மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் ‘நினைவு இல்லமாக’ மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (17-08-2017) அறிவித்திருந்தார்.
இந்தச் செய்தி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், ஒருவரைத் தவிர… அவர்தான் ஜெ-வின் அண்ணன் மகளான தீபா.
“ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்பட வேண்டும்” என்று அடிக்கடி சொல்லிவந்த தீபா… தற்போது, “வேதா நிலையம் தனக்குத்தான் சொந்தம்.
அதை நினைவு இல்லமாக மாற்ற யாருக்கும் உரிமை கிடையாது” என்று கோபத்தின் உச்சத்துக்கே சென்று பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் மக்களுக்குப் பரிச்சயமான தீபா, ஜெயலலிதாவின் மீது மக்கள் வைத்த செல்வாக்கு அனைத்தும் தனக்கு இருக்கிறது என நினைத்து, ‘எம்.ஜி.ஆர்.
அம்மா தீபா பேரவை’ என்ற கட்சியைத் தொடங்கினார். அதன்பின் தொடர்ச்சியாகக் கட்சியிலும், சொந்த வாழ்விலும் அவர் ஏகப்பட்ட பிரச்னைகளைச் சந்தித்துவந்தார்.
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி சொத்து விவகாரம் தொடர்பாகத் தனது சகோதரன் தீபக்குடன் பேச்சுவார்த்தை நடத்த போயஸ் காரடனுக்குச் சென்றார்.
அங்கு தீபா, தீபக், அவருடைய (தீபா) கணவர் மாதவன், அவருடைய (தீபா) ஓட்டுநர் ராஜா ஆகியோரின் நடவடிக்கைகளால் தீபாவின் அரசியலும் வீதிக்கு வந்தது.
அதுவரை, தனது அத்தையின் மரணத்தில் சந்தேகம் இல்லை என உறுதியாகப் பலமுறை சொல்லிவந்தவர், முதன்முதலாக அங்கு நடைபெற்ற நிகழ்வுகளுக்குப் பிறகு, “எனது அத்தையைப் (ஜெ-வை) பணத்துக்கு ஆசைப்பட்டுக் கொன்றுவிட்டார்கள்.
அதற்கு எனது தம்பியும் (தீபக்) உடந்தை” என்று பத்திரிகையாளர்களிடம் சொன்னார்.
அதேபோல, தீபா அரசியலுக்கு வருவதற்கு முன்பும் சரி, அரசியலுக்கு வந்த ஆரம்ப காலகட்டங்களிலும் சரி, “போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றவேண்டும்” என்று பலமுறை சொல்லிவந்தார்.
இந்த நிலையில் நேற்று, “ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும்” என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இது, தீபாவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக அவர், “வேதா இல்லம் எனக்குச் சொந்தமானது. அதை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.
ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு பூர்விக வாரிசு நானும், என் சகோதரனும்தான். எங்களைக் கேட்காமல் அவர்கள் எப்படி முடிவு எடுக்கலாம்? இது, எல்லாம் அவர்களின் பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நடத்தப்படும் நாடகம்
சிறுவயது முதலே அந்த வீட்டில் நான் ஓடியாடி விளையாடியவள். என் அத்தையிடம் சந்தோஷமாக அந்த வீட்டில் வாழ்ந்தவள். வாரிசு என்ற முறையில் என் அத்தையின் சொத்தில் எனக்குத்தான் முழு உரிமையும் இருக்கிறது” என்றவரிடம், “ஆரம்பக் காலம் முதலே நீங்கள்தானே வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தீர்கள்.
ஆனால், இப்போது அதை நினைவு இல்லமாக மாற்றக் கூடாது. அந்த வீடு எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறீர்களே” எனப் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “ஆமாம். அந்த வீடு எனக்குத்தான் சொந்தம் என்பதால்ச்தான் அப்படிக் கூறுகிறேன்.
பழனிசாமி கொண்டுவந்த அறிவிப்பை எதிர்த்து நான் நீதிமன்றத்துக்குச் செல்வேன். சட்டப்படி வேதா நிலையத்தை மீட்பேன்” என்றார்.