை தொடர்பிலேயே கருத்தாழமாக பேசுகின்றார். அத்துடன் மக்கள் மனநிலையறிந்து செயற்படும் ஒருவராக காணப்படுவதால் மக்கள் சக்தியை வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.
அத்துடன் மூவின மக்களையும் சமமாக மதிக்கும் போக்குடைய சதாரண கொள்கைகள் அக்கட்சியில் காணப்படுகின்றமையும் சிறப்பானதொருவிடயம்.
வரலாற்றை எடுத்து பார்க்கையில் பிடல் கஸ்ரோ, லெனின், லூயி போன்றவர்கள் ஜனாதிபதிகளாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் கடந்த காலங்களில் புரட்சி நிலைமைகளை ஏற்படுத்தியதைப்போன்று இங்கு புரட்சிகர கருத்துக்களை வலுப்படுத்த வேண்டும்
சஜித் பிரேமதாஸ
சஜித் பிரேமதாஸவைப் பொறுத்தவரையில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் என்பதற்கு அப்பால் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மகிந்த ராஜபக்ஷவுடன் 2000ஆம் ஆண்டிலிருந்து நேரடியாக போட்டிபோட்டுக் கொண்டுவரும் ஒருவராக காணப்படுகின்றார்.
ஆகவே மகிந்தராஜபக்ஷவுடன் போட்டிபோடும் அனுபவ முதிர்ச்சி அவரிடம் மட்டுமே காணப்படுகின்றது. அத்துடன் கடந்த தென்மாக தேர்தலில் ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியை தனது கடுமையான முயற்சியால் அதிகரித்துக் காட்டியுள்ளதோடு தனது மக்கள் சக்தியையும் வௌிப்படுத்தியுள்ளார்.
ஆகவே நாடளாவிய ரீதியில் அவரால் குறிப்பிடத்தக்களவு வாக்குவங்கியை தக்கவைத்துக்கொள்ள முடியும். குறிப்பாக சஜித் பொதுவேட்பாளராகும் பட்சத்தில் நூற்றுக்கு 35சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
மேலும் கட்சியின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் சஜித்திற்கு தலைமைப்பதவியை வழங்க மறுத்து வருவதானது அவர் பொதுவேட்பராள நியமனம் பெறுவதற்கு பிரதான முட்டுக்கட்டையாக இருக்கின்றது.
ரணில் விக்கிரமசிங்க
ரணில் விக்கிரம சிங்கவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொதுவானதொரு தலைவராகவே கட்சியில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளாதநிலையில் பொது வேட்பாளாக நியமித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?
1994ஆம் ஆண்டிலிருந்து எதிர்க்கட்சியத்தலைவராக பதவிவகித்து வரும் இவர் தொடர்ந்து தோல்விகளைச் சந்திருக்கின்ற நிலையிலும்,கட்சிக்குள் ஏற்பட்டு முரண்பாடுகள் வலுப்பெற்றுக்கொண்டிருக்கும் தருணத்திலும் தலைவர் என்ற அதிகாரத்தை தக்கவைப்பதற்காகவே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றமை வௌிச்சமாகியுள்ளது.
தமது கட்சியையெ ஒன்றுபடுத்தி கட்டமைக்கமுடியாதிருக்கும் ஒருவரால் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருவரிசையில் ஒன்றிணைக் முடியும் எனக் கருதமுடியாது
சந்திரிக்கா
முன்னதாக இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்த சந்திரிக்கா யுத்தத்தை வெற்றி கொள்ள முடியாது ஆட்சியிலிருந்து சென்றிருந்தார். ஆகவே யுத்த வெற்றியுடன் ஆட்சியைப் தனதாக்கியிருக்கும் மகிந்த ராஜபக்ஷவுடன் போட்டியிட்டால் நூற்றுக்கு 20சதவீதமான வாக்குகளைத் தான் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
மேலும் மூவின மக்களின் மனங்களையும் வெற்றி கொள்ள முடியாது போன சந்திரிக்காவினால் மீண்டும் சிறந்தவொரு எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும் என கருதிவிட முடியாது.
சோபித தேரர்
மதகுருவாக இருக்கும் ஒருவரால் நாட்டை ஆட்சி செய்ய முடியுமா? 6மதங்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்ற முடியும் எனக் கூறுகின்றார். உண்மையில் சோபித தேரர் பொதுவேட்பாளராகும் பட்சத்தில் அவரால் இரண்டு முதல் மூன்று இலட்சம் வரையிலான வாக்குகளையே பெறமுடியும். அத்துடன் அவரது கூற்றுக்கள் யதார்த்தத்துடன் தொடர்பற்றவையாக காணப்படுகின்றன.
சி.வி.விக்கினேஸ்வரன்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழர்களுக்கு சுயநிர்ண உரிமை வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். அவ்வாறானதொருவரை பொதுவேட்பாளராக நியமிப்பதானது மேலும் பல முரண்பாடுகளை தோற்றுவிக்கும்.
பொன்சேகா
பொது வேட்பாளராகும் தகுதி தனக்கு மட்டுமுள்ளதாக பொன்சேகா குறிப்பிடுகின்றார். நிறைவேற்று அதிகாரமுறை இருக்க வேண்டும் எனக் குறிப்பிடும் இவர் அதிகாரங்களில் குறைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் கூறுகின்றார்.
கடந்த தேர்தல்களில் இக்கட்சிக்கு ஏற்பட்ட வாக்குவங்கி அதிகரிப்பை வைத்து தேசியளவில் வெற்றிபெற்றுவிடமுடியும் எனக் கணிப்பது தவறானதாகும்.
வெற்றிபெறுவது உறுதி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவது உறுதி. ஆனால் ரணில்விக்கிரமசிங்க, சந்திரிகா, சோபிததேரர் ஆகிய மூவரில் ஒருவர் வேட்பாளராகும் போது மகிந்த ராஜபக்ஷ பெருவெற்றிபெற்றுவிடுவார்.
இவர்கள் முன்வைக்கும் ஜனாதிபதி முறை ஒழிப்பு தொடர்பான கூற்று கேலிக்குரியதாக இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் வாக்குவங்கியை குறைத்து எச்சரிக்கை சமிக்ஞையை வௌிப்படுத்த வேண்டியதே முக்கியமானதாகவுள்ளது.
ஜே.வி.பியின் அநுரகுமார திஸாநாயக்க அல்லது சஜித் பிரேமதாஸவை பொதுவேட்பாளராக களமிறக்குவதன் ஊடாகவே அச்செயற்பாட்டை மேற்கொள்ள முடியும். அதன் மூலமே பாராளுமன்றத் தேர்தலில் சுதந்திர முன்னணிக்கு காணப்படும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை குறைவடையச் செய்யலாம்.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அதிகார பலம் மேலும் ஓங்குவதை தடுத்து நிறுத்த முடியும். தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்பதற்கு பதிலாக அரசுக்கு பாராளுமன்றத்தில் காணப்படும் மூன்றிரண்டு பெரும்பான்மையினை இல்லாதுசெய்ய வேண்டும் என்பதே முக்கியமானதொன்றாக காணப்படுகின்றது.
எனினும் இந்தியாவில் நீண்டகாலமாக மத்தியில் இருந்த அரசாங்கத்திற்கு எதிராக மோடி என்ற தனிநபர் ஏற்படுத்திய மாற்றத்தை உதாரணமாக கொள்ளவேண்டியது மிகமிக முக்கியமானதொரு விடயமாகவுள்ளது என்றார்.